24_09

பரிவு காட்டுவது பெரிய செயல்...

 


பொதுக் காலம் 24ஆம் வாரம்

17.09.2024 - செவ்வாய்க் கிழமை 

"உலகச் செல்வத்தைப் பெற்றிருப்போர் தம் சகோதரர் சகோதரிகள் தேவையில் உழல்வதைக் கண்டும் பரிவு காட்டவில்லையென்றால் அவர்களிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்கும்?" - 1 யோவான் 3:17

பெரிய செயல்களைச் செய்ய நாம் பெரியவராக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. நாம் எந்நிலையில் இருந்தாலும் மற்றவர்களுக்கு பரிவு காட்டுவதன் வழியாக நாம் பெரிய செயலைச் செய்ய முடியும். என்னிடம் செல்வம், புகழ், பெருமை எல்லாம் இருந்தும் பரிவு இல்லையேல் நான் ஒன்றும் இல்லை.

அன்பு இருக்கும் இடத்தில் பரிவு இருக்கும். பல்வேறு உலக அறிவு, உலக நாட்டம், உலக இன்பம் நம்மிடம் இருக்கிறது. உலகம் எதை பெரிதாக தூக்கி கொண்டாடுகிறதோ அதை நாமும் பெரிதாக எண்ணுகிறோம். 

இந்த உலகம் ஒன்றும் இல்லை என்ற எண்ணம் எப்போது ஏற்படும்? எல்லாம் நம்மை விட்டுப் போகும்போது. மனிதர்களிடம் செல்வமும் புகழும் இருக்கின்ற போது படை சூழ்ந்து நிற்கும். எல்லாம் நம்மை விட்டுப் போகும்போது எல்லோரும் நம்மை விட்டு போய்விடுவார்கள். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7:11-17) நயின் ஊர் கைம்பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுக்கிறார் இயேசு. தன் மகனை இழந்து தனித்து விடப்பட்ட அந்த தாய்க்கு இயேசு காட்டிய பரிவு, பெரிய வல்ல செயலாக பார்க்கப்பட்டது. பெரிய இறைவாக்கினர் ஒருவர் நம்மிடையே தோன்றியிருக்கிறார் என்று மக்கள் அச்சமுற்று கூறினர்.

இயேசுவின் பரிவு வார்த்தையிலும் (அழாதீர் என்று சொல்கிறார்) செயலிலும் (அருகில் சென்று இளைஞனை தொட்டு எழுப்பி விடுகிறார்) வெளிப்பட்டது.

இயேசுவைப் போல நம்மால் மற்றவர்களுக்கு உயிர் கொடுக்க முடியாது. ஆனால் பரிவிரக்கச் செயல்களின் வாயிலாக மற்றவர்களுக்கு நாம் வாழ்வு கொடுக்க முடியும்.

சிலர் இறக்கின்ற தருணத்தில் பரிவு பெற்றுக் கொள்கின்றனர். இருக்கின்றபோது கிடைக்காத பரிவு இறந்தபின் கிடைத்து எதற்கு?

சில வேளைகளில் பரிவு என்பது கடமையாகவும் பார்க்கப்படுகிறது. பரிதாபப்படுவது இங்கு தேவையில்லை பரிவு காட்டுவது தான் இங்கு தேவை.

எதை நாம் கொண்டு வந்தோம்? எதை நாம் கொண்டு செல்வோம்? நம் நன்மைத்தனம் தான் நம்மை பின் தொடரும் 

இருக்கும் வரை இருக்கின்றவர்களோடு இரக்கத்தோடு இருப்போம்...

நம் பரிவும் இரக்கமும் கடவுளின் பார்வையில் பெரிதாக பார்க்கப்படும்...


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...