24_09

துன்புறும் மெசியா/ துன்புறும் மானிடம்...


பொதுக்காலம் 25 ஆம் வாரம்

27.09.2024 - வெள்ளிக் கிழமை

"எனக்குத் துன்பம் விளைந்தது என் நன்மைக்காகவே; அதனால், உம் விதிமுறைகளை நான் கற்றுக்கொண்டேன்" - திருப்பாடல்கள் 119:71

இந்த உலகில் துன்பம் மட்டும் இல்லை என்றால் நம் வாழ்வு எத்தனை அருமையானதாக இருக்கும். இறப்பு, இழப்பு, இடையூறு போன்றவை இல்லாமல் இருந்தால் இந்த உலகம் மகிழ்ச்சியால் நிரம்பியிருக்கும். 

துன்பமில்லாத வாழ்க்கையை எங்கு கண்டுபிடிப்பது என்று பலர் ஓடிக் கொண்டிருக்கிறார். சிலர் விலை கொடுத்து மகிழ்ச்சியை பெற்றுக் கொண்டு துன்பத்தை சற்று நேரம் ஒதுக்கி வைக்கிறார்கள். (சுற்றுலா, திரைப்படம், விளையாட்டு போன்ற பொழுதுபோக்குகளில் பணத்தை செலவழித்து தற்காலிகமாக துன்பத்தை தவிர்க்கிறார்கள்).

துன்பத்திற்கு நிரந்தர முடிவு யாராலும் கொடுக்க முடியாது. சாலமோனின் ஞான நூல் 2:1 இவ்வாறு செல்கிறது, "நம் வாழ்வு குறுகியது; துன்பம் நிறைந்தது. மனிதரின் முடிவுக்கு மாற்று மருந்து எதுவுமில்லை. கீழுலகிலிருந்து யாரும் மீண்டதாக கேள்விப்பட்டதில்லை".

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 9:18-22) கடவுளின் மெசியா துன்புறக் கூடியவராக காட்டப்படுகிறார். மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறி தள்ளப்பட்டு கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டுமென்று தன்னுடைய சீடருடன் அவர் தன்னுடைய துன்பங்களை பகிர்ந்து கொள்கிறார்.

கடவுளே துன்பங்களை ஏற்பதா? என்ற கேள்வி எழுகிறது. ஒரு சொல்லால் உலகைப் படைத்தவர், ஒரு சொல் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் அவரே துன்பங்களை ஏற்க துணிந்து முன் வருகிறார்.

துன்பங்களின் முன்மாதிரியாக இயேசு திகழ்கிறார். பாவம் ஏதும் செய்யாத நிலையிலும் பாவிகளின் வரிசையில் நிற்கிறார். ஆனால் தவறு செய்த நாமோ/ மற்றவர் தவறு செய்ய காரணமாய் இருந்த நாமோ ஏன் துன்பம்? ஏன் கஷ்டம்? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறோம். 

நாம் செய்யும் செயலுக்கேற்ற கைம்மாறு நமக்கு உண்டு என்பதை உணர்ந்திருந்தாலும் தீமைக்கு கைம்மாறான துன்பத்தை ஏற்க நம்முடைய மனம் மறுக்கிறது.

இயேசுவின் துன்பங்களுக்கு பிறகு உயிர்த்தெழுதல் எனும் மாட்சி வெளிப்பட்டது. இழப்பு இல்லாமல் பெறப்படும் வாழ்க்கையின் இன்பம் ரசிக்கப்படாது. அடிகள் நிறைந்த வாழ்க்கை தான் மற்றொருவருக்கு வாழ்க்கைப் பாடத்தை கொடுக்கிறது. 

தன்னிலை உணர்ந்தவர்கள் தவறை உணர்வார்கள். நான் யார்? நான் என்னவாக இருக்கிறேன்? நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்ற கேள்விகளை கேட்டு பார்க்க வேண்டும்.

நான் சரியான பாதையில் தான் பயணிக்கின்றேனா? என்ற கேள்வியை அடிக்கடி கேட்க வேண்டும். 

நம் வாழ்வில் வரும் துன்பம் நம்மால்/பிறரால் வந்தது என்றால் அதற்கு கடவுள் காரணமாக மாட்டார்.

இந்த இரண்டையும் கடந்து நாம் துன்பத்தை அனுபவிக்கிறோம் என்றால் நம் நம்பிக்கை புடமிடப்படுகிறது. இந்த சோதனை எளிதாக எல்லோருக்கும் வந்து விடாது. 

நம்பிக்கையின் நிலைத்திருப்பவர்கள் மட்டுமே பொன்னை புடமிடப்படுவது போல சோதிக்கப்படுவர். 

நாம் நன்மையினால் துன்புறும் ஊழியரா? துன்பங்களை ஏற்று கிறிஸ்துவின் பாடுகளில் பங்கேற்கும் பணியாளர்களா? சிந்திப்போம்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...