பொதுக் காலம் 26ஆம் வாரம்
01.10.2024 - செவ்வாய்க் கிழமை
"குழந்தை இயேசுவின் புனித தெரேசா, அன்பின் சிறிய வழியைப் பின்பற்ற நம்மை அழைக்கிறார்" – திருத்தந்தை பிரான்சிஸ்
1873ம் ஆண்டு, சனவரி 2ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Alençon என்ற ஊரில் பிறந்த தெரேசா, தன் நான்காவது வயதில் தாயை இழந்ததால், அவரது தந்தையும், மூத்த சகோதரியும் அவரை வளர்த்தனர்.
1886ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு நாளன்று, இறைவனின் ஆழ்ந்த அனுபவத்தைப் பெற்ற இளம்பெண் தெரேசா, அதற்கடுத்த ஆண்டு, 14வயது நிறைந்த இளம்பெண்ணாக, உரோம் நகருக்கு மேற்கொண்ட ஒரு திருப்பயணத்தின்போது, திருத்தந்தை 13ஆம் லியோ அவர்களிடம், தான் துறவு சபையில் இணைவதற்குத் தேவையான உத்தரவை வழங்குமாறு கேட்டார்.
தன் 15வது வயதில், Lisieux என்ற ஊரில், கார்மேல் துறவு சபையில் இணைந்த தெரேசா, தன் வாழ்நாள் முழுவதையும், அத்துறவு மடத்தில், செபத்திலும், தவ முயற்சிகளிலும் கழித்தார். மறைபரப்பு பணியாளராக மாற வேண்டும் என்ற மிகப்பெரிய ஆவலுடன் தன் துறவற வாழ்வில் ஆரம்பித்தவர் குழந்தை புனித இயேசுவின் புனித தெரேசா.
ஒரு மறைபரப்புப் பணியாளராக வாழ்ந்து, மறைசாட்சியாக உயிர் துறக்கும் கனவுகளுடன் வாழ்ந்த இளம்பெண் தெரேசா, தன் துறவு மடத்தில் மேற்கொள்ளும் செபங்கள் வழியே, அந்தக் கனவுகளை நிறைவேற்ற முடியும் என்பதை, இயேசு தனக்கு உணர்த்தினார் என்று, தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார்.
சிறைவாசி ஒருவர் தான் செய்த குற்றத்திற்காக தண்டனை பெற போகிறார் என்பதை செய்தித்தாள் வழியாக குழந்தை தெரேசா அறிய வருகிறார். அந்த நபர் தன்னுடைய தவறுகளுக்கு மனம் வருந்தாமல் இருக்கக் கூடாது என்பது புனிதையினுடைய மிகப்பெரிய செபமாக இருந்தது. அந்த நபருடைய மனமாற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் செபித்து வந்தார். அந்த குற்றவாளி இறப்பதற்கு முன் சிறைச் சாலைக்கு வந்த குருவானவரிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டான், மனம் வருந்தினான், திருச்சிலுவையை கேட்டு வாங்கி அதை முத்தம் செய்தபின் தன்னுடைய மரணத்தை ஏற்றுக் கொண்டான்.
சிறிய செபம் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது
இவர் தான் இருந்த இடத்தில் தனக்குள் இருந்த துன்பங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு செப, தப வாழ்க்கையின் வாயிலாக நற்செய்தி அறிவுப்பணியை செய்தார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மத்தேயு 18:1-5) நீங்கள் மனம் திரும்பி சிறு பிள்ளைகள் போல் ஆகாவிட்டால் விண்ணரசில் புகமாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் என்கிறார் இயேசு.
குழந்தையைப் போல தாழ்த்திக் கொள்ளக்கூடிய மனப்பான்மை நம்மை உயர்த்தும்.
எல்லாம் தெரிந்தும் நான் ஒன்றும் இல்லை என்ற மனப்பாங்கு இங்கு பலரிடம் இருப்பதில்லை.
எதுவும் தெரியாதவராய் இருந்தாலும் கூட எல்லாம் தெரிந்தவர் போல காட்டிக் கொள்ளக்கூடிய மனப்பாங்கு இங்கு அதிகமாக இருக்கிறது. (தற்பெருமை, தலைக்கணம், வீண் விவாதம், அகங்காரம் ஆகியவை அழிவுக்கான வழிகள்).
தாழ்ச்சி என்பது கோழைத்தனத்தின் அடையாளம் அல்ல. தாழ்ச்சி என்பது துணிவின் அடையாளம்.
சிறுபிள்ளைத்தனம் என்பது வேறு, குழந்தையின் உள்ளம் என்பது வேறு.
சிறுபிள்ளைத்தனம் என்பது எதையும் புரிந்து கொள்ளாமல் செயல்படுவது. ஆனால் குழந்தையின் உள்ளம் என்பது கள்ளம் கபடு இல்லாதது.
புனித குழந்தை தெரசாவிடம் தாழ்ச்சி நிறைந்த உள்ளம் இருந்தது. எனவே தான் அறைக்குள் இருந்தவாறு தான் பட்ட வேதனைகளுக்கு மத்தியிலும் தன் பாடுகளை இயேசுவிடம் ஒப்படைத்து பலரின் மனமாற்றத்திற்காக அவர் உழைத்தார்.
இவர் மறைசாட்சியாக மரிக்கவில்லை ஆனால் பலரின் மனமாற்றத்திற்காக உழைத்தார்.
நம் உள்ளமும் தாழ்ச்சியை ஆடையாய் அணியட்டும். அதன் வழியாக நம்மீது ரோசா பூக்கள் பொழியப்படட்டும்.
(நான் விண்ணிலிருந்து ரோசா பூக்களை உங்கள் மீது பொழிவேன் - புனித குழந்தை இயேசுவின் தெரேசா)
No comments:
Post a Comment