பொதுக் காலம் 7ஆம் வாரம்
24.02.2025 - திங்கட் கிழமை
"இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்." - மாற்கு 10:27
இயலாமை நம்முள் ஒட்டி பிறந்த குணநலன் அல்ல. இயலாமையை இல்லாமை ஆக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். என்னால் முடியாது? என்னால் எப்படி தனியாக செய்ய முடியும்? நான் செய்தால் சரிபட்டு வருமா? என்று நமக்குள் கேட்கப்படும் பல கேள்விகள் நம்மை இயலாமைக்கு அழைத்து செல்கிறது.
என்னால் முடியும் என்பது தலைக்கணம் ஆகாது, என்னால் மட்டும் முடியும் என்பதே தலைக்கணம். என்னால் மட்டும் முடியும் என்பதும் என்னால் ஏதும் முடியாது ஆகிய இரண்டும் தவறு.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9: 14-29) தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த சிறுவனை இயேசு குணமாக்குகிறார். முதலில் அச்சிறுவன் இயேசுவின் சீடர்களிடம் தான் அழைத்து வரப்பட்டார். ஆனால் அவர்களால் இந்த தீய ஆவியை விரட்ட முடியவில்லை/இயலவில்லை.
இயேசு வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டனர். அதற்கு அவர், “இவ்வகைப் பேய் இறைவேண்டலினாலும் நோன்பினாலும் அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்.
எல்லா காரியங்களையும் அறிவாற்றலால் செய்து விட முடியாது, எல்லாக் காரியங்களையும் அனுபவத்தால் மட்டும் செய்து விட முடியாது. சில இடங்களில் அறிவும் அனுபவமும் இணைய வேண்டும்.
இயேசு வல்ல செயல் செய்ததற்கு அடிப்படையாக இருந்தது, இறை ஆற்றல், நலம் பெறுபவர்களின் நம்பிக்கை ஆகிய இரண்டும் இணைந்தது தான் காரணம்.
இறை ஆற்றல் அவரிடம் இருந்தும் கூட அவரது சொந்த ஊரில் அவரால் வல்ல செயல் செய்ய இயலவில்லை. அதற்கு காரணம் அம்மக்களின் நம்பிக்கை குறைபாடு தான்.
ஆனால் இந்த வல்ல செயல் (தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த சிறுவனுக்கு நலமளிக்க) செய்ய, சீடர்களிடம் இறை ஆற்றல் இருந்தது, நலம் பெறுவோரிடம் நம்பிக்கை இருந்தது. அதற்கும் கூடுதலாக தேவைப்பட்டது இறைவேண்டல் நோன்பு. சீடர்கள் வல்ல செயல் செய்ய இவை அவசியமாக தேவைப்பட்டது.
எல்லோராலும் எல்லாம் இயலாது, ஆனால் எல்லோராலும் (ஏதாவது செய்ய) இயலும். சிலவற்றை தனியாக செய்ய இயலாது என்றால் பிறரின் ஒத்துழைப்போடு இணைந்து செய்யலாம்.
ஒன்றை செய்வதற்கு ஆற்றலும் ஆக்கமும் மனத்திடமும் தேவை.
தயக்கம் தள்ளி போடுதல் இவை குறையும் போது நம்மால் இயலாது என்று நாம் எண்ணுவதும் நம்மால் செய்ய இயலும். ஆற்றல், அறிவு, அனுபவம் ஆகியவற்றை இணைத்து ஆக்கம் நிறைந்த செயல்களை செய்வோம்... நம்மால் இயலும்; நம்மால் எல்லாம் கூடும்.
No comments:
Post a Comment