பொதுக் காலம் 22ஆம் வாரம்
02.09.2024 - திங்கட் கிழமை
"அவர்கள் எந்தப் படைப்புகளைத் தெய்வங்களாகக் கருதினார்களோ அவற்றாலேயே தண்டிக்கப்பட்டார்கள்; ஆகையால் துன்புற்று எரிச்சலுற்றார்கள்; தாங்கள் ஒரு காலத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்தவரையே இப்பொழுது உண்மையான கடவுள் என்று அறிந்து ஏற்றுக்கொண்டார்கள். எனவே மிகக் கடுந்தண்டனை அவர்கள்மேல் வந்து விழுந்தது" - சாலமோனின் ஞானம் 12:27
குடும்பத்தில் பிரச்சனையும் சவால்களும் எதிர்ப்புகளும் வருவது எதார்த்தம். அதே போல குடும்பத்தில் மகிழ்ச்சியும் புரிந்து கொள்ளுதலும் விட்டுக் கொடுத்தலும் ஏற்றுக் கொள்ளுதலும் இருக்கத்தான் செய்கிறது.
எல்லோர் வீட்டிலும் எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக் கொள்வதில்லை. பிள்ளைகள் பெற்றோரை, பெற்றோர்கள் பிள்ளைகளை, கணவன் மனைவியை, மனைவி கணவனை என்று சொல்லி இங்கு ஏற்றுக்கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல் வாழும் நபர்கள் ஏராளம்.
ஒருவர் புரிந்து கொண்டாலும் மற்றவர் புரிந்து கொள்ளாததால் இங்கு பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டால் இங்கு குழப்பம் என்பது இல்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 4:16-30) இயேசு தன் சொந்த ஊர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மற்றவர்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டதைப் போல கூட இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளவில்லை.
எப்போதுமே உள்நாட்டு பொருளுக்கு மதிப்பு குறைவாக தான் இருக்கும். வெளிநாட்டில் இருந்து அதிக விலைக்கு பொருளை வாங்கி வருகின்ற போது அது மதிப்பு மிக்கதாக தோன்றுகிறது. எப்போது உள்நாட்டுக்கு மதிப்பு கூடும்? பஞ்சம், வறுமை, பட்டினி வருகின்ற போது தான் உள்நாட்டின் பொருளின் மதிப்பு உணர்த்தப்படும்.
இயேசு பழைய ஏற்பாட்டில் நடந்த இரண்டு சம்பவங்களை எடுத்துச் சொல்கிறார். சீதோனைச் சார்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த கைம்பெண்ணிடம் அனுப்பப்பட்ட எலியா, சிரியாவை சார்ந்த நாமான்.
எலியா இறைவாக்கினர் சாரிபாத்து கைம்பெண்ணிடம் அனுப்பப்படுகிறார். இஸ்ரயேலில் பல தொழுநோயாளர்கள் இருந்த போதிலும் சிரியாவை சார்ந்த நாமானுக்கே தொழுநோய் நீங்கியது.
கடவுளின் திருவுளம் இஸ்ரயேலை கடந்தும் வெளிப்பட்டது. கடவுளை ஏற்றுக் கொண்டோருக்கு எல்லாம் நலமாய் அமைந்தது.
இவற்றை சொன்னபோது தொழுகை கூடத்தில் இருந்தவர்கள், இயேசுவின் சீற்றம் கொண்டு அவரை கீழே தள்ளிவிட மலை உச்சிக்கு அழைத்து செல்கின்றனர்.
இங்கு ஏற்றுக் கொள்ளுதலும் இல்லை, புரிந்து கொள்வதும் இல்லை.
இயேசுவை யூதர் அல்லாத பலர் ஏற்றுக்கொண்டனர். அதனால் நலமான வாழ்வை பெற்றுக் கொண்டனர். இன்று கிறித்தவர்கள் இயேசுவை நம்பி ஏற்றுக் கொள்வதை விட கிறித்தவர் அல்லாதவர்கள் பலர் இயேசு மீது நம்பிக்கை கொண்டு அவரை கடவுளாக ஏற்றுக் கொள்கின்றனர்.
பரம்பரை கிறித்தவர்களாக இருப்பதால் என்னவோ, நம்முடைய வாழ்வில் இயேசுவை பிரதிபலிப்பது கடினமாக இருக்கிறது.
இயேசுவை ஏற்றுக் கொள்வோர் இயேசுவை பிரதிபலிக்க முடியும்.
இயேசுவை ஏற்றுக்கொள்வோர் வாழ்வும் ஒளி வீசும்.
No comments:
Post a Comment