23.02.2025 - ஞாயிற்றுக் கிழமை
"தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; எல்லா மனிதரும் நலமெனக் கருதுபவை பற்றியே எண்ணுங்கள்" - உரோமையர் 12:17
இவ்வுலகில் பெற்றுக் கொண்ட நன்மைக்கு கைம்மாறாக நன்மை செய்கிறார்களோ இல்லையோ, தீமை செய்தோருக்கு 2 அல்லது 3 மடங்கு தீமை செய்து விடுவார்கள் மனிதர்கள்.
எதை நாம் எதிர்க்கிறோமோ அதை விட்டு நாம் அதிக தூரம் செல்கிறோம். இழப்பு என்பது எதிர்க்கப்படுபவருக்கு அல்ல யார் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு தான்.
இன்றைய முதல் வாசகத்தில் (1சாமுவேல் 26: 2, 7-9, 12-13, 22-23) தாவீதின் செயல் பாராட்டுதற்கு உரியது. தன் எதிரியான சவுல் உறங்கி கொண்டிருக்கும் போது அவன் ஆயுதங்களாலே சவுலை கொல்வதற்கு வாய்ப்பு கிடைத்த போதும் கூட, சவுல் கடவுளால் அருள் பொழிவு செய்யப்பட்டவர் என்பதற்காக அவரை கொலை செய்யாமல் விட்டுவிடுகிறார்.
எப்போது வாய்ப்பு கிடைக்கும்? எப்போ தீர்த்துக் கட்டலாம்? என்று ஓடிக் கொண்டிருக்கும் கயவர்களுக்கு மத்தியில் தாவீதின் செயல் நமக்கு வியப்பை தருகிறது.
இன்றைய இரண்டாம் வாசகத்தில் (1கொரிந்தியர் 15: 45-49) இரண்டு வகையான சார்பு நிலைகளை காண்கிறோம்.
1. விண்ணகம் சார்ந்த நிலை (ஆவிக்குரிய செயல்பாடு முன்னிறுத்தப்படும்)
2. மண்ணகம் சார்ந்த நிலை (ஊனியல்வு முக்கியத்துவம் பெறும்)
எல்லா இடத்திலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நற்செயல்களும் உண்டு தீச்செயல்களும் உண்டு.
நல்லவற்றை தேர்ந்து தெளிவது நம் கையில் இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 6: 27-38) இயேசு முன்வைக்கும் கட்டளைகள் வியப்புக்கு உரியதாக இருக்கிறது. எதிரியை மன்னிக்க, அன்பு செய்ய, இருப்பதை கொடுக்க, எதிர்பாராமல் இருக்க, தீர்ப்பளிக்காது இருக்க, எதிரிக்கும் நன்மை செய்ய என்று எது மனித நிலையில் சாத்தியம் இல்லையோ அதை இயேசு முன் மொழிகிறார்.
இதை நாம் கடைபிடிக்கும் போது நமக்கான கைம்மாறு உண்டு என்பதையும் தெளிவுப்படுத்துகிறார். நாம் அளக்கும் அளவையால் தான் நமக்கும் அளக்கப்படும் என்பதையும் உறுதிப்படுத்துகிறார்.
இந்த உலகம் விண்ணகமாக மாறுவதற்கான வழி தான் இயேசு மேலே குறிப்பிட்டவை.
மாற்ற இயலாது என்று எதுவும் இல்லை. மாறுவதற்கு தான் நாம் தயாராக இல்லை.
ஒவ்வொரு மனிதரின் தனிப்பட்ட மாற்றம் தான் மொத்த சமூக மாற்றம்.
தீமையை நன்மையால் வெல்ல முடியும் என்பதற்கு இயேசு மிக பெரிய உதாரணம்.
தனக்கு கொடுமை செய்தவர்களையும் அவர் சிலுவையில் மன்னித்தார். காரி உமிழ்ந்தவர்களையும் காயப்படுத்தியவர்களையும் நேசித்தார்.
இது தானே தீமைக்கு பதில் நன்மை.
பேதுரு எழுதிய முதல் திருமுகம் 3:9 இவ்வாறு சொல்கிறது, "தீமைக்குப் பதில் தீமை செய்யாதீர்கள்; பழிச்சொல்லுக்குப் பழிச் சொல் கூறாதீர்கள்; மாறாக, ஆசி கூறுங்கள். ஏனென்றால் கடவுள் வாக்களித்த ஆசியை உரிமையாக்கிக் கொள்வதற்கே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்."
மற்றவர்கள் எப்படியோ நான் இயேசுவின் வழியில் நடப்பேன் என்ற மனப்பாங்கு இருந்தால் எத்தனை கொடுமைகள், துன்புறுத்தல்கள் நமக்கு முன் நின்றாலும் நன்மை செய்வதை தவிர மாற்று செயல்பாடு நம்மிடம் வராது.
No comments:
Post a Comment