பொதுக் காலம் 6ஆம் வாரம்
22.02.2025 - சனிக் கிழமை
திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம்
"சில வேளைகளில், நீங்கள் இகழ்ச்சிக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி, வேடிக்கைப் பொருளானீர்கள். வேறு சில வேளைகளில், இந்நிலைக்கு ஆளானோரின் துன்பங்களில் பங்கு பெற்றீர்கள்" - எபிரேயர் 10:33
கடவுளின் ஆற்றல் ஒவ்வொரு மனிதர் மீதும் பொழியப்பட்டுள்ளது. தேவைக்கேற்ப அல்ல நிறைவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. அதை செயல்படுத்தும் நபரை பொறுத்தே அது வெளிப்படும்.
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 12:6,7 இவ்வாறு சொல்கிறது, "செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது".
கடவுளின் ஆற்றலை உணர்ந்தவர்கள் கடவுளின் பெயரை மாற்றிப்படுத்துவார்கள். உணராதவர்கள் உணர்வற்று போவார்கள்.
நேற்றைய நாளின் நற்செய்தியில் இயேசு பகிரங்கமாக கூறிய வார்த்தை, "பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள், என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும் ஒவ்வொருவரையும் பற்றி மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு தூய வானதூதருடன் வரும்போது வெட்கப் படுவார்”.
கொடுக்கப்பட்டதற்கு கணக்கு கேட்கப்படும். நம் செயல்களை பொறுத்தே நாம் தலை நிமிர்ந்து நிற்பதும் தலை குனிவதும் உண்டாகும்.
இன்றைய நாளில் தாய்த் திருஅவை திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடத்தை நினைவுக் கூறுகிறது.
புனித பேதுரு அந்தியோக்கு நகரில் நற்செய்தி பணி செய்தபோது அந்நகரின் ஆளுநர் தியோப்பிலிஸ் பேதுருவை சிறைப்பிடித்து மிகவும் துன்புறுத்தினான். கொடுமைக்கு உள்ளான பேதுரு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்ட தொடங்கினார், " இயேசுவே! என் தலைவரே! எனக்கு எதற்கு இத்தகைய கொடிய தண்டனை? அதற்கு இயேசுவோ, "பேதுரு! நான் உன்னை ஒருபோதும் கைவிட்டு விடமாட்டேன் என்று உனக்குத் தெரியாதா? சிறிது பொறுத்திருந்து பார். எல்லாம் நல்லதாகவே நடக்கும்" என்று சொன்னார்.
பேதுரு சிறையில் அடைக்கப்பட்டதை கேள்விப்பட்ட பவுலோ, ஆளுநரை சந்தித்து பேதுருவை விடுவிக்க வழி தேடினார். நீர் கைது செய்து வைத்திருக்கும் அவர் ஓர் இறை மனிதர், அவரால் இறந்து போன உங்களது மகனை உயிர்த்தெழ செய்ய முடியும் என்று சொல்ல, ஆளுநரோ, அப்படி நடந்தது என்றால் அவரை நான் விடுதலை செய்து அனுப்புவேன் என்று சொன்னார்.
பேதுரு இறைவனிடம் உருக்கமாக மன்றாட, 14 ஆண்டுகளுக்கு முன் இறந்து போன ஆளுநரின் மகன் உயிர்பெற்றான்.
இதை கண்டு வியப்பு அடைந்த ஆளுநர், பேதுருவை விடுதலை செய்தார், அந்நகரின் மக்கள் அனைவரும் ஆண்டவரில் நம்பிக்கை கொள்ள செய்தார்.
ஆளுநர் அந்நகரின் நடுவில் ஒரு பெரிய கோவிலை கட்டி அதன் நடுவே ஓர் அரியணையை நிறுவினார். பேதுரு பேசுவதை கேட்க மக்கள் அனைவரும் அங்கு கூடி வந்தனர். 7 ஆண்டுகள் பேதுரு அங்கு நற்செய்தி பணியாற்றினார்.
கடவுள் கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது. கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க முடியாது.
பேதுரு துன்பங்களை அனுபவிக்காமல் தலைமை பொறுப்புக்கு வரவில்லை. கிறிஸ்துவை அறிவித்ததால் பல துன்பங்களை தாங்க வேண்டி இருந்தது.
துன்பங்களின் வழி திடம் பெற்றார். அப்பாறையின் மீது இயேசு தனது திருஅவையை நிறுவினார்.
நாமும் பெற்றுக் கொண்ட அருள் கொடைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். துன்பங்கள் வந்ததும் பின்வாங்காமல், துன்பங்களின் வழியாக கடவுளின் மாட்சியை காண்போம்.
வலி தாங்காத எந்த பாறையும் சிற்பம் ஆக முடியாது. துன்பத்தை தாங்காத எந்த உள்ளமும் திடம் பெற முடியாது.
No comments:
Post a Comment