பொதுக் காலம் 6ஆம் வாரம்
19.02.2025 - புதன் கிழமை
"ஆண்டவர் தம் கையை நீட்டி என் வாயைத் தொட்டு என்னிடம் கூறியது: “இதோ பார்! என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன்" -எரேமியா 1:9
ஒவ்வொரு மனிதரின் தொடுதலும் ஒவ்வொரு அர்த்தத்தை சொல்கிறது. அனாதையாக சாலை ஓரங்களில் படுத்துக் கிடப்பவர்கள் அருகில் சென்று உங்களுக்கு என்ன வேண்டும்? என்று தொட்டு கேட்கும் போது அந்த நபர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை.
தொடுதலுக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது. நம்முடைய வீடுகளில் படுத்த படுக்கையாக நீண்ட நாட்கள் இருக்கும் முதியோரை தொட்டு பேசும் போது அவர்கள் மதிக்கப்படுவதை அவர்கள் உணர்வார்கள்.
மருந்தும் மாத்திரையும் குணப்படுத்தாததை தொடுதல் சரி செய்துவிடுகிறது.
இயற்கையின் ஆற்றல் தொடுதலில் வெளிப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:22-26) இயேசு பார்வையற்றவரை மூன்றுமுறை தொடுகிறார்.
மூன்றாம் தொடுதலில் அந்த நபர் முழு பார்வை பெறுகிறார்.
இயேசுவின் புதுமைகள் பெரும்பாலும் தொடுதலின் வழியாகவே நடைபெற்றது. நலம்பெற விரும்புபவர் இயேசுவை தொடுவார் அல்லது நலம் கொடுப்பவர் நோயாளியை தொடுவார்.
இன்று சக மனிதர்களின் நலனில் நமக்கு அக்கறை தேவைப்படுகிறது. நலம் குன்றியவர்களை தொட்டு நலப்படுத்த வேண்டியுள்ளது.
"தீட்டு தீட்டு" என்று சொல்லி ஒதுங்கி செல்லும் மனப்பான்மை மறைய வேண்டும். நம்பிக்கையோடு கூடிய தொடுதல் நிச்சயம் நலம் அளிக்கும்.
நாம் மற்றவரை நேர்மறையோடு தொடும் போது நம்முடைய வாழ்வும் நேர்மறை சிந்தனைகளால் தொடப்படும்.
No comments:
Post a Comment