25_02

தொடுதல் குணம் அளிக்கிறது...

பொதுக் காலம் 4ஆம் வாரம்

04.02.2025 - செவ்வாய்க் கிழமை 

"அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்" - மாற்கு 8:22

அன்பிற்குரியவரின் தொடுதல் ஆறுதல் அளிக்கும். நேசிப்பவர்களின் தொடுதல் புத்துணர்வு கொடுக்கும். நம்பிக்கையோடு கூடிய தொடுதல் முழு நலம் கொடுக்கிறது. 

எல்லா தொடுதலும் நல்ல தொடுதல் அல்ல. எல்லா தொடுதலும் கெட்ட தொடுதலும் அல்ல. தொடும் நபரை பொறுத்து தொடுதல் மாறுபடும்.

செடி கொடிகளை தொட்டு பேசும் போது அதன் வளர்ச்சி வேகமாகிறது/அதிகரிக்கிறது. பணம், பொருள், பதவி தரும் மகிழ்வு/உற்சாகத்தை விட நல்ல தொடுதல் அதிக நலம் தருகிறது. 

மருத்துவமனையில் இருக்கும் நபர்களை தொட்டு பேசும் போது அவர்கள் அச்சம் விலகுகிறது என்பது உண்மை தான்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 5:21-43) இரண்டு வகையான தொடுதலை பார்க்கிறோம். ஒன்று 12 ஆண்டுகள் இரத்த போக்கினால் அவதிப்பட்ட பெண் இயேசுவை தொடுதல், இறந்த சிறுமியை இயேசு தொடுதல்.

இந்த இரண்டு நிகழ்விலும் நம்பிக்கை முக்கிய பங்காற்றியது. 

தந்தையின் நம்பிக்கை மகளுக்கு உயிர் கொடுத்தது. 

மற்றவர் உயிர் பிரிந்து விட்டது என்றார்கள். தந்தை நம்பிக்கையை மட்டும் விடவில்லை. மற்றவர்களுக்கு அடுத்த வேலையை செய்து விட்டு கடந்து செல்வது மட்டும் தான் நோக்கமாக இருந்தது. ஆனால் இயேசுவுக்கு நலம் கொடுப்பதும் நம்பிக்கையை அதிகரிப்பதும் தான் ஒரே நோக்கமாக இருந்தது.

12 ஆண்டுகள் இரத்த போக்கினால் அவதிப்பட்ட பெண்ணின் நம்பிக்கை அவருக்கு விடுதலை கொடுத்தது.

12 ஆண்டுகள் இரத்த போக்கினால் வருந்திய பெண்ணை இயேசு பிரபலப்படுத்துகிறார். என் மேலுடையை தொட்டவர் யார்? என்ற கேள்வியில் அந்த பெண்ணின் உயரிய நம்பிக்கை காட்டிக் கொடுக்கப்படுகிறது.

மற்ற நபர்களின் பார்வையில் இவ்வளவு கூட்டம், தொட்டது யாராக இருந்தா என்ன? என்பது போல தான் இருந்தது. ஆனால் அப்பெண்ணுக்கோ அது புது வாழ்வு கொடுத்த நிகழ்வு.

இயேசு நம்மை தொட வேண்டும், அவர் நம்மை தொட நாம் அவரை அனுமதிக்க வேண்டும். 

கடவுளின் சாயலிலும் உருவிலும் இருக்கும் சக மனிதர்களை நாம் தொட வேண்டும், அவர்களுக்கு நலம் கொடுக்க வேண்டும்.

நலமளிக்கும் கரங்களாக நம் கரங்கள் மாறட்டும். நற்செய்தியின் விளைநிலங்களாக நாம் மாறுவோம்.


இன்று புனித அருளானந்தர் திருவிழா...

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...