பொதுக் காலம் 24ஆம் வாரம்
21.09.2024 - சனிக் கிழமை
நற்செய்தியாளர் மத்தேயு கப்பர்நாகும் என்ற ஊரைச் சார்ந்தவர். மாற்கு, லூக்கா நற்செய்தி நூல்களில் இவர் லேவி என்று அழைக்கப்படுகிறார். இவர் தந்தையின் பெயர் அல்பேயு. இவர் சுங்கச்சாவடியில் வரி வசூலித்துக் கொண்டிருந்தார். வரி வசூலிப்பது என்பது உரோமையர்கள் சார்பாகவும் யூதர்களின் எதிரியாகவும் கருதப்பட்ட பணி/சூழ்நிலை.
இந்த வரி வசூலிக்கும் பணியை செய்தவர்கள் விரோதிகள் எனவும், நாட்டை காட்டிக் கொடுப்பவர்கள் எனவும் யூதர்களால் அழைக்கப்பட்டார்கள்.
சில நேரங்களில் உரோமை அரசாங்கம் விதிக்கும் தொகையை விடவும் மிகுதியாக மக்களிடமிருந்து வரி வசூலித்தார்கள். இதனால் மக்களின் வெறுப்புக்கும் புறக்கணிப்புக்கும் ஆளானார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:9-13) இப்படிப்பட்ட சூழ்நிலையில் வாழ்ந்த மத்தேயுவை தான் இயேசு, என்னை பின்பற்றி வா என்று அழைக்கிறார்.
அவரோடு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரி தண்டுபவர்கள், பாவிகள் என பலர் அவரோடு விருந்துண்டனர். இதை பார்த்த பரிசேயர் இயேசுவின் சீடரிடம், உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்? என்ற கேள்வி எழுப்பினார்கள்.
இயேசுவின் பதில் நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை, நேர்மையாளரை அல்ல பாவிகளையே அழைக்க வந்தேன் என்பதாக அமைந்தது.
நலமாய் இருப்பவருக்கு மருத்துவம் தேவையில்லை. நேர்மையாளருக்கு நேர்மையை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.
யாரை நல்வழிப்படுத்த வேண்டுமோ! அவர்களை இயேசு தேடி சென்றார். அத்தகைய மனநிலையில் இருக்கின்ற எல்லோருக்கும் அவர் போதித்தார், கேட்கச் செவியுள்ளோர் அனைவரும் கேட்டார்கள். வாழ்வை மாற்றிக் கொண்டார்கள்.
அதே போலத்தான் மத்தேயுவும் சமூகத்தால் பாவியாக கருதப்பட்டார். ஆனால் இயேசுவால் தனிப்பட்ட பணிக்கென அழைக்கப்பட்டார்.
இயேசுவின் அழைப்பை ஏற்ற பிறகு மத்தேயுவின் வாழ்வில் மாற்றம், செயலில் மாற்றம் ஏற்பட்டது.
மனமாற்றம் பெற்றார். மனமாற்றம் பெற நமக்கு அழைப்பும் விடுக்கிறார்.
28 அதிகாரங்களை கொண்ட மத்தேயு நற்செய்தி தொடக்கத்தில் 'இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு' என்ற வசனத்தோடு (முதல் அதிகாரத்தில்) தொடங்குகிறது, முடிவில் 'இதோ உலகம் முடிவு வரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்' என்ற வார்த்தையோடு (கடைசி அதிகாரத்தில்) முடிவு பெறுகிறது.
மத்தேயு நற்செய்தியாளர், எல்லா வேளையிலும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்ற செய்தியை நமக்கு கொடுக்கிறார்.
மத்தேயு என்றால் யாவேயின் பரிசு என்று பொருள்.
மத்தேயு நற்செய்தி நூலைக் குறிக்க பயன்படுத்தப்படும் அடையாளம் - வான தூதர்.
மத்தேயு நற்செய்தி நூல் யூதர்களால் துன்புறுத்தப்பட்ட யூதக் கிறித்தவர்களுக்கு எழுதப்பட்டது.
யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசு தான் என்பதை இந்நூல் வெளிக்காட்டுகிறது.
No comments:
Post a Comment