பொதுக் காலம் 25ஆம் வாரம்
22.09.2024 - ஞாயிற்றுக் கிழமை
"மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்" - சபை உரையாளர் 4:4
மனிதன் இறப்பதற்கு முன் இங்கு பல போட்டிகள் நடைபெறுகின்றது. வாழ்வதற்காக, உண்பதற்காக, இருப்பிடத்திற்காக, இருத்தலை காண்பிக்க, அதிகாரத்திற்காக என்று பல வகைகளில் போட்டி மனப்பான்மை தொடர்கிறது.
ஒருவர் மற்றவரை அழித்தாவது முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார். மனிதர் அழிவுக்குரியவர் என்பதை அறிந்திருந்தாலும் மற்றவரை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரில் மேலோங்கி இருக்கிறது.
1 திமொத்தேயு 6:10 இவ்வாறு சொல்கிறது, "பொருள் ஆசையே எல்லாத் தீமைகளுக்கும் ஆணிவேர். அந்த ஆசையால் சிலர் விசுவாசத்தினின்று பிறழ்ந்து திரிந்து பல வேதனைகளைத் தாங்களாகவே தங்கள்மேல் வருவித்துக் கொள்கிறார்கள்".
பொருள் ஆசை, பண ஆசை, பதவி ஆசை பலரை அழித்திருக்கிறது. இது போட்டி போட்டு முன்னேற துடிக்கும் உலகம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:30-37) இயேசு தன் பாடுகளைப் பற்றி வெளிப்படையாக அறிவிக்கிறார். மானிட மகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்பட இருக்கிறார். அவர்கள் அவரை கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாட்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் என்று சீடர்களுக்கு கற்பிக்கிறார்.
இதை புரிந்து கொள்ளாது இயேசுவின் சீடர்கள் தங்களில் யார் பெரியவர்? என்று ஒருவரோடு ஒருவர் வாதாடி கொள்கின்றனர். முதன்மைத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த தன் சீடர்களை அழைத்து தொண்டராக இருக்க அழைப்பு விடுக்கிறார் இயேசு.
சிறு பிள்ளைகளில் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னை ஏற்றுக் கொள்கிறார். (இங்கு சிறு பிள்ளைகளை ஏற்றுக் கொள்வது என்பது இந்த குழந்தைகளின் மனநிலையை வாழ்வாக்குவதை, தாழ்ச்சியோடு வாழ்வதை குறிக்கிறது).
இன்றைய முதல் வாசகத்தில் (சாலமோனின் ஞானம் 2:17-20) பொல்லாத மனிதர்கள் இந்த உலகில் வாழும் நல்ல மனிதருக்கு எதிராக சதி திட்டம் தீட்டுகிறார்கள். நீதிமான்கள் கடவுளின் மக்கள் என்றால் அவர் அவர்களுக்கு உதவி செய்வார் என்று சொல்லி கடவுளுக்கு எதிராகவும் பேசுகிறார்கள்.
தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் உரிய கைம்மாறு உண்டு என்பதை அறியாதவர்கள் தங்களை மேலானவர்களாக கருதிக் கொள்வதனால் நேர்மையோடு நடக்கின்ற மக்களை இழிவாக கருதுகின்றார்கள்.
இவ்வுலகில் நல்லாருக்கும் பொல்லாருக்கும் போராட்டம் நடைபெறுகிறது. (நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டம்).
இந்த உலகில் தீயவர்கள், பொல்லாதவர்கள், இறைப்பற்றில்லாதவர்கள் நெடுங்காலம் வாழ்வது போல தோன்றுகிறது. நீதியோடும் நேர்மையோடும் வாழக்கூடியவர்கள் மிகவும் துன்பப்படுவது போல தோன்றுகிறது.
(சபை உரையாளர் 8:12 - பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங்காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள்.)
இரண்டாம் வாசகத்தில் (யாக்கோபு 3:16-4:3) பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ்செயல்களும் நடக்கும் என்கிறார் திருத்தூதர் யாக்கோபு. இந்த உலகில் நடைபெறக்கூடிய எதார்த்தத்தை படம்பிடித்து காட்டுகிறார். நமக்குள்ளே காணப்படும் சிற்றின்ப நாட்டம், ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம், பேராசை, சண்டை சச்சரவு ஆகியவை நாம் கடவுளிடம் கேட்பது கிடைக்காமல் இருப்பதற்கு தடையாய் இருக்கின்றன.
(செபம் கேட்கப்படாததற்கு காரணங்கள் 3
1. நம்பிக்கையோடு கேட்பதில்லை
2. தீய எண்ணத்தோடு கேட்கிறோம்
3. சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறோம்)
அமைதிக்கு பதிலாக பிளவை ஏற்படுத்தும் மனிதர்கள், சண்டை சச்சரவை உண்டாக்கும் மனிதர்கள் தங்களை பெரியவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆயுதம் தாங்கி இன்று பலர் தங்களை பெரியவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆயுதங்கள் வழியாக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள பலர் முற்படுகிறார்கள்.
(மத்தேயு 26:52 அப்பொழுது இயேசு அவரிடம், “உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.)
ஆயுதம் அல்ல அமைதியே நம்மை கடவுவுளுக்கு நெருக்கமாக்கும்.
தங்களை பெரியவர்களாக முன்னிலைப்படுத்த துடிக்கும் இந்த மானிடத்தில் நாம் எத்தகைய மனிதராக இருக்கிறோம்?
இருக்கின்ற வாழ்நாட்களை கிறிஸ்துவின் மதிப்பீடுகளோடு வாழ தவறிவிடுகிறோம்.
நம்மை மதிப்பு மிக்கவர்களாக காட்டிக்கொள்ள நல்லவர்களை காட்டிக் கொடுக்கிறோம்.
அமைதிக்கு ஊறு விளைவித்து சமூகத்தில் பிளவை உண்டு பண்ணுகிறோம்.
நன்மைக்கு செவிசாய்ப்பதா? தீமைக்கு செவி சாய்ப்பதா என்ற போராட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
நம்மை நாம் தாழ்த்துவது நம்மை கடவுளின் பார்வையில் முன்னிலைப்படுத்தும். உலகின் முன் நாம் தோல்வியை தழுவியது போல தோன்றலாம் ஆனால் நாம் கடவுள் முன்னிலையில் தலை நிமிர்ந்து நிற்போம்...
சாலமோனின் ஞானம் 5:1,2 இவ்வாறு சொல்கிறது, "அப்பொழுது நீதிமான்கள் தங்களைத் துன்புறுத்தியோர் முன்பும் தங்கள் உழைப்பைப் பொருட்படுத்தாதோர் முன்பும் துணிவோடு நிற்பார்கள். இறைப்பற்றில்லாதவர்கள் அவர்களைக் கண்டு பேரச்சத்தால் நடுங்குவார்கள்; எதிர்பாரா வகையில் அவர்கள் அடைந்த மீட்பைப்பற்றித் திடுக்கிடுவார்கள்".
நீதி, நேர்மை, தாழ்ச்சி, இரக்கம், அமைதி ஆகியவற்றை நம்முடைய வாழ்க்கையில் கடைபிடிப்போம், அதன் வழியாக நாம் கடவுளால் முன்னிலைப்படுத்தப்படுவோம்.
No comments:
Post a Comment