24_09

தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தூதர்கள் நாம்...


பொதுக்காலம் 23 ஆம் வாரம் 

10.09.2024 - செவ்வாய்க் கிழமை 

"நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன" - திருவெளிப்பாடு 21:14

கடவுள் நம்மை பெயர் சொல்லி தேர்ந்தெடுக்கிறார். திருமுழுக்கின் வழியாக கிறிஸ்துவில் நாம் புதுவாழ்வு பெற நமக்கு பெயர் கொடுக்கப்படுகிறது. 

கிறித்தவ பெயரை கொண்டிருக்கக்கூடிய நாம் கிறிஸ்துவின் விழுமியங்களை பின்பற்ற அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவுக்கு ஏற்ற வாழ்வு வாழ்வது தான் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டதனுடைய நோக்கம்.

ஆளைச் சுட்டிக் காட்டுவதற்கு முதலில் பயன்படுத்தப்படுவது பெயர் தான். ஒரு பெயரைச் சொன்னவுடன் எல்லோரும் வியந்து நிற்கிறார்கள் என்றால், அந்தப் பெயரைக் கொண்டவர் அத்தகைய சாதனையை படைத்திருக்கிறார் என்று தான் பொருள். சில பெயரை கேட்டதும் முகம் சுளிக்கிறது என்றால், செய்த செயல் அருவருப்பானது, இழிவானது என்று தான் அர்த்தம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:12-19) இயேசு பெயர் சொல்லி தன்னுடைய சீடர்களை தேர்ந்தெடுக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள் பின்னாளில் வியப்புக்குரிய பெயர்களாக மாறிப் போனது என்பது மறுப்பதற்கில்லை. 

சீடர்களின் பெயர்கள் முறையே, பேதுரு என்னும் சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன், யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து. 

ஒவ்வொரு பெயருக்குள்ளும் ஒரு அர்த்தம் அல்லது ஒரு வரலாறு புதைந்திருக்கிறது. இயேசு அவர்களை அழைத்த போது சில ஆற்றல்களையும் அதிகாரங்களையும் அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.

தொடக்கம் சிறியதாக (12 நபர்கள்) இருந்தது; நிறைவு எல்லாவற்றையும் அளப்பரியதாக இருக்கிறது .

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பிணிகள் நீங்கி நலம் அடையவும் தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமாகவும் பலர் இயேசுவை தேடி வந்தனர். (இது சீடர்களுக்கான பயிற்சி).

அழைக்கப்பட்ட திருத்தூதர்கள், தங்களால் இயன்ற அளவில் திருத்தூது பணியை சிறப்பாக செய்தார்கள்.

தடைகளை தாண்டி, இடர்பாடுகளை கடந்து, நம்பிக்கை குறைவிலிருந்து நம்பிக்கை மிகுதி பெற்று அழைப்புக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்தார்கள் இயேசுவின் சீடர்கள்.

நாமும் இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறோம். வழி தவறி போகாதமாறு அவர் குரலைக் கேட்டு அவர் பின்னே செல்ல அழைக்கப்படுகிறோம்.

யாரும் எனக்கு அழைப்பு கொடுக்கப்படவில்லை என்று அழைப்பை தட்டி கழிக்க முடியாது. திருமுழுக்கு பெற்ற அனைவருமே கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிப்பை வாழ்க்கையாலும் வார்த்தையாலும் கடைப்பிடிக்க, எடுத்துச் சொல்ல அழைக்கப்படுகிறோம்.

திருத்தூதர்களில் பலர் பலவீனமானவர்களாக இருந்தார்கள். இருந்தாலும் அந்த பலவீனத்தில் தான் இயேசுவின் வல்லமை வெளிப்பட ஆரம்பித்தது. 

நம் வாழ்வின் இருக்கக்கூடிய பலவீனங்களோடு அவரை பின்தொடர்வோம். நம்மை குத்திக் கொண்டிருக்க கூடிய அந்த பலவீனம் என்னும் முள்ளை அவர் நீக்கி, நம்மை அருளால் நிரப்புவார்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...