பொதுக் காலம் 24ஆம் வாரம்
16.09.2024 - திங்கட் கிழமை
"தலைமை ஆயர் வெளிப்படும்போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்" - பேதுரு 5:4
மனிதர்கள் அதிகார போக்கிலே அலைந்து திரிகிறார்கள். தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்களின் வாழ்வு உயர பயன்படுத்துவதை காட்டிலும் தன் குடும்பம் உயர பயன்படுத்துபவர்களே அதிகம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சரி அதிகாரத்தில் இருப்பவர்களின் கீழ் இருப்பவர்களும் சரி இதை அறியாத எவரும் இல்லை.
தற்காலிகமாக நம்நிலை உயர்ந்தால் போதும் என்பது தான் நமது மனநிலை. தற்காலிகமாக மற்றவர்களை உயர்த்தினால் போதும் என்பதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலை.
அதிகாரம் பணம் புகழ் இவற்றைப் பற்றி பேசுகின்ற போது எனக்குள் எழக்கூடிய கேள்வி, எதையும் கொண்டு செல்ல முடியாத நிலையிலேயே மனிதர்கள் இப்படி செயல்படுகிறார்கள் என்றால், நாம் சேர்த்து வைத்தது எல்லாவற்றையும் நம்மோடு எடுத்துச் செல்ல முடியும் என்ற நிலை வந்தால் நாம் என்னவெல்லாம் செய்வோம்? என்பதுதான்.
ஆனால் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7:1-10) இந்த அதிகாரப் போக்கு இல்லாத தலைவரை நாம் பார்க்கிறோம். தன் பணியாளரை காப்பாற்ற யூதர்களின் மூப்பர்களை இயேசுவிடம் அனுப்பி வைக்கும் நூற்றுவர் தலைவர் செயல்முறை நமக்கு வியப்பைத் தருகிறது. நூற்றுவர் தலைவர் தொடக்கத்தில் யூதரின் மூப்பர்களை அனுப்புகிறார், அதன்பின் தன்னுடைய நண்பர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்புகிறார். தன் நண்பர்களை இயேசுவிடம் அனுப்பி அவர் சொன்ன வார்த்தைகள், "ஐயா, உமக்கு தொந்தரவு வேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். உம்மிடம் வரவும் என்னை தகுதியுள்ளவனாக நான் கருதவில்லை. ஆனால் ஒரு வார்த்தை சொல்லும் என் ஊழியர் நலமடைவார்.
எவ்வளவு அதிகாரமிக்க தலைவர் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு, தன்னை தகுதியற்றவர் என்று கருதுகிறார் என்பது தான் நமக்கான பாடம். தன் பணியாளர்களை அதிகாரத்தோடு ஆளக்கூடிய தலைவர், தன் பணியாளருக்காக அதிகாரத்தை துறந்து, ஆணவத்தை துறந்து தன் நிலையிலிருந்து இறங்கி வருகிறார்.
இவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய பாடம் இரண்டு. 1. நம்முடைய நிலையிலிருந்து இறங்கி வருதல், 2. நம்பிக்கையை அறிக்கையிடுதல்.
இந்த நூற்றுவர் தலைவர் தனக்காக, தன்னுடைய குடும்பத்திற்காக இயேசுவிடம் ஆள் அனுப்பவில்லை. மாறாக, நோயுற்று சாகும் தருவாயில் இருக்கும் தன் பணியாளரை காப்பாற்ற அவர் ஆள் அனுப்புகிறார்.
அவர் கொண்டிருந்த அதிகாரத்தை, அவரின் நம்பிக்கை பணிய வைத்துவிட்டது. பணிந்து நின்ற காரணத்தினால் அவர் தாழ்ந்து போகவில்லை. மாறாக இஸ்ரயேலரிடத்தில் இத்தகைய நம்பிக்கையை நான் கண்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை போற்றப்பட்டது.
தலைமைத்துவம் என்பது அதிகாரத்தில் நிறைவு பெறுவது அல்ல பணிவில், பகிர்வில், பரிவில் முழுமை பெறுவது. தன்னை முன்னிலைப்படுத்துவது தலைமைத்துவம் ஆகாது. தன்னோடு இருக்கும் மனிதர்களின் மாண்பை காப்பாற்றுவதும் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை தட்டிக் கழிக்காமல் சரிவர செய்வதுதான் உண்மையான தலைமைத்துவம்.
இயேசுவின் தலைமைத்துவம் இறைமகன் என்ற நிலையிலிருந்து மனித நிலைக்கு இறங்கி வந்து கீழ்ப்படிந்து சாவை ஏற்பதிலும் மீட்பை பெற்றுக் கொடுப்பதிலும் முழுமை பெற்றது.
அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் அல்ல, நம்பிக்கையோடும், திறந்த மனதோடும், உண்மையோடும் நாம் பணியாற்றும் இடங்களில் நம் தலைமைத்துவத்தை வெளிக்காட்டுவோம்.
No comments:
Post a Comment