24_09

இயேசுவின் நற்செய்தி பாகுபாட்டை களைந்தது...

பொதுக் காலம் 24ஆம் வாரம்

20.09.2024 - வெள்ளிக் கிழமை

"நம்பிக்கையால் அவர்களுடைய உள்ளங்களைத் தூய்மைப்படுத்தினார். நமக்கும் அவர்களுக்கும் இடையே அவர் எந்த வேறுபாடும் காட்டவில்லை" - திருத்தூதர் பணிகள் 15:9

நற்செய்தி அறிவிப்பு பணி இரண்டு வகையில் நடைபெறும். ஒன்று நாம் அந்த நற்செய்தியை வாழ்க்கையாலும் வார்த்தையாலும் அறிவிப்பதன் வழியாக, மற்றொன்று அந்த நற்செய்தி அறிவிப்பு பணியை செய்வதற்கு நம்மால் இயன்ற உதவியை செய்வதன் வழியாக. 

நற்செய்தி அறிவிப்பு என்பது இயேசுவின் வாழ்வை (நன்மையை) மற்றவருக்கு அறிவித்து, அந்த நல்வாழ்வை மற்றவர்கள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்வது.

திருத்தூதர் பணிகள் 10:38 இவ்வாறு சொல்கிறது, "கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார்". 

சென்ற இடமெல்லாம் இயேசு நன்மை செய்து கொண்டே சென்றார் என்பதுதான் நற்செய்தி/நல்ல செய்தி.

இன்றைய நற்செய்தி வாசகத்திலும் (லூக்கா 8:1-3) இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை பறைசாற்றினார். அவருடைய பணியில் பெண்களும் பங்கு பெற்றனர். யூத சமூகத்தால் அடிமைகளாக கருதப்பட்ட அந்த பெண்கள் இயேசுவின் பணி வாழ்வில் உடன் இருந்தார்கள், இந்த பணி வாழ்விற்கு தேவையானவற்றை பகிர்ந்தும் வாழ்ந்தார்கள். 

நற்செய்தி அறிவிப்பு செய்ய இவர்தான் தேவை, இவரால்தான் முடியும் என்று இல்லை. நல் மனமும் ஆற்றலும் சிந்தனையும் இருந்தால் போதும். 

ஆண், பெண் சமத்துவம் இன்றும் தேவையான ஒன்றாக இருக்கிறது. சில இடங்களில் பெண் ஆதிக்கம் சில இடங்களில் ஆணாதிக்கமும் தலைதூக்கத்தான் செய்கிறது. இந்த ஆதிக்கம் என்பது நல்லவற்றை செய்ய தடையாக இருக்கிறது.

யாரும் யாருக்கும் குறைந்தவரும் அல்ல உயர்ந்தவரும் அல்ல என்ற சிந்தனை மனதினுள் ஆழமாய் பதியாத வரை பாகுபாடு குறையப்போவதில்லை. 

தன்னைவிட வலிமை குறைந்தவர் என்று மற்றவரை குறைத்து மதிப்பிடாத செயல் ஒரு நற்செயல் தான்.

தன்னைப் போல மற்றவரையும் அன்பு செய்வதும் ஒரு நற்செயல்தான். 

தனிமையில் தவிக்கின்றவருக்கு ஆறுதலான வார்த்தை சொல்வதும் நற்செயல்தான். 

இயேசுவின் நற்செய்தி சமத்துவத்தை முன்னிறுத்துவது. சமய, சமூக சீர்கேட்டை எதிர்ப்பது.

நாம் நம்முடைய வாழ்வில் பாகுபாட்டை களைந்து, இயேசுவின் வார்த்தையை நம் வாழ்க்கையாகுவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...