பொதுக் காலம் 23ஆம் வாரம்
14.09.2024 - சனிக் கிழமை
சிலுவை என்றாலே நம் நினைவுக்கு வர வேண்டிய பகுதி, 1கொரிந்தியர் 1:18, "சிலுவை பற்றிய செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால் மீட்புப் பெரும் நமக்கோ அது கடவுளின் வல்லமை".
குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த தண்டனை தான் சிலுவைச் சாவு.
அந்த சிலுவை மரணம் கூட இயேசுவின் கரம் பட்டதால் புனிதம் பெறுகிறது.
உலகத்தின் பார்வையில் சிலுவை மடமையாக பார்க்கப்பட்டது. ஆனால் கடவுள் உலகம் மடமையென கருதுபவற்றை தேர்ந்து கொண்டார்.
கடவுளின் பார்வை வேறு, மனிதரின் பார்வை வேறு.
சிலுவை சுட்டிக் காட்டுவது தியாகம், தற்கையளிப்பு, அன்பு.
தவறுகளுக்காக தண்டனை பெற்றவர்கள் ஒருபுறம். தவறே செய்யாமல் தண்டனை பெற்ற இயேசு மறுபுறம்.
மற்றவர்களுக்கு சுமை கொடுத்து வாழ்க்கையில் சுகமாய் வாழ மனிதர்கள் எண்ணுகிறார்கள். ஒரு சிலர் தான் மற்றவர்களின் சுமைகளை இணைந்து சுமக்கிறார்கள்.
இந்த உலகில் பலர் பலருக்கு சிலுவையாக இருக்கின்றனர். ஆனால் மனதிற்கு பிடித்தவர்கள் தரக்கூடிய சிலுவை கூட சுகமாக இருக்கிறது. காரணம், விரும்பி ஏற்கப்படும் எல்லா சிலுவையும் சுகம் தருபவை தான்.
இன்று குடும்ப உறவுகள் பெரும் பார சுமையாக இருக்கிறது. குடும்பத்தில் இருக்கக்கூடிய ஒருவர் மற்றவரை அனுசரித்துச் செல்வதும் இன்று சிலுவையாக இருக்கிறது.
யாரை நம்புவது? யாரை ஏற்றுக் கொள்வது? யாரிடம் பகிர்ந்து கொள்வது? எல்லாமே கேள்வி என்னும் சிலுவையாக இருக்கிறது.
வாழ்க்கையே தொடர் சிலுவையாக இருக்கிறது.
ஆனால் இயேசுவின் சிலுவை என்பது வல்லமையை வெளிக்காட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால்தான், ஆலயத்தின் திருப்பீடத்தில் முதன்மை இடத்தை சிலுவை பிடித்திருக்கிறது.
சிலுவையை யாரும் விரும்பி ஏற்பதில்லை ஆனால் சிலுவையில்லாத வாழ்க்கை என்பது யாருக்கும் இல்லை.
சிலர் சிலுவையை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வதனால் சிலுவையின் பாரம் அவர்களை அழுத்துவதில்லை.
முடியுமானால் இந்த துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும், ஆனாலும் என் விருப்பப்படி அல்ல. உமது திருவுளப்படி என்று தன்னை கையளித்த இறைமகன் இயேசு கூட அந்த சிலுவை பாடுகளை, துன்பங்களை ஏற்றுக் கொண்டார்.
உலக ஞானம் நமக்கு மீட்பு தரப் போவதில்லை. ஆனால் சிலுவையின் படிப்பினை நமக்கு மீட்பு தரும்.
சிலுவையின் தியாகம் நம்மில் வெளிப்பட்டால் நம் துயரங்களிலிருந்து வாழ்வு வெளிப்படும். நம்மை கரைத்து மற்றவர் வாழ்வு உயர சிலுவை என்னும் ஆயுதத்தை முன்னிலைப்படுத்துவோம்.
மற்றவர்களின் வாழ்வில் சிலுவையாக அல்ல, மற்றவர்களோடு இணைந்து சிலுவையை சுமக்கும் நபர்களாக மாறுவோம்.
வரலாற்றுப் பின்னணி
312 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 20 ஆம் நாள் உரோமை ஆண்டு வந்த கான்ஸ்டன்டைன் என்ற மன்னன் மாஜென்சியஸ் என்ற மன்னனோடு போர் தொடுக்க சென்றான். அவ்வாறு அவன் எதிரி நாட்டுப் படையோடு போர் தொடுக்க செல்லும்போது சிலுவை பொறித்த கொடிகளை ஏந்தி சென்றான். இதனால் அவன் அந்த போரில் வெற்றி பெற்றான். அதனால் அவன் கிறித்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்தான்.
இந்த நிகழ்வு நடந்து 13 ஆண்டுகள் கழித்து கான்ஸ்டன்டைன் மன்னனின் தாயார் புனித ஹெலனா என்பவர் எருசலேம் நகருக்கு புனித பயணம் மேற்கொண்டார். அவர் கல்வாரி மலைக்குச் சென்று அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட போது மூன்று சிலுவையில் இருப்பதை கண்டார்.
மூன்று சிலுவையில் எது இயேசு கிறிஸ்து அறையப்பட்ட சிலுவை? என்ற குழப்பம் அவருக்கு ஏற்பட்டது.
எனவே அவர் ஒரு கை சூம்பிய மனிதனை அழைத்து அந்த மூன்று சிலுவைகளையும் தொடுமாறு சொன்னார். உடனே மனிதன் மூன்று சிலுவைகளையும் தொட்ட போது அதிலிருந்த ஒரு சிலுவையில் இருந்து ஆற்றல் வெளிப்பட அம்மனிதனுடைய கை நலம் அடைந்தது.
அவர் திருச்சிலுவையை உரோமையில் உள்ள கோயிலில் நிறுவிய நாள் 326ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் அதிலிருந்து திருச்சிலுவையின் மாட்சி விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment