பொதுக் காலம் 22ஆம் வாரம்
04.09.2024 - புதன் கிழமை
"உன்னால் தங்களுக்குப் பயன் விளையுமாயின், செல்வர் உன்னைச் சுரண்டுவர்; உனக்கு ஒரு தேவை என்றால் உன்னைக் கைவிடுவர்" - சீராக்கின் ஞானம் 13:4
ஆதாயத்திற்காக, தேவைக்காக இன்று பலர் தேடப்படுகிறார்கள். காரியம் முடிந்ததும் பலர் கழற்றி விடப்படுகிறார்கள்.
ஒருவரால் நமக்கு உதவ முடியும் என்ற நிலை வருகிற போது அவர் நமக்கு விரோதியாக இருந்தால் கூட நாம் அவரை நண்பராக மாற்ற முயற்சி செய்கிறோம். ஆனால் நண்பராய் இருப்பவர்கள் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருந்தால், அவர்களை நாம் ஓரம்கட்டவும் தயங்க மாட்டோம்.
எனக்கு இன்று இது தேவை, இதை நீ செய்தால் என்னுடைய நண்பன். இதுதான் இன்றைய உலகம் நமக்கு காட்டக்கூடிய பாடம்.
நான் உனக்கு உதவுகிறேன், உதவவில்லை அது இங்கு பிரச்சினை அல்ல, என்னுடைய தேவையில் நீ உதவ வேண்டும் அதுதான் முக்கியம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 4:38-44) இயேசு கடிந்து கொள்ள காய்ச்சல் நீங்கியது, நோயாளிகள் நலம் பெற்றனர், தீய ஆவிகள் விரட்டப்பட்டன. பேய்கள் இயேசுவை மெசியா, இறைமகன் என்று கண்டு கொண்டன. திரளான மக்கள் இயேசுவை தேடி வந்து, அவரை அந்த இடத்தை விட்டு போகாதவாறு தடுத்தனர்.
எதற்காக அவர்கள் தடுக்க பார்த்தார்கள்? இயேசுவின் போதனையின் வியப்பில் ஆழ்ந்த காரணத்தினாலா? நிச்சயம் இல்லை. இவரால் இன்னும் நமக்கு பல காரியங்களாக வேண்டி இருக்கிறது என்பதே அவர்கள் அவரை தடுத்து நிறுத்தியனுடைய முதன்மை நோக்கம்.
ஒருவேளை, இயேசு அந்த இடத்தில் எந்த வல்லசெயலும் செய்யவில்லை என்றால் அவர்கள் அவரை தடுத்திருக்க மாட்டார்.
கொடுத்து பெற்றுக் கொள்வது அல்ல, பெற்றுக் கொண்டே இருப்பது இதுதான் மனிதர்களின் எதார்த்தம்.
இன்று முதியவர்கள் ஓரம் கட்டப்பட்டு வீட்டை விட்டு துரத்தப்படுவனுடைய நோக்கம் அவர்களால் எந்த பயனும் இனி ஆகப்போவதில்லை என்பதனால் தான்.
சொத்து உள்ள தந்தையும் தாயும் கடைசிவரை பாதுகாக்கப்படுகிறார்கள். ஒன்றுமில்லாத பெற்றோர்கள் ஒன்றும் இல்லாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்.
("உன் உதவி அவர்களுக்குத் தேவைப்படும் போது உன்னை ஏமாற்றுவர்; உன்னைப் பார்த்துப் புன்முறுவல் பூத்து உனக்கு ஊக்கம் அளிப்பர்; உன்னிடம் நயந்து பேசி, “உனக்குத் தேவையானது என்ன?” எனக் கேட்பர்" - சீராக்கின் ஞானம் 13:6)
தங்களுக்கு கிடைக்க இருக்கும் சொத்திற்காக கடைசிவரை நாடகம் போடும் பிள்ளைகளும் இங்கு உண்டு. எல்லாம் எப்போது தெரிய வருகிறது? சொத்துக்கு சொந்தக்காரர் தவறுகிற (இறக்கிற) போது.
பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படுவதற்கு மற்றவர்கள் ஒன்றும் பொருட்கள் அல்ல. மனிதர்கள் மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்.
நான் பெற்றுக் கொள்வது போல மற்றவர்களும் அவர்களுக்கு உரியதை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் நமக்கு இருக்க வேண்டும்.
எவ்வளவு தலைகீழாக இருந்தாலும் எதையும் மண்ணுலகில் இருந்து யாரும் எடுத்துச் செல்ல முடியாது.
தேவைக்காக பயன்படுத்தும் கலாச்சாரத்தை தூக்கி எறிவோம்.
தேவையில் இருப்போரை தாங்கி பிடிப்போம்.
No comments:
Post a Comment