பொதுக்காலம் 23 ஆம் வாரம்
11.09.2024 - புதன் கிழமை
"இதோ! ஆண்டவர் நெருப்பென வருவார்; அவர் தேர்கள் புயலென விரையும்; கொழுந்து விட்டெரியும் தம் சினத்தைக் கொட்டுவார்; தீப்பிழம்பென அவர்தம் கண்டனம் வருகின்றது" - எசாயா 66:15
நாம் எந்த நல்லதும் செய்யாத நிலையில் நம்மை ஒருவர் பாராட்டினாலும் இந்த பாராட்டினால் நம்முடைய உள்ளம் குளிர்கிறது. சில இடங்களில் பணம் கொடுத்து பாராட்டு பெறப்படுகிறது. அற்ப மனிதர்கள் தரக்கூடிய பாராட்டு அதோடு கடந்து போய்விடும்.
மற்றவர்கள் நம்மை புகழ வேண்டும் என்பது நம்முடைய எதிர்பார்ப்பு. (அது தவறு இல்லை) ஆனால் அதற்கேற்ற வகையில் நம்முடைய செயல்கள் அமைய வேண்டும்.
இவ்வுலக மனிதரிடமிருந்து புகழ்ச்சியையும் பெருமையையும் தேடுகிறோம். சாதாரண அற்ப மனிதர் தரக்கூடிய புகழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றால், நம்மை உருவாக்கிய, நம்மை செதுக்கிய கடவுள் தரக்கூடிய அந்த புகழ்ச்சி என்பது எத்துனை மேலானது.
சில இழப்புகளை சந்திக்கின்ற போது, சில கைம்மாறை நாம் மிகுதியாக பெற்றுக்கொள்ள முடியும். சிலருக்கு இழப்புகளை கொடுக்கிற போது அது நமக்கே வந்து சேரும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:20-26) இயேசு 4 வகையான பேறுபெற்றோரை பதிவு செய்கிறார். (ஏழைகள், பட்டினியாய் இருப்போர், அழுதுக் கொண்டிருப்போர், மானிடமகன் பொருட்டு வெறுத்து ஒதுக்கப்படுவோர்).
நான்கு வகையான கண்டனங்களையும் இயேசு சுட்டிக்காட்டுகிறார். (செல்வருக்கு கேடு, உண்டு கொழுத்திருப்போருக்கு கேடு சிரித்து இன்புறுவோருக்கு கேடு, புகழ்ந்து பேசப்படுபவருக்கு கேடு)
நாம் பேறுபெற்றோர் என்ற நிலையில் இருக்கிறோமா? அல்லது இயேசுவால் கண்டனத்துக்கு உள்ளாக்கப்படுகிறோமா? என்பது சிந்திக்கத்தக்கது.
கிறித்தவ வாழ்வு மட்டும் துன்பம் நிறைந்தது அல்ல, கிறிஸ்துவில் வாழ்வோருக்கும் துன்பம் உண்டு.
கிறிஸ்துவை சார்ந்தவரை உலகம் வெறுக்கும். ஏனென்றால் கடவுளுக்குரியதை உலகு வெறுக்கும்.
உலகின் பார்வையில் பேறுபெற்றவராக அல்ல, உன்னதரின் பார்வையில் பேறுபெற்றோராய் வாழ்வோம்.
உலக இன்பங்கள் போதும் என்றால் விண்ணக செல்வங்கள் நமக்கு கிடையாது. விண்ணக செல்வங்களை நோக்கி பயணித்தால் உலகில் துன்ப சுவடுகள் தான் உண்டு.
யாருக்கு? எதற்கு? எப்போது? வாழ்க்கையில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை சிந்திப்போம்.
நம்மை பார்த்து இறைவன் பேறுபெற்றோர் என்று சொல்ல வேண்டுமா? ஐயோ! என்று சொல்ல வேண்டுமா? என்பதை நமது செயல்பாடுகள் வெளிக்காட்டும்.
No comments:
Post a Comment