பொதுக் காலம் 24ஆம் வாரம்
18.09.2024 - புதன் கிழமை
"நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம்; பொல்லாதவர்களாய் வாழ்ந்து உம்மை எதிர்த்து நின்றோம். உம் கட்டளைகளையும் நீதிநெறிகளையும் கைவிட்டோம்" - தானியேல் 9:5
எல்லா மனிதரிடமும் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. மற்ற மனிதரிடம் இருக்கக்கூடிய நன்மையை காண ஆரம்பித்தால் தீமை காணாமல் போய்விடும். மற்றவரின் தீமையை மட்டுமே சுட்டிக் காட்டினால் அவர் வளர்ச்சியை காண்பது கடினம்.
சில இடங்களில், சில நேரங்களில் பொருள் உணர்ந்து மற்றவரின் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். எல்லா இடத்திலும் எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொன்னால் அவர்கள் கேட்க மாட்டார்கள்.
எங்கு? எப்படி? எதை? பேச வேண்டும் என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும்.
குற்றம் காணும் மனநிலை மறைந்தால் நன்மைத்தனம் நம்மிலும் மேலோங்கும்.
(மற்றவர்கள் சொல்வதை புரிந்து கொள்ளாமல் ஆமா சாமி! போடுவதும் தவறு. சரியாக சொன்னதை எதிர்த்து நிற்பதும் தவறு)
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 7:32:35) திருமுழுக்கு யோவானை பேய் பிடித்தவன் என்றவர்கள், இயேசுவை பாவிகளுக்கும் வரிதண்டுபவர்களுக்கும் நண்பன் என்கிறார்கள். திருமுழுக்கு யோவானுடைய இவ்வுலக வாழ்வையும், இயேசு கிறிஸ்துவின் இவ்வுலக பயணத்தையும் புரிந்து கொள்ளாதவர்கள் அவர்களை எதிர்மறைக் கண்ணோட்டத்தோடு பார்த்தார்கள்.
நான் போகிற பாதையிலே எல்லோரும் வரவேண்டும் என்பது சரியான பார்வை அல்ல. எனக்கு ஒன்று சரியாகப்படுகிறது நான் அதை செய்கிறேன். மற்றவருக்கு மற்றொன்று சரியாகப்படும், அதை அவர் செய்ய நான் தடையாய் இருக்கக் கூடாது.
நான் மட்டும் தான் சரி என்ற பார்வை எல்லாவற்றையும் தவறாக பார்க்க வைக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்திலும் நாங்கள் குழல் ஊதினோம் நீங்கள் கூத்தாடவில்லை, நாங்கள் ஒப்பாரி வைத்தோம் நீங்கள் அழவில்லை என்று சொல்லி விளையாடும் சிறுபிள்ளைக்கு ஒப்பான தலைமுறையினரை இயேசு சுட்டிக் காட்டுகிறார்.
நிறைகுறை இல்லாத மனிதர் இவ்வுலகில் இல்லை. (சபை உரையாளர் 7:20
குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை).
குறைகளை கூட நேர்மறையோடு அணுகினால் அவை சரி செய்யப்பட்டு நிறையாக மாறும். அப்படி இருக்கின்ற போது, நிறைவோடு செய்யக்கூடிய காரியங்களையும் குறையோடு பார்க்கக்கூடிய மனநிலை சரியான பார்வை அல்ல.
நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர் செய்வது சரியானதாக இருந்தால் அதை பாராட்டும் மனப்பாங்கு நமக்குத் தேவை. (பாராட்டாவிட்டாலும் மட்டம் தட்ட கூடாது)
எல்லாம் நமக்கு பிடித்தது போல மாற வேண்டும் என்ற ஆசை கூடாது. மாறாக எல்லாம் நலமாய் அமைய வேண்டும் என்ற எண்ணம் நம்மில் உருவாக வேண்டும்.
எதிர்மறையை விடுத்து நேர்மறையோடு வாழ்வோம். விருப்பு வெறுப்புகளை கடந்து நன்மை செய்வோம், நல்லதை பெறுவோம்.
No comments:
Post a Comment