பொதுக் காலம் 23ஆம் வாரம்
09.09.2024 - திங்கட் கிழமை
"தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு" - திருப்பாடல்கள் 34:14
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:6-11) இயேசு தொழுகைக் கூடத்திற்கு சென்று கற்பிக்கிறார். ஓய்வுநாளில் கை சூம்பியவரை குணப்படுத்துகிறார்.
நற்செய்தியின் தொடக்கத்தில், இயேசுவின் மீது குற்றம் காணும் நோக்குடன் பரிசேயரும் மறைநூல் அறிஞரும் காத்திருந்தனர்.
ஓய்வுநாளில் நலமாக்க கூடாது என்பது அவர்களின் சட்டம். காரணம் ஓய்வு நாள் கடவுளுக்குரியது. ஓய்வு நாளில் பிற காரியங்கள் நடைபெற்றது என்றால் கடவுளுக்கு நமக்கும் இடையேயான உறவில் இடைவெளி ஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கையாய் இருந்தது.
ஆனால் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் ஏற்கனவே கடவுளின் உறவிலிருந்து விரிசலை ஏற்படுத்திக் கொண்டனர். தொழுகைக் கூடத்திற்கு வந்து இறைவார்த்தைக்கு செவிமடுக்க முடியாதவாறு, அவர்கள் குற்றம் காணும் நோக்கத்தோடு இருந்தார்கள். இயேசு என்ன செய்யப் போகிறார் என்பதை நோட்டமிட்டு கொண்டிருந்தார்கள்.
அவர்களின் உள்ளங்களை அறிந்த இயேசு கை சூம்பியவரை நடுவில் நிறுத்தி ஓய்வுநாளில் நன்மை செய்வதா? தீமை செய்வதா? உயிரை காப்பதா? அழிப்பதா? எது முறை? என்று கேட்டார்.
ஓய்வு நாள் என்றாலும் கூட நல்லது செய்வது கடவுளுக்கு நமக்கும் இடையான உறவை நெருக்கமாக்கும் என்பதை சுட்டிக் காட்டினார். கை சூம்பியவருக்கு நலம் கொடுத்தார்.
நல்லது செய்யாவிட்டாலும் தீமை செய்யாமல் இருக்க வேண்டும் என்பார்கள். நானும் நன்மை செய்ய மாட்டேன் நீங்களும் நன்மை செய்யக்கூடாது. ஒருவேளை நீங்கள் நன்மை செய்வதாக இருந்தாலும் அதனுடைய பாராட்டு என்னை வந்து சேர வேண்டும் என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இறைவார்த்தை சொல்கிறது தீமைக்கு பதில் தீமை செய்யாதீர்கள் என்று. ஆனால் இங்கு பலர் நன்மைக்கு எதிராக தீமை செய்கிறார்கள்.
ஒருவேளை நாம் மனமுவந்து நல்லது செய்யாவிட்டாலும் மற்றவர் நல்லது செய்கின்ற பொழுது பாராட்ட முன் வருவோம்.
நற்செயலை பாராட்டுவதும் ஒரு நற்காரியம்தான்.
No comments:
Post a Comment