24_09

சட்டமும் மனித மாண்பும்


பொதுக் காலம் 22ஆம் வாரம்

07.09.2024 - சனிக் கிழமை

சட்டங்களை தூக்கிப் பிடிப்போர் நல்லவர்களாக எப்போது மாற முடியும்? அந்த சட்டங்களை தானும் தன்னுடைய வாழ்க்கையில் கடைபிடிக்கின்ற போது தான். 

அன்று மட்டும் அல்ல, இன்றும் சட்டங்கள் எழுதப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. சட்டத்தை காக்க வேண்டிய இடத்தில் இருக்கின்றவர்கள், மற்றவர்கள் மீது சட்டங்களை திணிக்கிறார்களே தவிர அவர்கள் சட்டங்களை பின்பற்றுவதில்லை. லஞ்சம் வாங்குவது சட்டத்திற்கு புறமானது அது மற்றவர்களுக்கு சட்டமாக இருக்கிறது, ஆனால் பொறுப்புகளில் இருப்பவர்களை அது பாதிப்பதில்லை. 

நான் சொல்வதை நீ கேட்க வேண்டும், நான் சட்டம் தீட்டுகிறேன், நீ சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். இதுதான் அன்றும் இன்றும் என்றும் தொடர்கின்ற ஒரு தொடர்கதை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:1-5) பசியாய் இருந்ததால் ஓய்வு நாளில், சீடர்கள் கதிர் கொய்ததை பரிசேயர்கள் கண்டிக்கிறார்கள். தாவீது இறை இல்லத்திற்குள் சென்று அர்ப்பண அப்பங்களை உண்டது தவறல்லவா? என்று இயேசு பரிசேயருக்கு சுட்டிக் காட்டுகிறார்.

ஓய்வு நாளில் எந்த செயலையும் செய்யக்கூடாது என்பது உண்மைதான் ஆனால் இங்கு சட்டங்களைவிட மனிதாபிமானம், மனித மாண்பு காக்கப்பட வேண்டும் அல்லவா? 

ஓய்வுநாள் சட்டம் கொண்டு வந்ததனுடைய நோக்கம், அடிமை தொடங்கி அரசன் வரை அன்று வேலை செய்ய கூடாது; அது கடவுளுக்குரிய நாள் என்பதற்காக(அடிமைக்கு விடுப்பு). பின்னாளில் வந்தவர்கள் அந்த ஓய்வு நாள் சட்டங்களையும் தங்களுக்கு ஏற்றார் போல மாற்றிக் கொண்டனர்.

ஒருவருடைய பசியை போக்குவதை விட சிறந்த காணிக்கை எதுவும் இருக்க முடியாது. கடவுளுக்கு ஆயிரம் பொன்னும் வெள்ளியும் பணமும் கொடுத்தாலும் மனிதாபிமானத்தோடு நாம் செயல்படவில்லை என்றால் கொடுத்த அனைத்தும் முற்றிலும் வீண். இரக்கமில்லாமல் கடைபிடிக்கப்படும் அனைத்து செயல்களும் தகுதியற்றவையே. 

இயேசு பரிசேயர்களுக்கு கொடுக்கக்கூடிய பதில் 'பலியை அல்ல, இரக்கத்தை விரும்புகிறேன்' என்பதாகும். 

திருப்பாடல்கள் 51:16,17 இவ்வாறு சொல்கிறது, "ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை".

சட்டம் என்பது எல்லோருக்கும் சரிசமமாய் இருந்தால் இங்கு பிரச்சனை ஏதுமில்லை. ஆனால் இந்த சட்டம் என்பது அதிகாரம் பணம் புகழ் படைத்தவருக்கு ஒரு மாதிரியாகவும் ஏழை ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், தனக்கு பிடித்தவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் இருக்கிறது.

பலி செலுத்துவதினாலும் சட்டங்களை தூக்கிப் பிடிப்பதினாலோ நாம் கடவுளை நெருங்கி வர முடியாது. இரக்கச் செயல்கள் புரிவதனால், இரக்கத்தோடு வாழ்வதனால் மட்டுமே நாம் கடவுளை நெருங்கி வர முடியும்.

எல்லோருக்கும் இரக்கம் காட்ட வேண்டும்; ஆனால் ஏமாற்றுகிறவர்கள், பொய்யர்கள், பித்தலாட்டம் செய்பவர்கள் இவர்களிடம் நாம் கவனமாய் இருக்க வேண்டும்.

சட்டங்களைவிட மனிதாபிமானத்தை வலியுறுத்தும் இரக்கமே பெரிது.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...