25_02

குழந்தைகளை தடுக்க வேண்டாம்...


பொதுக் காலம் 7ஆம் வாரம்

01.03.2025 - சனிக் கிழமை 

"மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது" - திருப்பாடல்கள் 131:2

குழந்தைகள் கற்றுக் கொள்வதில்லை மாறாக, கற்றுக் கொடுக்கிறார்கள் என்று சொல்லலாம். எதை கற்றுக் கொடுக்கிறார்கள்? எதையெல்லாம் கற்றுக் கொண்டார்களோ அதையெல்லாம் திரும்ப கற்றுக் கொடுக்கிறார்கள்.

குழந்தைகள் மாசற்றவர்கள் என்பது அவர்களின் கள்ளம் கபடமற்ற உள்ளத்திலிருந்து வெளிப்படுகிறது. பெற்றோர்கள் சொல்வதை ஒளிவு மறைவு இல்லாமல் அப்படியே வெளியே சொல்லி விடுவார்கள் (எ.கா. - எங்க அம்மா/அப்பா உங்களிடம் பேசக் கூடாதுன்னு சொன்னாங்க, உங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொன்னாங்க).

எதெல்லாம் குழந்தைகளின் உள்ளத்தில் சிறிய வயதில் விதைக்கப்பட்டதோ அது ஆழ்மனதில் பதிகிறது. 

வெறுப்புகளை, கோபத்தை, உணர்வுகளை குழந்தைகள் முழுவதும் வெளியே காட்டிக் கொள்வது இல்லை. நாட்கள் செல்ல செல்ல அது வெளிவர ஆரம்பிக்கிறது.

நல்லதை விதைத்தால் நல்லது விளையும், கெட்டதை விதைத்தால் கெட்டது தான் விளையும்.

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க நாம் விடுவதில்லை. பெற்றுக் கொண்டதை அவர்கள் பின்னாளில் நமக்கே திருப்பிக் கொடுக்கிறார்கள்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:13-16) சிறுபிள்ளைகளை இயேசுவிடம் அழைத்து வந்த போது சீடர்கள் அவர்களை அதட்டினர், தடுத்தனர்.

இயேசு சீடர்கள் மீது கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று சொன்னார்.

இறைவன் வழங்கும் ஆசிர் மக்கட்செல்வம். இறைவன் வழங்கும் மற்றொரு பெரிய ஆசிர் குழந்தை உள்ளம்.

குழந்தை உள்ளம்/ மனநிலை நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் பேறுபெற்றவர்களே!

குழந்தைகளையும் தடுக்க வேண்டாம் குழந்தை உள்ளதையும் தடுக்க வேண்டாம்.

இறைவன் தந்த வாழ்வை போட்டி, பொறாமையற்ற நல்லாசிரோடு கழிப்போம். பெற்றுக் கொண்ட அருள் வாழ்வில் நிலைத்து நிற்போம்...

கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்...

பொதுக் காலம் 7ஆம் வாரம்

28.02.2025 - வெள்ளிக் கிழமை 

"இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.” - மத்தேயு நற்செய்தி 19:6

பிரிவு இரண்டு வகையில் வருகிறது, ஒன்று இறப்பு இன்னொன்று மனிதரின் சூழ்ச்சியால். சில பிரிவு மகிழ்ச்சியை அளிக்கிறது, சில பிரிவு துயரத்தை வருவிக்கிறது. 

சில குடும்பங்கள் காரணம் இல்லாமலே பிரிந்துக் கிடக்கிறது. சில குடும்பங்கள் இணைய முடியாமல் தவிக்கிறது. சில மனிதர்களின் தந்திரம் நிறைந்த செயல்பாடு பல குடும்பங்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்து விட்டது. மற்றவர்கள் சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்பி செயல்படுபவர்கள் துயரத்தை தான் அனுபவிக்க வேண்டி இருக்கும்.

திருமணத்திற்கு முன் பல காரியங்களை செய்து, நன்கு பேசி, நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகின்றன. நல்ல நேரம் பார்ப்பவர்கள் இருமணம் இணைந்துள்ளதா என்று பார்ப்பதில்லை. 

கர்வம், ஆணவம், தற்பெருமை இன்று பல குடும்பங்களை பிரித்து வைத்துள்ளது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:1-12) பரிசேயர் இயேசுவை அணுகி, கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா? என்று கேட்டு சோதித்தனர்.

"கணவனோ மனைவியோ தவறு செய்கின்ற போது ஒருவர் மற்றவரை விலக்கி விடுவது முறையா?" என்று கேள்வி அமைந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.

அது ஆணாதிக்க சமூகம், எனவே தவறு செய்தது ஆணாக இருந்தாலும் கூட பெண்ணை தான் குற்றவாளியாக்கி அழகு பார்க்கும்.

இயேசுவின் பதிலோ, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்".

கடவுள் இணைத்ததை மனிதர் ஒருபோதும் பிரித்தல் ஆகாது.

இன்று கணவனோ மனைவியோ சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் கூட குடும்பத்தினர் இணைய விடுவதில்லை.

தாய் தந்தை இருவரும் பிரிந்து வாழும் நிலையை காணும் குழந்தையின் மனம் மிகவும் பாதிக்கப்படும் என்பதை கல் நெஞ்சங்கள் உணர்ந்துக் கொள்வதில்லை.

உணர்வற்ற மனிதர்களால் இன்று பலர் பிரிந்தே இருக்கிறார்கள்.

கடவுள் இணைத்ததை பிரித்த/பிரிக்கின்ற மனிதர் கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறார்.

இடையூறாய் இருப்பவற்றை நீக்குக...

பொதுக் காலம் 7ஆம் வாரம்

27.02.2025 - வியாழக் கிழமை 

"எவரும் குறைகூறா வண்ணம் எங்கள் திருப்பணியை ஆற்ற விரும்புகிறோம். எனவே நாங்கள் எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை" - 2 கொரிந்தியர் 6:3

பாதையில் நடக்கிறோம் இடையில் பெரிய கல் ஒன்று இடையூறாய் இருக்கிறது என்றால் அதை அப்படியே விட்டு விட்டு கடந்து செல்ல மாட்டோம். ஓரமாக போட்டு விட்டு தான் செல்வோம்.

திரும்பி வருகிற போது அது மீண்டும் நமக்கு தடங்களாக இருக்கலாம் அல்லது மற்ற நபர்களுக்கு அது இடையூறாக இருக்கலாம் என்பதால் அதை நீக்கி விடுவோம்.

எல்லா மனிதருடைய வாழ்க்கையிலும் எல்லா  நிரந்தரம் அல்ல. நிரந்தரம் என்று நாம் எண்ணிக் கொண்டு இருப்பது எல்லாமே தற்காலிகம் தான்.

தற்காலிக வாழ்க்கையிலும் பல இடையூறுகள் இருக்க தான் செய்கின்றன. நம்முடைய வாழ்க்கையில் எது அவசியமோ அதை விட்டு விடுகிறோம், எது தேவையில்லையோ அதை நாம் பற்றிக் கொள்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:41-50) என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது என்கிறார் இயேசு.

நிலை வாழ்வுக்கு, இறையாட்சிக்கு எவையெல்லாம் தடையாக இருக்கிறதோ அவற்றை எல்லாம் நீக்கிவிட இயேசு பணிக்கிறார்.

நிலைவாழ்வுக்கு முழு உடல் அவசியமல்ல, மாறாக முழு ஆன்மாவும் தூயதாய் இருக்க வேண்டும்.

பலி பொருள் உப்பால் தூய்மை பெறுவது போல நாம் நெருப்பால் தூய்மை அடைய வேண்டும்.

அந்த நெருப்பு நம்மில் இருக்கும் கசடு என்னும் இடையூறுகளை அகற்றும்.

நல்லவர்களை போல காட்டிக் கொள்வதை யாரும் செய்யலாம். நல்லவர்களாக, நன்மை செய்பவர்களாக வாழ்வது தான் இங்கு அவசியம்.

நம் வாழ்வு நமக்கும் சரி மற்றவர்களுக்கும் சரி இடையூறாக அமைந்துவிட கூடாது.

கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் நன்மைத்தனம் வெளிப்பட தீமை என்னும் இடையூறுகள் அளிக்கப்படும்... அதற்கு முன் நாம் நம்மை சரி செய்துக் கொள்வோம்.

யாருக்கும் எதிராக இருக்க வேண்டாம்...

பொதுக் காலம் 7ஆம் வாரம்

26.02.2025 - புதன் கிழமை

"தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே" - நீதிமொழிகள் 24:28

இங்கு பலர் நல்லதை செய்து பலருக்கு எதிராக/எதிரியாக இருக்கிறார்கள். எதிரியாக யாரும் விரும்புவதில்லை, ஆனால் எதிரியாக்கப்படுகிறார்கள். 

யாருக்கும் எதிராக இருக்க வேண்டாம் என்றால் யார் எதை செய்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதல்ல அதன் அர்த்தம். தவறை சுட்டிக் காட்டி விட்டு கடந்து சென்று விட வேண்டும். திருந்துவதும் வருந்துவதும் அல்லது அவர் அப்படியே இருப்பதும் அவர் பாடு...

எதிராக இருப்பதன் இன்னொரு அர்த்தம் யாருக்கு எது நடந்தாலும் கண்டுக் கொள்ளாமல் இருப்பதும் தான். அடுத்தவர் எப்படி போனால் எனக்கு என்ன என்பது? அடுத்தவரின் வளர்ச்சிக்கு தடையாய் இருப்பதே, அடுத்தவரின் வளர்ச்சியை எதிர்ப்பதே.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9: 38-40) என் பெயரால் வல்ல செயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார் என்று யோவானிடம் சொல்கிறார் இயேசு.

இங்கு எதிராக இராதவர் என்பது ஒரே மனநிலை கொண்டிருப்பவரை குறிக்கிறது. நல்லது செய்பவர்களை இயேசு தடுத்து நிறுத்தவும் இல்லை, தீயது செய்தவர்களை அவர் கண்டுக் கொள்ளாமலும் இல்லை.

இயேசு தீமைக்கு எதிராக இருந்தார், தீயவர்களுக்கு அல்ல. இயேசு தீமையை எதிர்த்தார், தீயவர்களை அல்ல.

நல்லவர்கள் சார்பாகவும் தீமைக்கு எதிராகவும் இருக்க வேண்டும்.

நல்லது செய்பவர்களை தடுக்கும் மனநிலை ஒருபோதும் நம்மிடம் இருத்தல் ஆகாது. 

தன்னை முன்னிலைப்படுத்தாத மனநிலை...


பொதுக் காலம் 7ஆம் வாரம் 

25.02.2025 - செவ்வாய்க் கிழமை 

"ஆண்டவரின் ஆசியால் நான் முதன்மை நிலை பெற்றேன்; திராட்சைப்பழம் பறிப்போர் போலத் திராட்சை பிழியும் தொட்டியை நிரப்பினேன்" - சீராக்கின் ஞானம் 33:17

முன்னிலை, முதன்மை இவை இன்றைய காலங்களில் விலைக் கொடுத்தாவது பெறப்படுகின்றன. முதன்மை இருக்கை கிடைக்காத காரணத்தால் பல சண்டைகள், கொலைகள் அரங்கேறி இருக்கின்றன.

எனக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை, என்னை மதிக்கவில்லை என்று சொல்லி பல குடும்பங்கள் இன்று பிரிந்துக் கிடக்கின்றன. 

சம்பாதித்து கிடைக்காத மகிழ்ச்சி சிலர் நமக்கு கொடுக்கும் மரியாதையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் நியாயம்!

எதிர்பாராமல் எதையும் செய்தால் எதிர்பாரா நேரத்தில் எல்லாம் கிடைக்கும்... எதிர்பாராமல் கிடைக்கும் எதுவும் ஏமாற்றம் தராது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9: 30-37) இயேசு தன் பாடுகளை தன்னுடைய சீடர்களுக்கு முன்னறிவிக்க, அவர்களோ தங்களுள் பெரியவர் யார்? என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக்கொண்டு வந்தார்கள்.

ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும் என்று இயேசு அவர்களுக்கு பதில் மொழிந்தார்.

துயரத்திலும் துயரம் தன்னோடு இருப்பவர்கள் தன்னோடு சிந்தனை அளவிலும் செயல்பாட்டு அளவிலும் தன்னோடு இணைந்து பயணிக்காதது தான்.

இயேசுவின் முக்கியத்துவமும் சீடர்களின் முக்கியத்துவமும் வெவ்வேறாக இருந்தது. துன்பப்படாமல் முன்னுக்கு வரவும் முதன்மை இடங்களையும் பெற அவர்கள் எண்ணினார்கள்.

பணமும் அதிகாரமும் சில மனிதர்களுக்கு முதன்மை இடங்களை பெற்றுக் கொடுத்து விடுகிறது என்பது சிலருக்கு முன்னுதாரணமாக இருக்கிறது.

இடையில் வந்தது இடையில் சென்று விடும். உழைக்காமல் பெறப்பட்டது உயர்ந்த இடத்தை கொடுக்கும் என்ற மாயை இறுதிவரை நிலைக்காது/நிறைவான மகிழ்வை கொடுக்காது.

நாம் நம்மை முன்னிலைப்படுத்தாது நம் கடமைகளை சரியாக செய்தால், அதுவே நம்மை உயர்த்தும்.

உயர்வும் முதன்மை இருக்கையும் பயிற்சி, முயற்சி, தாழ்ச்சி, செயல் வழியாக கிடைக்கட்டும்...

எங்களால் ஏன் இயலவில்லை?


பொதுக் காலம் 7ஆம் வாரம்

24.02.2025 - திங்கட் கிழமை 

"இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்." - மாற்கு 10:27

இயலாமை நம்முள் ஒட்டி பிறந்த குணநலன் அல்ல. இயலாமையை இல்லாமை ஆக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். என்னால் முடியாது? என்னால் எப்படி தனியாக செய்ய முடியும்? நான் செய்தால் சரிபட்டு வருமா? என்று நமக்குள் கேட்கப்படும் பல கேள்விகள் நம்மை இயலாமைக்கு அழைத்து செல்கிறது.

என்னால் முடியும் என்பது தலைக்கணம் ஆகாது, என்னால் மட்டும் முடியும் என்பதே தலைக்கணம். என்னால் மட்டும் முடியும் என்பதும் என்னால் ஏதும் முடியாது ஆகிய இரண்டும் தவறு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9: 14-29) தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த சிறுவனை இயேசு குணமாக்குகிறார். முதலில் அச்சிறுவன் இயேசுவின் சீடர்களிடம் தான் அழைத்து வரப்பட்டார். ஆனால் அவர்களால் இந்த தீய ஆவியை விரட்ட முடியவில்லை/இயலவில்லை.

இயேசு வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்.

எல்லா காரியங்களையும் அறிவாற்றலால் செய்து விட முடியாது, எல்லாக் காரியங்களையும் அனுபவத்தால் மட்டும் செய்து விட முடியாது. சில இடங்களில் அறிவும் அனுபவமும் இணைய வேண்டும்.

இயேசு வல்ல செயல் செய்ததற்கு அடிப்படையாக இருந்தது, இறை ஆற்றல், நலம் பெறுபவர்களின் நம்பிக்கை ஆகிய இரண்டும் இணைந்தது தான் காரணம்.

இறை ஆற்றல் அவரிடம் இருந்தும் கூட அவரது சொந்த ஊரில் அவரால் வல்ல செயல் செய்ய இயலவில்லை. அதற்கு காரணம் அம்மக்களின் நம்பிக்கை குறைபாடு தான்.

ஆனால் இந்த வல்ல செயல் (தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த சிறுவனுக்கு நலமளிக்க) செய்ய, சீடர்களிடம் இறை ஆற்றல் இருந்தது, நலம் பெறுவோரிடம் நம்பிக்கை இருந்தது. அதற்கும் கூடுதலாக தேவைப்பட்டது இறைவேண்டல் நோன்பு. சீடர்கள் வல்ல செயல் செய்ய இவை அவசியமாக தேவைப்பட்டது.

எல்லோராலும் எல்லாம் இயலாது, ஆனால் எல்லோராலும் (ஏதாவது செய்ய) இயலும். சிலவற்றை தனியாக செய்ய இயலாது என்றால் பிறரின் ஒத்துழைப்போடு இணைந்து செய்யலாம்.

ஒன்றை செய்வதற்கு ஆற்றலும் ஆக்கமும் மனத்திடமும் தேவை.

தயக்கம் தள்ளி போடுதல் இவை குறையும் போது நம்மால் இயலாது என்று நாம் எண்ணுவதும் நம்மால் செய்ய இயலும். ஆற்றல், அறிவு, அனுபவம் ஆகியவற்றை இணைத்து ஆக்கம் நிறைந்த செயல்களை செய்வோம்... நம்மால் இயலும்; நம்மால் எல்லாம் கூடும்.

தீமைக்கு பதில் நன்மை செய்யலாமே!



பொதுக் காலம் 7ஆம் வாரம்

23.02.2025 - ஞாயிற்றுக் கிழமை 

"தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்" - உரோமையர் 12:17

இவ்வுலகில் பெற்றுக் கொண்ட நன்மைக்கு கைம்மாறாக நன்மை செய்கிறார்களோ இல்லையோ, தீமை செய்தோருக்கு 2 அல்லது 3 மடங்கு தீமை செய்து விடுவார்கள் மனிதர்கள்.

எதை நாம் எதிர்க்கிறோமோ அதை விட்டு நாம் அதிக தூரம் செல்கிறோம். இழப்பு என்பது எதிர்க்கப்படுபவருக்கு அல்ல யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு தான்.

இன்றைய முதல் வாசகத்தில் (1சாமுவேல்  26: 2, 7-9, 12-13, 22-23) தாவீதின் செயல் பாராட்டுதற்கு உரியது. தன் எதிரியான சவுல் உறங்கி கொண்டிருக்கும் போது அவன் ஆயுதங்களாலே சவுலை கொல்வதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் கூட, சவுல் கடவுளால் அருள் பொழிவு செய்யப்பட்டவர் என்பதற்காக அவரை கொலை செய்யாமல் விட்டுவிடுகிறார். 

எப்போது வாய்ப்பு கிடைக்கும்? எப்போ தீர்த்துக் கட்டலாம்? என்று ஓடிக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு மத்தியில் தாவீதின் செயல் நமக்கு வியப்பை தருகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1கொரிந்தியர் 15: 45-49) இரண்டு வகையான சார்பு நிலைகளை காண்கிறோம். 

1. விண்ணகம் சார்ந்த நிலை (ஆவிக்குரிய செயல்பாடு முன்னிறுத்தப்படும்)

2. மண்ணகம் சார்ந்த நிலை (ஊனியல்வு முக்கியத்துவம் பெறும்)

எல்லா இடத்திலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நற்செயல்களும் உண்டு தீச்செயல்களும் உண்டு.

நல்லவற்றை தேர்ந்து தெளிவது நம் கையில் இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6: 27-38) இயேசு முன்வைக்கும் கட்டளைகள் வியப்புக்கு உரியதாக இருக்கிறது. எதிரியை மன்னிக்க, அன்பு செய்ய, இருப்பதை கொடுக்க, எதிர்பாராமல் இருக்க, தீர்ப்பளிக்காது இருக்க, எதிரிக்கும் நன்மை செய்ய என்று எது மனித நிலையில் சாத்தியம் இல்லையோ அதை இயேசு முன் மொழிகிறார்.

இதை நாம் கடைபிடிக்கும் போது நமக்கான கைம்மாறு உண்டு என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். நாம் அளக்கும் அளவையால் தான் நமக்கும் அளக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.

இந்த உலகம் விண்ணகமாக மாறுவதற்கான வழி தான் இயேசு மேலே குறிப்பிட்டவை. 

மாற்ற இயலாது என்று எதுவும் இல்லை. மாறுவதற்கு தான் நாம் தயாராக இல்லை.

ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட மாற்றம் தான் மொத்த சமூக மாற்றம்.

தீமையை நன்மையால் வெல்ல முடியும் என்பதற்கு இயேசு மிக பெரிய உதாரணம்.

தனக்கு கொடுமை செய்தவர்களையும் அவர் சிலுவையில் மன்னித்தார். காரி உமிழ்ந்தவர்களையும் காயப்படுத்தியவர்களையும் நேசித்தார்.

இது தானே தீமைக்கு பதில் நன்மை.

பேதுரு எழுதிய முதல் திருமுகம் 3:9 இவ்வாறு சொல்கிறது, "தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்."

மற்றவர்கள் எப்படியோ நான் இயேசுவின் வழியில் நடப்பேன் என்ற மனப்பாங்கு இருந்தால் எத்தனை கொடுமைகள், துன்புறுத்தல்கள் நமக்கு முன் நின்றாலும் நன்மை செய்வதை தவிர மாற்று செயல்பாடு நம்மிடம் வராது.

துன்பங்களினால் பாறை திடம் பெற்றது...


பொதுக் காலம் 6ஆம் வாரம்

22.02.2025 - சனிக் கிழமை 

திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்

"சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்" - எபிரேயர் 10:33

கடவுளின் ஆற்றல் ஒவ்வொரு மனிதர் மீதும் பொழியப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப அல்ல நிறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தும் நபரை பொறுத்தே அது வெளிப்படும்.

கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 12:6,7 இவ்வாறு சொல்கிறது, "செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது".

கடவுளின் ஆற்றலை உணர்ந்தவர்கள் கடவுளின் பெயரை மாற்றிப்படுத்துவார்கள். உணராதவர்கள் உணர்வற்று போவார்கள்.

நேற்றைய நாளின் நற்செய்தியில் இயேசு பகிரங்கமாக கூறிய வார்த்தை, "பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்”.

கொடுக்கப்பட்டதற்கு கணக்கு கேட்கப்படும். நம் செயல்களை பொறுத்தே நாம் தலை நிமிர்ந்து நிற்பதும் தலை குனிவதும் உண்டாகும்.

இன்றைய நாளில் தாய்த் திருஅவை திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடத்தை நினைவுக் கூறுகிறது.

புனித பேதுரு அந்தியோக்கு நகரில் நற்செய்தி பணி செய்தபோது அந்நகரின் ஆளுநர் தியோப்பிலிஸ் பேதுருவை சிறைப்பிடித்து மிகவும் துன்புறுத்தினான். கொடுமைக்கு உள்ளான பேதுரு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்ட தொடங்கினார், " இயேசுவே! என் தலைவரே! எனக்கு எதற்கு இத்தகைய கொடிய தண்டனை? அதற்கு இயேசுவோ, "பேதுரு! நான் உன்னை ஒருபோதும் கைவிட்டு விடமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா? சிறிது பொறுத்திருந்து பார். எல்லாம் நல்லதாகவே நடக்கும்" என்று சொன்னார்.

பேதுரு சிறையில் அடைக்கப்பட்டதை கேள்விப்பட்ட பவுலோ, ஆளுநரை சந்தித்து பேதுருவை விடுவிக்க வழி தேடினார். நீர் கைது செய்து வைத்திருக்கும் அவர் ஓர் இறை மனிதர், அவரால் இறந்து போன உங்களது மகனை உயிர்த்தெழ செய்ய முடியும் என்று சொல்ல, ஆளுநரோ, அப்படி நடந்தது என்றால் அவரை நான் விடுதலை செய்து அனுப்புவேன் என்று சொன்னார்.

பேதுரு இறைவனிடம் உருக்கமாக மன்றாட, 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஆளுநரின் மகன் உயிர்பெற்றான். 

இதை கண்டு வியப்பு அடைந்த ஆளுநர், பேதுருவை விடுதலை செய்தார், அந்நகரின் மக்கள் அனைவரும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள செய்தார்.

ஆளுநர் அந்நகரின் நடுவில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதன் நடுவே ஓர் அரியணையை நிறுவினார். பேதுரு பேசுவதை கேட்க மக்கள் அனைவரும் அங்கு கூடி வந்தனர். 7 ஆண்டுகள் பேதுரு அங்கு நற்செய்தி பணியாற்றினார்.

கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது.

பேதுரு துன்பங்களை அனுபவிக்காமல் தலைமை பொறுப்புக்கு வரவில்லை. கிறிஸ்துவை அறிவித்ததால் பல துன்பங்களை தாங்க வேண்டி இருந்தது.

துன்பங்களின் வழி திடம் பெற்றார். அப்பாறையின் மீது இயேசு தனது திருஅவையை நிறுவினார்.

நாமும் பெற்றுக் கொண்ட அருள் கொடைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். துன்பங்கள் வந்ததும் பின்வாங்காமல், துன்பங்களின் வழியாக கடவுளின் மாட்சியை காண்போம்.

வலி தாங்காத எந்த பாறையும் சிற்பம் ஆக முடியாது. துன்பத்தை தாங்காத எந்த உள்ளமும் திடம் பெற முடியாது.

கடைசியில் வெட்கப்பட்டு நிற்க வேண்டாமே!


பொதுக் காலம் 6ஆம் வாரம்

21.02.2025 - வெள்ளிக் கிழமை 

"அறிவுத்தெளிவுடன் இருங்கள்; நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள்; பாவஞ் செய்யாதீர்கள். ஏனெனில் உங்களுள் சிலருக்குக் கடவுளைப்பற்றிய அறிவு இல்லை. உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்" - 1 கொரிந்தியர் 15:34

நாம் செய்த தவறுக்காக தலைகுனிதல் ஏற்பட்டால் அவமானம் நமக்கு தானே! அசிங்கப்பட்ட பின் எவ்வளவு பேசினாலும் போன மானம் திரும்பாது. 

எல்லா மனிதர்களும் தவறக் கூடியவர்கள் தான் என்ற எண்ணம் தான் நம் எல்லோரையும் தவறு செய்ய வைத்து விடுகிறது. 

தண்டனையா கடைசியில் தானே! பார்த்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையும் நம்மை மென்மேலும் தவறு செய்ய தூண்டுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:34:9:1) என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்” என்று ஒரு கண்டனத்தை நம் முன் போடுகிறார்.

இவ்விபசாரத் தலைமுறையினர் என்ற வார்த்தையும் இங்கு பயன்படுத்தப்படுகிறது. 

உலகம் முழுவதையும் ஆதாயம் ஆக்க எண்ணுவோரை இது குறிக்கிறது. உலகம் சார்ந்த காரியங்கள் நமக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நாம் எண்ண முடியாத அளவுக்கு இங்கு ஆச்சரியங்களும் குவிந்து கிடக்கின்றன, அதே போல அழிவும் குவிந்துக் கிடக்கின்றன. 

உலகை கண்ணோக்கினால் இப்போது ஆனந்தம் தான், உலகு சார்ந்தவற்றை மட்டும் தேடினால் வெட்கப்படுவது நிச்சயம் தான்.

உலகை சார்ந்திராமல் யாரும் வாழ முடியாது. அதே சமயம் உலகினர் காட்டும் எல்லா பாதையும் சரியானது அல்ல. 

இறைவார்த்தையை ஒருபோதும் லேசாக எடுத்துக் கொள்ள கூடாது. வார்த்தைக்கு ஆற்றல் உண்டு. ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும்...

நமக்கொரு வாழ்வு மேல உண்டு என்று நம்பினால் வெட்கத்திற்கு உள்ளாகாமல் இருக்க நற்காரியங்களை செய்வோம். படைத்தவர்முன் தலைநிமிர்ந்து நிற்போம்.

தடைகளுக்கு தடை...


பொதுக் காலம் 6ஆம் வாரம்

20.02.2025 - வியாழக் கிழமை 

"ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்" - 1கொரிந்தியர் 8:9

யாரெல்லாம் நமக்கு தடையாக இருக்கிறார்களோ அவர்களை நாம் கண்டுக் கொள்ள மாட்டோம் அல்லது விட்டு வைக்க மாட்டோம். நம்முடைய வளர்ச்சியில் குறுக்கிடும் யாவரும் நமக்கு எதிரியே! 

சில மனிதர்களின் வாழ்வில் சிலர் வைக்கும் தொடர் தடைகள் வாழ்வில் மீண்டும் எழ முடியாமல் செய்து விடுகிறது. சிலர் நம் வாழ்வின் நேர்மறையான தடைகள், சிலர் நம் வாழ்வின் எதிர்மறையான தடைகள்.

தனக்கு ஏற்றார் போல நம்மை மாற்ற எண்ணுபவர்கள் நமக்கு தேவையில்லை, நம்மை செதுக்குபவர்களே நமக்கு தேவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:27-33) இயேசு தன்னை பற்றி மற்றவர்களும் சீடர்களும் தெரிந்துக் கொண்டவற்றை அறிந்துக் கொள்கிறார். 

தன் பாடுகளை முன்னறிவிக்கிறார். அப்போது பேதுரு இதற்கு தடை செய்யும் விதமாய் இயேசுவை கடிந்துக் கொண்டார். இயேசு பேதுரு பக்கம் திரும்பி, "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.

தன் பணிவாழ்வுக்கு/ இறைத்திருவுளத்தை நிறைவேற்ற யாரெல்லாம் தடையாய் இருந்தார்களோ அவர்களையெல்லாம் இயேசு தடை செய்தார்/கண்டித்தார்.

நல்லது செய்ய ஒருபோதும் யாரும் தடையாய் இருக்க கூடாது. கெட்டது நடக்கிறது என்றால் தள்ளியும் நிற்க கூடாது. 

மற்றவர்களின் வாழ்வில் நடக்க இருக்கும் நற்காரியங்களை நாம் தடை செய்தால் நம் வாழ்விலும் நற்காரியங்கள் தடைப்பட்டு நிற்கும்.

உரோமையருக்கு எழுதிய திருமுகம் 14:13இல் சொல்லப்பட்டுள்ளது போல, "ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும் சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்".

எதிர்மறையான தடைகளுக்கு நாம் நேர்மறை எண்ணங்களால் தடை போடுவோம்...

தொட்டு பாருங்கள்...


பொதுக் காலம் 6ஆம் வாரம்
19.02.2025 - புதன் கிழமை

"ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்" -எரேமியா 1:9

ஒவ்வொரு மனிதரின் தொடுதலும் ஒவ்வொரு அர்த்தத்தை சொல்கிறது. அனாதையாக சாலை ஓரங்களில் படுத்துக் கிடப்பவர்கள் அருகில் சென்று உங்களுக்கு என்ன வேண்டும்? என்று தொட்டு கேட்கும் போது அந்த நபர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.

தொடுதலுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது. நம்முடைய வீடுகளில் படுத்த படுக்கையாக நீண்ட நாட்கள் இருக்கும் முதியோரை தொட்டு பேசும் போது அவர்கள் மதிக்கப்படுவதை அவர்கள் உணர்வார்கள்.

மருந்தும் மாத்திரையும் குணப்படுத்தாததை தொடுதல் சரி செய்துவிடுகிறது.

இயற்கையின் ஆற்றல் தொடுதலில் வெளிப்படுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:22-26) இயேசு பார்வையற்றவரை மூன்றுமுறை தொடுகிறார்.

மூன்றாம் தொடுதலில் அந்த நபர் முழு பார்வை பெறுகிறார்.

இயேசுவின் புதுமைகள் பெரும்பாலும் தொடுதலின் வழியாகவே நடைபெற்றது. நலம்பெற விரும்புபவர் இயேசுவை தொடுவார் அல்லது நலம் கொடுப்பவர் நோயாளியை தொடுவார்.

இன்று சக மனிதர்களின் நலனில் நமக்கு அக்கறை தேவைப்படுகிறது. நலம் குன்றியவர்களை தொட்டு நலப்படுத்த வேண்டியுள்ளது.

"தீட்டு தீட்டு" என்று சொல்லி ஒதுங்கி செல்லும் மனப்பான்மை மறைய வேண்டும். நம்பிக்கையோடு கூடிய தொடுதல் நிச்சயம் நலம் அளிக்கும்.

நாம் மற்றவரை நேர்மறையோடு தொடும் போது நம்முடைய வாழ்வும் நேர்மறை சிந்தனைகளால் தொடப்படும்.

உள்ளம் மழுங்கிப் போயிச்சா?


பொதுக் காலம் 6ஆம் வாரம்

18.02.2025 - செவ்வாய்க் கிழமை 

"இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின; இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்" - எசாயா 66:2

அன்பை/உணர்வை புரிந்துக் கொள்ளாதவரிடம் கோபத்தின் உச்சக் கட்டத்தில் இந்த கேள்வி கேட்கப்படும், உங்க மனசு என்ன கல்லா? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிச்சு? 

பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லு என்பார்கள். இங்கு அனைவரின் மனசும் கல்லாக தான் இருக்கிறது. நல்லவற்றை துய்த்து உணராத படி மனங்கள் மழுங்கி போயிருக்கிறது. குற்ற உணர்வு இல்லாத மனிதர்கள் இங்கு நல்லவர்களை எதிர்க்கிறார்கள், நல்லவர்களை வாழ விடுவதில்லை 

சிலர் சிலவற்றை சொல்லி சொல்லி மனசு அலுத்து போய் விட்டனர். சிலர் சொல்லி என்னவாக போகிறது என்று சொல்லாமல் விட்டு விடுகின்றனர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:14-20 ) தன்னை புரிந்துக் கொள்ளாத சீடர்களை இயேசு சாடுகிறார். "நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக்கொள்கிறீர்கள்? இன்னுமா உணராமலும் புரிந்துகொள்ளாமலும் இருக்கிறீர்கள்? உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று? கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா? காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?"

பார்த்தும் கேட்டும் புரிந்துக் கொள்ளதவர்களை என்ன தான் செய்வது? என்பது அன்றும் இன்றும் தொடர்கிற கேள்வி. 

அப்பம் இல்லையே என்பது அவர்களின் கேள்வி? உள்ளம் மழுங்கி போனதே என்பது இயேசுவின் குமுறல்.

இயேசுவின் ஏக்கம், புரிந்து கொள்ளாதவர்கள் எப்படி இறையாட்சியை பரப்புவார்கள் என்பதாக இருந்திருக்கும்.

மந்த புத்தி மனதை கல்லாக்கி விடும். மழுங்கிய உள்ளதை பழுது பார்த்து பக்குவப்படுத்துவோம். மனது உணர்வுள்ளதாகட்டும்.

தொடக்கம் எப்படியோ முடிவும் அப்படியே...

பொதுக் காலம் 6ஆம் வாரம்

17.02.2025 - திங்கட் கிழமை 

புனித கன்னி மரியாவின் ஊழியர் துறவு அவையை நிறுவிய புனிதர் எழுவர்...

13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரில் உள்ள மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தார்கள். இந்த வேளையில் அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கையும் தூய்மையும் நிறைந்த 7 நபர்கள் இருந்தார்கள். மரியன்னை மீதும் பக்தி கொண்டு வாழ்ந்தார்கள்.

1233ஆம் ஆண்டு அன்னை மரியா இவர்களுக்கு காட்சி கொடுத்து இறைபணி செய்ய அழைப்பு விடுத்தார்.

இவர்களில் நான்கு பேர் ஏற்கனவே திருமணம் முடித்து இருந்தார்கள் மூன்று நபர்கள் மணமுடிக்காமல் இருந்தார்கள். இந்த நான்கு பேரும் தம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களை ஓரளவு கரையேற்றிவிட்டு இந்த துறவு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள்.

ஊருக்கு வெளியே சென்று ஜெபத்திலும் நோன்பிலும் தவத்திலும் ஈடுபட்டார்கள். இவர்களுடைய வாழ்க்கை முறையை கண்டு பல்வேறு நபர்கள் இவர்களை சந்திக்க வந்தார். இது தங்களுடைய துறவற வாழ்க்கைக்கு தடையாக இருந்தது எவ்வளவு சொல்லியும் மக்கள் தேடி வருவதை நிறுத்தவில்லை. 

நாட்கள் செல்ல செல்ல இவர்களுடைய துறவற வாழ்க்கை கடவுளுக்கு உகந்ததாக மாறியது. மரியன்னை இவர்களுக்கு காட்சி தந்தார். கையில் கருப்பு நிற ஆடையை வைத்திருந்தார். அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய கையில் ஒரு சுருளேடும் அதில் 7 நபருடைய பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தது.

"நான் உங்களை என்னுடைய ஊழியர்களாக தேர்ந்துக் கொண்டேன். இந்தக் கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும் நீங்கள் புனித அகுஸ்தீனுடைய ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழுங்கள்" என்று சொல்லி விட்டு அன்னை மரியா மறைந்து விட்டார்.

இறுதிவரை ஏழு பேரும் நோன்பிலும் நிறைவேற்றிலும் உறுதியாக இருந்து சபையினுடைய வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள். 

உலக காரியங்களை பின்பற்றிய மக்கள் கூட்டத்தின் நடுவில், உலக இன்பங்களை துறந்து தூய்மை தான் தங்கள் அடையாளம் என்பதை இவர்கள் காட்டி விட்டார்கள்.

தன்னிலை உணர்தல் தன்னை சுத்திகரிக்கும் என்பதற்கு இவர்களே சான்று.

நம்முடைய அடையாளம் என்ன? நம் வாழ்வு யாரை பிரதிபலிக்கிறது? நாம் யாரை சார்ந்து இருக்கிறோம் என்பது நம் தேடலாக இருக்கட்டும்.

பேறுபெற்றோர் ஆவது எப்போது?

பொதுக்காலம் 6ஆம் வாரம் 

16.02.2025 - ஞாயிற்றுக் கிழமை 

"இஸ்ரயேலே, நாம் பேறுபெற்றோர்; ஏனெனில் கடவுளுக்கு உகந்தது எது என்பதை நாம் அறிவோம்" - பாரூக்கு 4:4

யாரை நமக்கு மிகவும் பிடிக்கும்? நம்மை போற்றக் கூடிய மனிதர்களை. யாரை நாம் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவோம்? நம்மை புகழ்ந்து பேசுபவர்களை/நம்மை மதிப்பவர்களை.

இவ்வுலக மனிதரிடமிருந்து புகழ்ச்சியையும் பெருமையையும் தேடுகிறோம். சாதாரண அற்ப மனிதர் தரக்கூடிய புகழ்ச்சியே நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்றால், நம்மை உருவாக்கிய, நம்மை செதுக்கிய கடவுள் தரக்கூடிய அந்த புகழ்ச்சி என்பது எத்துனை மேலானது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6:17,20-26) இயேசு 3 வகையான பேறுபெற்றோரை, 3 வகையான கேடுற்றோரை பதிவு செய்கிறார் லூக்கா நற்செய்தியாளர். (ஏழைகளே நீங்கள் பேறுபெற்றோர், பட்டினியாய் இருப்போரே நீங்கள் பேறுபெற்றோர், அழுதுக் கொண்டிருப்போரே நீங்கள் பேறுபெற்றோர்).

இந்த பேறுபெற்றோரில் நாம் எத்தகையோர் என்பதை சிந்திக்க இன்றைய நாள் நமக்கு அழைப்பு விடுக்கிறது. நாம் பேறுபெற்றோர் என்ற நிலையில் இருக்கிறோமா? அல்லது இழப்புக்களை, துயரங்களை மற்றவர்களுக்கு கொடுத்து மற்றவர்களை பேறுபெற்றோராக மாற்றிக் கொண்டிருக்கிறோமா! என்பதும் சிந்திக்கத்தக்கது.

கிறிஸ்தவ வாழ்வு மட்டும் துன்பம் நிறைந்தது அல்ல, கிறிஸ்துவில் வாழ்வோருக்கும் துன்பம் உண்டு.

கிறிஸ்தவர்களாக வாழ்பவர்கள் வேறு, கிறிஸ்துவை பிரதிபலிப்பவர்கள் வேறு. 

கிறிஸ்துவை சார்ந்தவரை உலகம் வெறுக்கும். ஏனென்றால் கடவுளுக்குரியதை உலகு வெறுக்கும்.

இழப்புக்களை மற்றவர்களுக்கு கொடுப்பவர்கள் எப்படி பேறுபெற்றோராக முடியும். கிறிஸ்து தன்னை இழந்தார் நம்மை பேறுபெற்ற மக்களினமாக மாற்றி விட்டார்.

கடைக்கு சென்று துணி துவைக்கும் சோப்பு ஒன்றை வாங்குகிறோம். அதை அப்படியே பயன்படுத்தாமல் வைத்து விட்டால் துணியில் உள்ள அழுக்கு போகுமா? நிச்சயம் போகாது. சோப்பு பயன்படுத்தப்பட வேண்டும்.

கடவுள் கொடுத்த வாழ்க்கையும் அப்படி தான். பேறுபெற்ற மக்களினம் என்ற கொடை அவர் கொடுத்த வாழ்க்கை. அதில் நிலைத்து நிற்பதும், மற்றவரை நிலைத்திருக்க வைப்பதும் நம் செயல்களில் இருக்கிறது.

உலகின் பார்வையில் பேறுபெற்றவராக அல்ல, உன்னதரின் பார்வையில் பேறுபெற்றோராய் வாழ்வோம்.

இருப்பதை கொடுங்கள்...


பொதுக் காலம் 5ஆம் வாரம்

15.02.2025 - சனிக் கிழமை 

எடுத்துக் கொள்ள அதிக மனம் இருக்கிறது, கொடுத்து வாழ தான் மனம் இல்லை. இருப்பதை இல்லாதவரோடு பகிர்ந்து வாழ்ந்தாலே எல்லாம் நலமாகும். 

பரிவு இருக்கும் இடத்தில் பகிர்வு இருக்கும். பகிர்வு இருக்கும் இடத்தில் சமத்துவம் இருக்கும். 

நான் சேர்த்தது/நான் கஷ்டபட்டு சேர்த்தது இது எனக்கு மட்டும் தான், உழைக்காத நபருக்கு நான் ஏன் பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா! எல்லா நபர்களும் சோம்பேறித்தனால் வறுமையில் வாடவில்லை, சில நபர்களின் தந்திரங்களும் சில நபர்களின் சூழ்ச்சியும் பலரை வறுமைக்கு தள்ளி உள்ளது.

இப்படி தேவையில் வாடுவோருக்கு இருப்பதை பகிரவில்லை என்றால் நாம் எப்படி கிறிஸ்துவை பிரதிபலிக்க முடியும்.

பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 2:5 இல் சொல்லப்பட்டுள்ளது போல, "கிறிஸ்து இயேசு கொண்டிருந்த மனநிலையே உங்களிலும் இருக்கட்டும்!" அவரின் மனநிலை நம்மில் உருவாக வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:1-10) மக்கள் கூட்டத்திற்கு உணவளிக்க தன் சீடர்களை அழைக்கிறார். பாலை நிலத்தில் இவர்களுக்கு போதுமான உணவு அளிப்பது எப்படி கேட்ட சீடர்கள் மத்தியில் இருப்பதை பகிர சொல்கிறார் இயேசு.

போதுமா? என்று கேட்டார்கள், இறுதியில் 7 கூடைகள் நிறைய எடுத்தார்கள் என்று பதிவு செய்கிறது லூக்கா நற்செய்தி.

இருப்பதை பகிரும் போது நாம் அறியா நேரத்தில் இன்னும் அதிகம் கொடுக்கப்படும் என்பதை இப்பகுதி நமக்கு தெளிவுப்படுத்துகிறது. 

இருக்கிறவர்கள் இல்லாதவர்களோடு இருப்பதை பகிர்வதே கிறித்தவம்.

ஒளி ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பரவுகிறது என்றால் அது ஒளியை இழப்பதில்லை, மாறாக இருப்பதை பகிர்கிறது. நாமும் நம்மிடம் இருக்கும் வளங்களை/ஆற்றல்களை பகிர்ந்து கொடுப்போம்.

திறக்கப்பட வேண்டும்...

பொதுக் காலம் 5ஆம் வாரம்

14.02.2025 - வெள்ளிக் கிழமை

பல மனிதர்களின் காதுகள் திறக்கப்படாமலே இருக்கின்றது. பல மனிதர்களின் நாவும் திறக்கப்படாமலே இருக்கின்றது. திறக்கப்பட்டால் தான் உள்ளே போக வேண்டிய நற்கருத்துகள் உள்ளே போகும்.

நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற மனநிலை இன்று மேலோங்கி விட்டது. 

பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் கருத்துக்களுக்கு கூட காது திறந்து செவிமடுப்பதில்லை. அதற்காக சொல்லாமல் இருந்து விட முடியாது. நல்லதை நல்லது என்றோ கேட்டதை கேட்டது என்றோ சொல்லவில்லை என்றால் எது நல்லது எது கேட்டது என்று தெரியாமல் போய்விடும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் திக்கு வாய் மற்றும் காது கேளாதவருக்கு இயேசு நலம் கொடுக்கிறார். 'எப்பத்தா' அதாவது திறக்கப்படு என்று சொல்லி நலம் அளிக்கிறார் இயேசு.

பிரச்சினைகள் தவிர்க்கப்பட காது கேட்டும் கேட்காமலும் இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது என்பது உண்மை தான். ஆனால் காது கேட்காமலேயே இருப்பது வேதனையிலும் வேதனை.

பல பிரச்சினைகளுக்கு மூலக் காரணம் வாய் தான் என்பார்கள். அந்த வாய் இல்லை என்றாலும் பிழைக்க முடியாது.

இப்படி காது கேட்காமல், தெளிவாக பேச முடியாமல் இருந்தவருக்கு நலம் கிடைக்கிறது என்றால் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. எனவே தான் இயேசு சொன்னதையும் கேட்காமல் இயேசு செய்தவற்றை வாயார அறிவிக்கிறார். தன் கண்கள் கண்டதை தன் வாய் உரைக்க அதை தன் காதுகள் கேட்கின்றன... மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்திருப்பார் அம்மனிதர்.

நம்முடைய வாழ்விலும் பல கதவுகள் திறக்கப்பட வேண்டி இருக்கிறது. பெற்றுக் கொண்ட ஆசிர்வாதங்களுக்கு நாம் நன்றியாக/ கைம்மாறாக மற்றவர்களின் வாழ்வில் இருக்கக்கூடிய அடைப்புக்களை திறந்து விட வேண்டும்.

மகிழ்ச்சி/அன்பு/நம்பிக்கை என்னும் திறவுக் கோல் நம்மிடம் தான் இருக்கிறது. திறக்கப்பட வேண்டிய இடம் தேடி அலைவோம்...

நம் நம்பிக்கை மற்றவரை மாற்றட்டும்...

பொதுக் காலம் 5ஆம் வாரம்

13.02.2025 - வியாழக் கிழமை 

"இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்" -  உரோமையர் 12:2

எல்லோரையும் மாற்ற முடியாது என்பது உண்மை தான்; ஆனால் மாற்ற நினைத்தால் ஒரு சிலரையேனும் அல்லது அவர்களது சிந்தனை ஓட்டங்களையேனும் மாற்றி விடலாம். 

மாற்றம் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகலாம். மாற்றங்களை விரும்பி தேடுவோரும் உண்டு; இது இப்படியே இருந்து விட்டு போகட்டும் என்போரும் உண்டு...

சிலரது வாழ்வில் சிறிய மாற்றம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். சிறு சொல் கூட நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 7:24-30) கிரேக்க பெண் ஒருவர் இயேசுவின் காலில் விழுந்து தீய ஆவியினால் பாதிக்கப்பட்ட தன் மகளை காப்பாற்றி விட கேட்கிறாள். பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க் குட்டிகளுக்கு போடுவது முறையல்ல என்று இயேசு சொல்ல, சிறு பிள்ளைகள் சிந்தும் உணவை மேசையின் கீழிருக்கும் நாய்க் குட்டிகள் தின்னுமே என்று பதில் சொல்கிறார். 

அப்பெண்ணின் வார்த்தை இயேசுவை மாற்றி விடுகிறது / இயேசுவை வல்ல செயல்  செய்ய வைக்கிறது. அப்பெண் இயேசுவின் வார்த்தைகளுக்கு பிறகு ஒன்றும் சொல்லாமல் போய் இருந்தால் அப்பெண்ணின் மகளுக்கு மாற்றம் ஏதும் நடந்திருக்காது.

நம்பிக்கை மாற்றத்தை கொணர்கிறது. நம்பிக்கை நலமளிக்கிறது.

என்னால் பெரிதாக என்ன நடந்து விட போகிறது என்ற கேள்வியை மாற்றி நான் நினைத்தால் சில மாற்றங்களை கொணர முடியும் என்று சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.

யாராலும் இவர்களை/இந்த செயல்பாடுகளை மாற்ற முடியாது என்று ஆயிரம் இருக்கலாம், ஆனால் நம்பிக்கையும் செயல்திறனும் இருந்தால் எதையும்/யாரையும் மாற்றலாம்.

மாறிக் கொண்டு இருக்கும் இவ்வுலகில் மாற்றங்களை நோக்கி நகர்வோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம்...

நலம் நல்கும் புனித லூர்து அன்னை...


நலம் நல்கும் புனித லூர்து அன்னை...

11.02.2025 - செவ்வாய்க் கிழமை

1858 பெப்ரவரி 11 ஆம் நாள் தொடங்கி 1858 ஜீலை 16 வரை அன்னை மரியாள் பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் மசபியேல் என்ற குகையில் பெர்னதத் சூபிரூஸ் என்ற சிறுமிக்கு தொடர்ச்சியாக காட்சியளித்தார்.

பெப்ரவரி 25 ஆம் நாள் காட்சியில் மரியன்னையின் கட்டளைப்படி பெர்னதெத் ஒரு இடத்தில் தோண்ட அங்கு நீரூற்று பீறிட்டெழுகின்றது. அதுவே பின்நாளில் ஓடையாக மாறி இன்றும் திருப்பயணிகளின் நோய் நீக்கும் அற்புத சுகமளிக்கும் இடமாகத் திகழ்கிறது. 

இன்றும் எண்ணற்ற நோயாளிகள் லூர்து நகருக்கு வந்து அற்புத சுகம் பெற்று செல்கின்றனர். லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்படும் பிப்பிரவரி 11 ஆம் நாளைத் தான்; திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் உலக நோயாளர்கள் தினமாகத் தேர்ந்தெடுத்து 1992 ஆம் ஆண்டிலிருந்து நாம் கொண்டாட வழிவகுத்திருக்கின்றார். 

தீட்டை விலக்கு...


பொதுக் காலம் 5ஆம் வாரம்

12.02.2025 - புதன் கிழமை

மனிதனின் உள் இருந்து வெளியே வருவது தான் மனிதனையும் மனிதத்தையும் தீட்டுப்படுத்துகிறது...

குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது). வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது தீயது எது என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம். 

புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'

நான் மாசுள்ளவன்(ள்) என்பதை கண்டுணராத வரை, நான் மற்றவர்களையும் அவர்கள் செய்வதையும் தீட்டாகத் தான் கருதுவேன். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 7: 14-23) இயேசு மக்கள் கூட்டத்தை பார்த்து "வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்" என்று சொல்கிறார்.

தன் சீடர்களை பார்த்து, "மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன."

இவை உள்ளிருந்து வருகின்ற போது வெளியே தீட்டு என்று எப்படி சொல்ல முடியும். தீட்டு விலக்கப்பட வேண்டும். நம் உள்ளத்தில் இருந்து தீமைகள் விலக்கப்பட வேண்டும்.

அடுத்தவரை தீட்டாக கருதும் முன் நம் உள்ளத்தில் உள்ள குப்பைகள் களையப்படட்டும்...

தொடுதல் நலமளிக்கிறது...


பொதுக் காலம் 5ஆம் வாரம்

10.02.2025 - திங்கட் கிழமை 

"அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்" மாற்கு 8:22

பல்வேறு வகையில் நலம் பெறுகிறார்கள் மனிதர்கள். அவற்றில் ஒன்று தான் தொடுதல். 

இரக்கம் உள்ள மனிதர்கள் இறங்கி வருவார்கள். மற்ற மனிதர்களை அன்பொழுக நோக்குவார்கள். மற்றவர்களோடு உடன் இருந்து தொட்டு ஆறுதல் அளிப்பார்கள்.

பரிவோடு தொடுதல் ஒரு இரக்கச் செயலே. 

இது ஒரு புறம் இருக்க தன்னை தொட மற்றவரை அனுமதிப்பது சமத்துவத்தின் அடையாளமே. 

தீண்டாமை ஒரு கொடுஞ்செயல். தொட்டால் தீட்டு, அருகில் வந்தால் தீட்டு என்ற குற்ற செயல் இன்னும் தொடரத்தான் செய்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில்  (மாற்கு: 6-53-56) அவர் (இயேசு) சென்ற ஊர்கள், நகர்கள், பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப் பொது இடங்களில் கிடத்தி, அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள். அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். அந்த அளவுக்கு தொட்டால் நலம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களிடம் இருந்தது. 

இயேசுவும் அவர்களை தொட அனுமதிக்கிறார். நற்செய்தி பதிவு செய்கிறது அவரை தொட்ட அனைவரும் நலமடைந்தனர் என்று.

தொடுதல் நலம் கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு தொட்டால் நலம் நிச்சயம். 

நல்ல தொடுதல் நல்வாழ்வு கொடுக்கும். நாம் யாரையும் தீட்டாக கருதாது இருப்பதே நாம் நலம் பெறுவதற்கான முதல் படிநிலை.

தகுதியற்ற அடியவர்கள் நாம்...

பொதுக் காலம் 5ஆம் வாரம்

09.02.2025 - ஞாயிற்றுக் கிழமை 

தகுதியை யாரும் விலைக் கொடுத்து வாங்க முடியாது. தகுதி தானாகவும் வராது. தகுதியற்ற நிலையில் இருந்த/இருக்கும் நம்மை இறைவன் தகுதிப்படுத்துகிறார். 

நம்முடைய தகுதி இறைவனிடம் இருந்தே வருகிறது. கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் 3:5 இவ்வாறு சொல்கிறது, "நாங்களே செய்ததாக எதன் மேலும் உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை. எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது."

இன்று பல மனிதர்கள் தங்கள் தகுதியற்ற நிலையை உணர்ந்துக் கொள்வதில்லை. நூற்றுவர் தலைவர் கொண்டிருந்த மனநிலை நமக்கு தேவை. (மத்தேயு நற்செய்தி 8:8 நூற்றுவர் தலைவர் மறுமொழியாக, “ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் பையன் நலமடைவான்.)

தகுதியற்ற நிலையை உணர்தல் என்பது தாழ்வு மனப்பான்மையை குறிப்பதல்ல, மாறாக அது தன் நிலையை உணர்தல்.

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா தன் தகுதியற்ற நிலையை உணர்ந்ததால் ஆண்டவரின் பணி செய்ய தகுதியுடையவர் ஆகிறார்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் தனது அழைப்பை திரும்பி பார்க்கிறார். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்களை எதிர்த்தவர்.  கிறித்துவால் தொடப்பட்டவர் கிறிஸ்துவை பற்றி அறிவிக்க ஆரம்பிக்கிறார்.

தன்னை உணர்ந்தவர் தன்னை கடந்து பிறர் பணி செய்ய வேண்டும். அதன் வழியாக தான் நமது தகுதி வெளிப்படும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். 

தன்னால் முழு முயற்சி செய்யப்பட்டும் பலன் கிட்டவில்லை.  இறைவார்தையில் நம்பிக்கை கொண்டு நடந்தால் பலன் உண்டு என்பது தெளிவாகிவிட்டது.

மனிதரை பிடிப்பவர் ஆகிவிட்டார். தகுதி கடவுளிடமிருந்து தகுதி வெளிப்பட்டு விட்டது.

நாம் எந்நிலையில் இருக்கிறோம் இருக்கிறோம் என்பதை யோசித்து பார்ப்போம்.

நம் தகுதியற்ற நிலையை நாம் உணர்ந்ததால் தகுதிப்படுத்தப்படுவோம். 

நாம் நம் நிலையை உணர வேண்டும்.

பரிவு தந்த ஓய்வு


பொதுக் காலம் 4ஆம் வாரம்

08.02.2024 சனிக் கிழமை

மனிதர்கள் ஓய்வின்றி உழைக்கிறார்கள். உழைத்த பின் சேமிப்பு பற்றி பயம் ஏற்படுவதால் உள்ளத்தில் ஓய்வின்றி இருக்கிறார்கள்.

சிலர் உழைக்க வேண்டிய பருவத்தில் ஓய்வு எடுக்கிறார்கள், சிலர் உழைத்து முதுமையில் ஓய்வு எடுக்கிறார்கள்.

ஓய்வு அவசியம் தேவை. தலைக்கு மேலே சேமித்து சேமித்து என்ன ஆக போகிறது. ஓய்வின் அவசியம் தெரியாததால் பலர் ஓய்வு எடுப்பதில்லை, மற்றவரை ஓய்வு எடுக்க விடுவதில்லை. 

தனக்கு கீழ் பணியாற்றும் மனிதர்களுக்கு பரிவு காட்டும் தலைவர், அவர்களை மதிப்பதன் அடையாளமாக தகுந்த நேரத்தில் ஓய்வு கொடுத்து வேலை வாங்குவார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:30-34) தனது சீடர்கள் ஓய்வின்றி பணி செய்ததால் அவர்கள் ஓய்வு எடுக்க தனித்திருக்க அனுப்புகிறார். தன் சீடர்களின் உணர்வுகளை இயேசு மதித்தார். 

அதே வேளையில் ஆயன் இல்லா ஆடுகளாய் இருந்த மக்கள் கூட்டத்தின் மீது பரிவுக் கொள்கிறார்.

தேவைக்கு இறங்குபவர், ஆறுதல் அளிப்பவர் இயேசு. 

நம் உணர்வுகளை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்று எண்ணுகிற நாம் மற்றவர்களின் உணர்வுகளை மதிக்க தொடங்குவோம்.

பரிவு காட்டி பரிவு பெறுவோம்...

தவறை தட்டிக் கேட்கும் மன தைரியம் வேண்டும்...


பொதுக் காலம் 4ஆம் வாரம் 

07.02.2025 - வெள்ளிக் கிழமை 

"நாவினால் தவறு செய்யாதோர் பேறுபெற்றோர்; அவர்கள் பாவங்களுக்கான மன உறுத்தல் இல்லாதவர்கள்" - சீராக்கின் ஞானம் 14:1

தவறு சரி இரண்டுக்கும் இடையில் நாம் எந்த பக்கம். இவ்வுலகின் பார்வையில் தவறு தான் சரியாக பார்க்கப்படுகிறது. தவறு தன் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ஆனால் விலைபேசப்பட்டாலும் மிரட்டல் விடுக்கப்பட்டாலும் தவறு சரியாக மாற முடியாது. சரியானவர்கள் தண்டிக்கப்பட்டாலும் சரி சரியாக தான் இருக்கும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:14-29) தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்த (பாலைவன வாழ்க்கை) யோவான் பொது வாழ்க்கைக்கு வந்து தவறை சுட்டிக் காட்டியதால் , தலை வெட்டப்பட்டு உயிர்த் தியாகம் செய்கிறார். 

நல்லவர்கள் கொலை செய்யப்படுவதும், தீயவர்கள் தழைத்தோங்கி வாழ்வதும் அன்று தொடங்கி இன்று வரை நீடிக்கிறது. 

சிலர் நன்மை செய்ய தயங்குவது, உயிரை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால் தான். அஞ்சி அஞ்சி வாழ்பவனுக்கு அனுதினமும் சாவுதான். பயப்படாத வீரனுக்கு ஒரே ஒரு சாவு தான்.

யாரும் சாவை விரும்பி ஏற்பதில்லை. நல்லதை சொல்வதால், நன்மை செய்வதால் மரணம் உண்டு என்பதை புனிதர்களின் வாழ்வும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் வாழ்வும் படம்பிடித்து காட்டுகிறது. 

இறப்பு வந்து விடுமே என்று சொல்லி நல்லோர், நன்மை எனும் நேர்கோட்டில் இருந்து விலகுவதில்லை.

"நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது (மத்தேயு 5:10) என்ற இறைவார்த்தைக்கு சொந்தக்காரர்கள் தான் நல்லது செய்து உயிரை தியாகம் செய்தவர்கள்.

நலமுடன் வாழ ஒருவேளை இவ்வுலகில் சாத்தியம் இல்லை என்றாலும் நாம் எதிர்நோக்கி இருக்கக்கூடிய விண்ணக வாழ்வில் அது நிறைவாய் கொடுக்கப்படும்.

இன்று மனிதர்கள் தவறு செய்ய துணிவதனுடைய காரணம், நமக்கு மேல் யார் இருக்கிறார்? நமக்கு அடுத்து என்னவாகும்? என்ற சிந்தனை இல்லாதது தான்.

தவறு செய்வோர் இருக்க அதை தட்டிக்கேட்போர் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அவர்களில் ஒருவர்தான் திருமுழுக்கு யோவான். தன்னை நாடி வரக்கூடியவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் (உயர்நிலையோ தாழ்நிலையோ) அவர்கள் செய்வது தவறு என்றால் அதை அதிகாரத்தோடு தட்டிக் கேட்கக் கூடியவர்தான் திருமுழுக்கு யோவான். 

திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டு பாடம். உண்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் தீமையோடு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. பெயரை இழக்க நேர்ந்தாலும், ஏன் உயிரையே இழக்க நேர்ந்தாலும் தீயவர்களோடு கைகோர்க்க கூடாது.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட நம் குரல் ஓங்கி நிற்கட்டும். மனமாற்றம் மண்ணில் (மனதில்) உருவாகட்டும். 

தேவையற்றவைகளை உதறித் தள்ளுங்கள்...


பொதுக் காலம் 4ஆம் வாரம்

06.02.2025 - வியாழக் கிழமை 

தேவை, தேவையில்லாதது இவை இரண்டும் சரியான நேரத்தில் சரியான முறையில் புரிந்துக் கொள்ளபட வேண்டும். தேவையானவர்களை தேவை அற்றவர்களாக கருதுவதும் தேவை இல்லாதவர்களை தேவை என்று கருதுவது தவறு. 

தேவைக்கு பயன்படுத்துவது என்பது வேறு; தேவை என்பது வேறு. ஆழ்கடலில் பயணம் செய்யும் போது அதிக சுமை தேவையில்லை, தேவையான குடிநீர், உணவு போதுமானது. பாலைவனத்தில் பயணம் செய்யும் போது குடிநீர் போதுமானது.

இப்படி இடத்திற்கு ஏற்றார் போல தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டால் எல்லாம் சரியாகும். இது உறவுக்கும் உணர்வுக்கும் பொருந்தும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:7-13) இயேசு தன்னுடைய சீடர்களுக்கு அதிகாரம் கொடுத்து பணி செய்ய அனுப்புகிறார். பணி செய்ய சில பரிந்துரைகள் முன் வைக்கப்படுகிறது. உணவு, பை, செப்புக் காசு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போக வேண்டாம், அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும். நற்செய்தியை அறிவித்து நோயாளிகளை குணமாக்குங்கள். 

இந்த பயணத்தில் சீடர்கள் தேவையற்றவற்றை எடுத்துச் செல்லாதிருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பாதை சரியாய் இருந்தால் பயணம் சரியாய் அமையும். இலக்கு தெளிவாய் இருந்தால் நம் வாழ்க்கை நலமாய் அமையும். தேவையானதை மட்டும் எடுத்துக் கொண்டால் எல்லாம் சரியாய் நடக்கும்.

இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மேலும் சொல்லக்கூடிய அறிவுரை, 'உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளாமலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறி விடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'.

நற்செய்தி அறிவிப்பு நோயுற்றோர் நலம் பெறுதல் தான் அனுப்பப்படுதலின் நோக்கமாக இருந்தது.

நமக்கான சவால்

தேவையற்ற குப்பை நமக்கு எதற்கு?

செய்ய வேண்டியதை செய்தல் வேண்டும்

நம் வாழ்வு பிறர் வாழ்வு பெற உதவ வேண்டும் 

வார்த்தை செயல் பிறருக்கு நலம் கொடுக்க வேண்டும் ...

நம்பிக்கை குறைவும் வல்லசெயல் செய்ய தடையும்


பொதுக் காலம் 4ஆம் வாரம் 

05.02.2025 - புதன் கிழமை 

நம்பிக்கையில் வலுவற்றவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்; ஆனால் கருத்து வேறுபாடுகளைப் பற்றி அவர்களோடு வாதாடாதீர்கள்" - உரோமையர் 14:1

சில வேளையில் நம்முடைய வாழ்க்கை வியப்புக்குரியதாக இருக்கிறது. எப்படி நம்முடைய வாழ்க்கையில் இந்த நிகழ்வு நடந்தது என்று மற்றவர்கள் வியந்து பார்க்கும் வகையில் அது இருக்கிறது. 

அதே வேளையில், நம்மிடமிருந்து வாழ்வு பெற்றவர்கள், நம்மை நிராகரிக்கவும் செய்கிறார்கள். வியந்து போற்றியவர்கள் நம்மை நிராகரிக்கும் போது நம் மனதின் கவலை எல்லை மீறுகிறது. 

மற்றவர்கள் விரும்புகிற காரியங்களை செய்கின்ற போது நாம் பாராட்டப்படுதலும், நேர்மையாக, உண்மையாக நடந்து கொள்ளும்போது நாம் நிராகரிக்கப்படுவதும் வாழ்க்கையின் எதார்த்தம் ஆகிவிட்டது. 

எதை நாம் கொண்டு வந்தோம்? எதை நாம் கொண்டு செல்ல போகிறோம்? என்ற கேள்விகள் அடிக்கடி நம்முடைய மனதில் ஒலித்துக் கொண்டு இருந்தால், இங்கு நிராகரிப்பை குறித்த கவலை நமக்கு இல்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:1-6) சொந்த ஊர் மக்களாலே இயேசு நிராகரிக்கப்படுகிறார். வல்ல செயல்களை புதுமைகளை கண்டு வியந்து நின்ற அந்த மக்கள் கூட்டம், இவருக்கு எங்கிருந்து இந்த ஞானம் வந்தது? இவரைப்பற்றி எமக்கு தெரியாதா? என்று சொல்லி அவருடைய பின்புலத்தை சுட்டிக்காட்டி அவரை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். 

அவர்களுக்கு இயேசுவின் மீது நம்பிக்கை இலலாததால், இயேசுவால் இன்னும் பல அரும் அடையாளங்களை செய்ய முடியாமல் போனது என்று நற்செய்தி பதிவு செய்கிறது.

ஒருவரால் ஆதாயம் உண்டு என்றால் அங்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது, தேவைமுடிந்த பின் இகழ்ச்சியும் களைப்பும்தான் ஏற்படுகிறது.

நம் வாழ்வில் மற்றவரின் பின்புலத்தை தேடாமல் மற்றவரின் முதுகெலும்பாய் இருந்து அவர் முன்னேற்றம் காண உழைக்கின்ற போது, நாம் கிறிஸ்துவை சார்ந்தவர்கள் என்று பெருமிதம் கொள்ள முடியும்.

வியப்புக்குரிய நம் வாழ்வை வியந்து போற்றுவோம். 

வியக்கத்தக்க ஆற்றலோடு இணைந்து பணி செய்வோம். 

எந்தவித புற காரணிகளும் பிறரை ஏற்றுக் கொள்வதற்கு நம் வாழ்வில் தடையாக இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.

நிராகரிப்பல்ல... ஏற்றுக் கொள்ளுதலே இங்கு தேவை!

தொடுதல் குணம் அளிக்கிறது...

பொதுக் காலம் 4ஆம் வாரம்

04.02.2025 - செவ்வாய்க் கிழமை 

"அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்" - மாற்கு 8:22

அன்பிற்குரியவரின் தொடுதல் ஆறுதல் அளிக்கும். நேசிப்பவர்களின் தொடுதல் புத்துணர்வு கொடுக்கும். நம்பிக்கையோடு கூடிய தொடுதல் முழு நலம் கொடுக்கிறது. 

எல்லா தொடுதலும் நல்ல தொடுதல் அல்ல. எல்லா தொடுதலும் கெட்ட தொடுதலும் அல்ல. தொடும் நபரை பொறுத்து தொடுதல் மாறுபடும்.

செடி கொடிகளை தொட்டு பேசும் போது அதன் வளர்ச்சி வேகமாகிறது/அதிகரிக்கிறது. பணம், பொருள், பதவி தரும் மகிழ்வு/உற்சாகத்தை விட நல்ல தொடுதல் அதிக நலம் தருகிறது. 

மருத்துவமனையில் இருக்கும் நபர்களை தொட்டு பேசும் போது அவர்கள் அச்சம் விலகுகிறது என்பது உண்மை தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 5:21-43) இரண்டு வகையான தொடுதலை பார்க்கிறோம். ஒன்று 12 ஆண்டுகள் இரத்த போக்கினால் அவதிப்பட்ட பெண் இயேசுவை தொடுதல், இறந்த சிறுமியை இயேசு தொடுதல்.

இந்த இரண்டு நிகழ்விலும் நம்பிக்கை முக்கிய பங்காற்றியது. 

தந்தையின் நம்பிக்கை மகளுக்கு உயிர் கொடுத்தது. 

மற்றவர் உயிர் பிரிந்து விட்டது என்றார்கள். தந்தை நம்பிக்கையை மட்டும் விடவில்லை. மற்றவர்களுக்கு அடுத்த வேலையை செய்து விட்டு கடந்து செல்வது மட்டும் தான் நோக்கமாக இருந்தது. ஆனால் இயேசுவுக்கு நலம் கொடுப்பதும் நம்பிக்கையை அதிகரிப்பதும் தான் ஒரே நோக்கமாக இருந்தது.

12 ஆண்டுகள் இரத்த போக்கினால் அவதிப்பட்ட பெண்ணின் நம்பிக்கை அவருக்கு விடுதலை கொடுத்தது.

12 ஆண்டுகள் இரத்த போக்கினால் வருந்திய பெண்ணை இயேசு பிரபலப்படுத்துகிறார். என் மேலுடையை தொட்டவர் யார்? என்ற கேள்வியில் அந்த பெண்ணின் உயரிய நம்பிக்கை காட்டிக் கொடுக்கப்படுகிறது.

மற்ற நபர்களின் பார்வையில் இவ்வளவு கூட்டம், தொட்டது யாராக இருந்தா என்ன? என்பது போல தான் இருந்தது. ஆனால் அப்பெண்ணுக்கோ அது புது வாழ்வு கொடுத்த நிகழ்வு.

இயேசு நம்மை தொட வேண்டும், அவர் நம்மை தொட நாம் அவரை அனுமதிக்க வேண்டும். 

கடவுளின் சாயலிலும் உருவிலும் இருக்கும் சக மனிதர்களை நாம் தொட வேண்டும், அவர்களுக்கு நலம் கொடுக்க வேண்டும்.

நலமளிக்கும் கரங்களாக நம் கரங்கள் மாறட்டும். நற்செய்தியின் விளைநிலங்களாக நாம் மாறுவோம்.


இன்று புனித அருளானந்தர் திருவிழா...

மனித மாண்பை மதிக்கிறார் இயேசு...


பொதுக் காலம் 4ஆம் வாரம் 

03.02.2025 - திங்கட் கிழமை 

பல தீய ஆவிகள் தீய எண்ணங்கள் வடிவில் சுற்றி வருகிறது. எல்லா மனிதர்களுக்குள்ளும் தீய எண்ணங்கள் குடிக் கொண்டிருக்கிறது. தீய எண்ணங்களை சரிப்படுத்த நேர்மறை எண்ணங்களை உள்ளத்தில் ஏற்க வேண்டும்.

எப்போது உள்ளம் நேர்மறையால் நிரப்பப்படுகிறதோ அப்போது எதிர்மறை காணாமல் போய்விடும். இயேசுவின் பணி வாழ்வில் அவர் செய்த நன்மைகளை பாராட்ட மனம் இல்லாதவர்கள் அவருக்கு எதிராக விமர்சனங்களை அள்ளி தெளித்தார்கள். ஆனால் இயேசு தன்னை எதிர்கொண்டு வந்த எதிர்மறை எண்ணங்களையெல்லாம் நேர்மறையாக மாற்றினார். 

மற்றவர்களின் எதிர்மறை சிந்தனை இயேசுவின் செயல்களுக்கு/பணிவாழ்வுக்கு தடையாய் அமையவில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 5: 1-20) தீய ஆவி பிடித்த மனிதரை இயேசு குணப்படுத்துகிறார். தீய ஆவி பிடித்த மனிதர் இயேசுவிடம், "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார்."

தீயஆவிகள் கூட தூய்மையானவரை கண்டுகொள்கிறது. தீய ஆவியை இயேசு பேசவிடவில்லை. அதனை அதட்டி மனிதரிடமிருந்து தீய ஆவியை விரட்டுகிறார்.

இயேசு ஏன் அந்த தீய ஆவியை விரட்ட வேண்டும்? 

ஒரு மனிதருக்குள் தீய ஆவி குடிகொள்கிற போது அவர் தன்னிலை மறந்தவராக மாறிப் போகிறார். தான் செய்வது, தான் சொல்வது என்னவென்று அவருக்கு தெரியாது. தீய ஆவி குடி கொண்டிருக்க கூடிய அந்த மனிதர், அந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக கருதப்படுவார். சொந்த உறவினர்களே அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே பன்றிகளுக்குள் அனுப்புகிறார். பொருளாதார இழப்பை விட மனித மாண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

சமூகத்தால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு அன்பும் அக்கறையும் இயேசுவை வல்ல செயல் செய்ய வைத்தது.

இயேசுவின் வல்லமை அதிகாரம் தீமைக்கும் தீயவர்களுக்கும் எதிராக இருந்தது.

இன்று நம்முடைய வாழ்வில் தீமைக்கும் தீயவர்களுக்கும் இடம் கொடுத்தால் நாமும் மாண்பை/மதிப்பை இழந்தவர்கள் தான். 

தொடக்க நூல் 6:5 இவ்வாறு சொல்கிறது, "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்". 

மனித இதயம் தீமையின் வடிவமாக இருக்கிறது.

தீமை இருக்கும் இடத்தில் நன்மைக்கு இடம் இல்லை. 

நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினால் மட்டும் போதாது நன்மை செய்ய வேண்டும்.

நன்மை செய்வோருக்கு எதிர்ப்பு உண்டு. நன்மை செய்யும்போது தடைகள் வரும். இருந்த போதிலும் தீமையை நன்மையால் வெல்வேன் என்ற மனநிலை நம்மில் இருக்க வேண்டும். 

நன்மை தீமை என்னும் தராசில் நம் "அளவீட்டு முள்" எந்த பக்கம் இறங்க போகிறது?

தீமைக்கும் தீவினைக்கும் எதிராக நன்மை என்னும் போர்க் கொடி பிடிப்போம்.

காணிக்கையாக நம்மை கொடுப்போம்...


02.02.2025 - ஞாயிற்றுக் கிழமை 

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் 

இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு. தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்” - விடுதலைப் பயணம் 25: 2

கடவுளுக்கு காணிக்கை தேவையா? கடவுளுக்கு எந்த காணிக்கை தேவை? கடவுளுக்கு காணிக்கை தேவையில்லை. சொல்லப்போனால் நாம் அவருக்கு கொடுப்பதெல்லாம் நாம் அவரிடமிருந்தே பெற்றுக்கொண்டது தான். (“கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை” – சபை உரையாளர் 5:19) 

நாம் கடவுளுக்கு எதையும் புதிதாக கொடுப்பதில்லை, மாறாக கடவுள் நமக்கு கொடுத்ததையே நாம் அவரிடம் திருப்பிக் கொடுக்கிறோம்.  

பழைய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்ட காணிக்கைகளான தானியப் படையல்கள், நல்லுறவுக் காணிக்கைகள், அறியாமல் செய்த பாவங்களுக்கான காணிக்கைகள், பாவக் கழுவாய்க்கான காணிக்கைகள் (லேவியர் நூல் 2-5 அதிகாரங்கள்) போன்றவற்றை அடையாள முறையில் குரு மக்கள் சார்பாக கடவுள் முன் கொண்டு வருவார், அல்லது எரிபலியாக்குவார். இது அவர்கள் செய்த தவறுகளுக்கு ஈடாக செய்யப்பட்டவை. 

இத்தகைய பலிகளை, காணிக்கைகளை இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. (“சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை” – எரேமியா 6:20)

ஆனால் கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பது நொறுங்கிய நெஞ்சம். பாவத்திற்கு மனம்வருந்தி பாவத்திற்கு பரிகாரம் செய்து கடவுளிடம் திரும்பி வர வேண்டும். (“கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை” – திருப்பாடல்கள் 51:17) கடவுளுக்கு ஏற்ற காணிக்கை மனம்மாறிய உள்ளமே!

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருகென்று அர்ப்பணிக்கப்படும்" என்று காண்கிறோம்.. மனிதராக பிறந்த இயேசுவும் கோவிலில் அர்ப்பணிக்கப்படுகிறார்.

அர்ப்பணம்/காணிக்கை என்பது நாம் அவருக்கு சொந்தம் என்பதை சுட்டுகிறது.

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...