பொதுக் காலம் 25ஆம் வாரம்
26.09.2024 - வியாழக் கிழமை
"ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராயிருக்கட்டும்; அறிவுத் தெளிவுடையவர்களாயிருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழுமையாக எதிர்நோக்கி இருங்கள் - 1பேதுரு 1:13
குழப்பம், தெளிவற்ற தன்மை, புரிந்து கொள்ளாமல் இருப்பது இவையெல்லாம் நம்மை நேரிய பாதையில் இருந்து தடுமாற்றம் நிறைந்த பாதைக்கு அழைத்துச் செல்கிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் குழப்பமான வாழ்வைக் கொண்டு நாம் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய முடியாது.
குழப்பங்கள் தெளிவு பெற வேண்டும் தடுமாற்றங்கள் சரி செய்யப்பட வேண்டும். ஒருவர் மற்றவரை அல்லது ஒருவர் மற்றொன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
புரிந்து கொள்ளாத வரை குழப்பம் தெளிவு பெறுவது இல்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:7-9) ஏரோது மன்னன் குழப்பமுற்று இருந்தான். அவனுக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கு காரணம் அவன் செய்த தவறு. திருமுழுக்கு யோவானின் தலையை வெட்ட செய்தனால் அவன் மனம் குழம்பி போய் இருந்தது. (ஏரோது தான் செய்தது தவறு என்பதை புரிந்து கொள்ளாமல் இருந்தான்).
ஒருவேளை இறந்த யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டாரோ என்று இயேசுவைப் பார்த்து அவன் சந்தேகப்பட்டான். எனவே இயேசுவைக் காண வாய்ப்பு தேடினான்.
தவறுகள் சரிசெய்யப்பட்டால் நமக்குள் இருக்கும் குழப்பம் தெளிவு பெறும்.
நம்முடைய வாழ்க்கையில் நாம் பலவற்றை குறித்து கலக்கம் கொள்கிறோம். ஏதாவது ஒன்று அல்லது யாராவது ஒருவர் நம்மை குழப்பிக் கொண்டே இருக்கிறார். எதைச் சொல்வது? எதை பேசுவது? எப்படி நடந்து கொள்வது? என்பது நம்முடைய வாழ்க்கையின் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
ஒருவேளை எது சரியோ, அதை சொல்லி விட்டால் குழப்பம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம், தெளிவு பெற கேள்விகளை முன்வைத்தால் பிரச்சனை வந்து விடுமோ என்ற கலக்கம், இப்படிப்பட்ட குழப்பமான சூழ்நிலையில்தான் நம்முடைய வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. (நம்முடைய வாழ்க்கையில் நாம் ஒருபோதும் மற்றவர்களை திருப்திபடுத்த முடியாது).
ஆனால் நாம் செய்த தவறுகளை நாம் தான் திருத்திக் கொள்ள வேண்டும்.
ஏரோது இயேசுவைக் காண வாய்ப்பு தேடியதன் நோக்கம் இயேசு திருமுழுக்கு யோவானாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான். (தன்னை திருத்திக்கொள்ள அவன் வாய்ப்பு தேடவில்லை).
மற்றவர் குறைகளை பெரிதுப்படுத்தாமல் நமக்குள் இருக்கும் கறைகளை நாம் கழுவ முற்படுவோம்.
தேவையற்ற கறைகள் (குழப்பம்) நீங்கினால் தேவையான அக்கறை உண்டாகும். அதன் வழியாக அன்பு பெருகும், தெளிவு பிறக்கும்.
No comments:
Post a Comment