24_09

துன்பத்தினால் நம்பிக்கை சோதிக்கப்படுமா?


பொதுக் காலம் 24ஆம் வாரம்
15.09.2024 - ஞாயிற்றுக் கிழமை

"உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும்" - யாக்கோபு 1:3

இந்த உலகில் ஏன் துன்பம் இருக்கிறது? துன்பத்தை கடந்த இன்பமான வாழ்வை மட்டும் ஒருவர் என்றென்றும் அனுபவித்திட முடியுமா? இப்படி வாழ்க்கையில் துன்பம் மட்டுமே இருந்தது என்றால் எப்படி வாழ்க்கை வாழ முடியும்? கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறாரே? இதுபோன்ற கேள்விகள் எல்லோருடைய வாழ்க்கையிலும் எழத்தான் செய்கிறது.

கடவுளை அவ்வபோது தேடக்கூடியவர்கள் கூட, கடவுள் ஏன் என்னுடைய வாழ்க்கையில் இவ்வளவு துன்பத்தை கொடுக்கிறார்? என்று வாழ்க்கையில் ஒரு தடவையாவது கடவுளை கேள்வி கேட்கத்தான் செய்கிறார்.

இவ்வுலகில் மூன்று வகையில் துன்பம் அல்லது சோதனை வருகிறது. முதல் வகை சோதனைக்கு காரணம் தனிப்பட்ட நாம் தான் (யாக்கோபு திருமுகம் 1:14 இவ்வாறு சொல்கிறது,
ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது),  
இரண்டாம் வகை சோதனைக்கு நம்மோடு இருக்கக்கூடிய மனிதர்கள் காரணம் (சபை உரையாளர் 8:9 இவ்வாறு சொல்கிறது,
உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது),
மூன்றாம் வகை சோதனை என்பது நம் நம்பிக்கையை புடமிடக்கூடியது. (எசாயா 48:10 இவ்வாறு சொல்கிறது, 
நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்).

சில மனிதருடைய தியாகம் நிறைந்த துன்பம் பல மனிதர்களுக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது. தவறே செய்யாத நிலையிலும் மற்றவர்கள் கூனிக் குறுகி நிற்க கூடாது என்பதற்காக துன்பத்தை குற்றத்தை ஏற்றுக் கண்ட மாமனிதர்கள் இவ்வுலகில் உண்டு. 
அந்த வகையில் தான் இயேசு பாவமே செய்யாத நிலையில் பாவிகளுக்காக தலை கூனிந்து நின்றார்.

இன்றைய  முதல் வாசகத்தில் (எசாயா 50:5-9) துன்புறும் ஊழியர் பற்றி எசாயா விவரிக்கிறார். அடிப்போருக்கு முதுகையும் தாடியை பிடுங்குவோருக்கு தாடையையும் ஒப்புவித்த துன்புறும் ஊழியர், காறி உமிழ்வோருக்கு முகத்தை மறைக்கவில்லை.
இந்த துன்புறும் ஊழியரை போலத்தான் தவறே செய்யாத பல மனிதர்கள் இன்று ஏமாற்று பேர்வழிகளால் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

இரண்டாம் வாசகம் (யாக்கோபு 2:14-18) செயல்களோடு கூடிய நம்பிக்கையை பற்றி எடுத்துச் சொல்கிறது. நம்பிக்கை தன்னிலே செயல் வடிவம் பெறவில்லை என்றால் அது உயிர் அற்றது. இன்று பலர் கடவுள் நம்பிக்கை இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த நம்பிக்கையை அவர்கள் செயலில் காட்டுவதில்லை. 
நம்பிக்கை செயல் வடிவம் பெறுகின்ற போது பல துன்பங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதனால்
 நம்பிக்கை சொல் வடிவிலேயே நிலைத்திருக்கிறது. 

இது நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:27-35) இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிக்கிறார். தன்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் சிலுவையை தூக்கிக் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார். இந்த சிலுவை என்பது இவ்வுலகில் கிறிஸ்துவின் விழுமியங்களை நாம் கடைப்பிடிப்பதனால் நம்மீது சுமத்தப்படும் துன்பத்தை குறிக்கிறது. 

இறைமகன் ஏன் பாடுகளை ஏற்க வேண்டும்? என்பது கேள்வியாக இருக்கிறது. பாவம் தவிர அனைத்திலும் மனிதராக இருந்தவர் மனித நிலையிலேயே துன்பங்களை அனுபவிக்க தன்னை கையளித்தார். அதைத்தான் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:6-7 இவ்வாறு சொல்கிறது, கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாய் இருக்கும் நிலையை வலிந்து பற்றிக் கொண்டிருக்க வேண்டியது ஒன்றாக கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார்".

மனிதர்கள் இவ்வுலகில் துன்பங்களை ஏற்றுக் கொள்ள இயேசு முன் உதாரணமாய் இருக்கிறார். நீதிக்காக நேர்மைக்காக நாம் துன்புற்றோம் என்றால் கிறிஸ்துவின் துன்பத்தில் நாம் பங்கேற்பதாக அர்த்தம். 
ஆனால் நீதிக்காக நேர்மைக்காக துன்புராமல் நம்முடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் துன்பங்களை ஏற்றுக் கொண்டால் அது கிறிஸ்துவின் துன்பமாகாது. இங்கு நம்பிக்கையும் புடமிடப்படாது. 

நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும் அந்த செயல் வடிவம், நம்மை துன்பத்தின் வழியாக புடமிட வேண்டும். 

(கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 10:13 இவ்வாறு சொல்கிறது,
"உங்களுக்கு ஏற்படுகின்ற சோதனை பொதுவாக மனிதருக்கு ஏற்படும் சோதனையே அன்றி வேறு அல்ல. கடவுள் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களுடைய வலிமைக்கு மேல் நீங்கள் சோதனைக்குள்ளாக விடமாட்டார்; சோதனை வரும்போது அதைத் தாங்கிக்கொள்ளும் வலிமையை உங்களுக்கு அருள்வார்; அதிலிருந்து விடுபட வழி செய்வார்".)

ஒவ்வொரு துன்பமும் ஒரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறது. பெற்றுக்கொண்டு அனுபவத்தின் வழியாக மீண்டும் அதே தவறை செய்யக்கூடாது என்பதுதான் நாம் மனதில் கொள்ள வேண்டும். ஆனால் அடிகள் பட்டாலும் மீண்டும் மீண்டும் அதே தவறுகளை நாம் செய்து துன்பத்தை பெருக்கிக் கொள்கிறோம். 

நான் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மற்றவரின் வாழ்வை அழிப்பது எந்த வகையில் நியாயம்?
மற்றவரின் துன்பத்தில் பங்கேற்க முடியாவிட்டாலும் மற்றவருக்கு துன்பத்தை கொடுக்காமல் இருப்பது கிறித்துவத்தின் உயர்ந்த பண்பு.

நம் துன்பங்கள் நம்மை நம்பிக்கையில் உறுதிப்படுத்த வேண்டும். சிறிதளவு துன்பம் வந்ததும் நம்பிக்கையிலிருந்து பிறழ்ந்து போவது கிறித்தவ வாழ்வு ஆகாது என்பதை உணர்வோம். 

எத்தனை இடர்கள் துன்பங்கள் வந்தாலும் என் இலக்கு இயேசுவோடு இணைந்து நடப்பது தான் என்பது நம் வாழ்வின் நோக்கமாகட்டும்.
துன்பங்கள் வழியாக நம்முடைய நம்பிக்கை புடமிடப்படட்டும்...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...