பொதுக் காலம் 4ஆம் வாரம்
07.02.2025 - வெள்ளிக் கிழமை
"நாவினால் தவறு செய்யாதோர் பேறுபெற்றோர்; அவர்கள் பாவங்களுக்கான மன உறுத்தல் இல்லாதவர்கள்" - சீராக்கின் ஞானம் 14:1
தவறு சரி இரண்டுக்கும் இடையில் நாம் எந்த பக்கம். இவ்வுலகின் பார்வையில் தவறு தான் சரியாக பார்க்கப்படுகிறது. தவறு தன் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆனால் விலைபேசப்பட்டாலும் மிரட்டல் விடுக்கப்பட்டாலும் தவறு சரியாக மாற முடியாது. சரியானவர்கள் தண்டிக்கப்பட்டாலும் சரி சரியாக தான் இருக்கும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 6:14-29) தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்த (பாலைவன வாழ்க்கை) யோவான் பொது வாழ்க்கைக்கு வந்து தவறை சுட்டிக் காட்டியதால் , தலை வெட்டப்பட்டு உயிர்த் தியாகம் செய்கிறார்.
நல்லவர்கள் கொலை செய்யப்படுவதும், தீயவர்கள் தழைத்தோங்கி வாழ்வதும் அன்று தொடங்கி இன்று வரை நீடிக்கிறது.
சிலர் நன்மை செய்ய தயங்குவது, உயிரை இழந்து விடுவோமோ என்ற பயத்தினால் தான். அஞ்சி அஞ்சி வாழ்பவனுக்கு அனுதினமும் சாவுதான். பயப்படாத வீரனுக்கு ஒரே ஒரு சாவு தான்.
யாரும் சாவை விரும்பி ஏற்பதில்லை. நல்லதை சொல்வதால், நன்மை செய்வதால் மரணம் உண்டு என்பதை புனிதர்களின் வாழ்வும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் வாழ்வும் படம்பிடித்து காட்டுகிறது.
இறப்பு வந்து விடுமே என்று சொல்லி நல்லோர், நன்மை எனும் நேர்கோட்டில் இருந்து விலகுவதில்லை.
"நீதியின் பொருட்டு துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது (மத்தேயு 5:10) என்ற இறைவார்த்தைக்கு சொந்தக்காரர்கள் தான் நல்லது செய்து உயிரை தியாகம் செய்தவர்கள்.
நலமுடன் வாழ ஒருவேளை இவ்வுலகில் சாத்தியம் இல்லை என்றாலும் நாம் எதிர்நோக்கி இருக்கக்கூடிய விண்ணக வாழ்வில் அது நிறைவாய் கொடுக்கப்படும்.
இன்று மனிதர்கள் தவறு செய்ய துணிவதனுடைய காரணம், நமக்கு மேல் யார் இருக்கிறார்? நமக்கு அடுத்து என்னவாகும்? என்ற சிந்தனை இல்லாதது தான்.
தவறு செய்வோர் இருக்க அதை தட்டிக்கேட்போர் பலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அவர்களில் ஒருவர்தான் திருமுழுக்கு யோவான். தன்னை நாடி வரக்கூடியவர்கள் எந்த நிலையில் இருந்தாலும் (உயர்நிலையோ தாழ்நிலையோ) அவர்கள் செய்வது தவறு என்றால் அதை அதிகாரத்தோடு தட்டிக் கேட்கக் கூடியவர்தான் திருமுழுக்கு யோவான்.
திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்கு சுட்டிக்காட்டு பாடம். உண்மைக்கும் தீமைக்கும் இடையேயான போராட்டத்தில் தீமையோடு சமரசம் செய்து கொள்ளக்கூடாது. பெயரை இழக்க நேர்ந்தாலும், ஏன் உயிரையே இழக்க நேர்ந்தாலும் தீயவர்களோடு கைகோர்க்க கூடாது.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட நம் குரல் ஓங்கி நிற்கட்டும். மனமாற்றம் மண்ணில் (மனதில்) உருவாகட்டும்.
No comments:
Post a Comment