பொதுக் காலம் 6ஆம் வாரம்
17.02.2025 - திங்கட் கிழமை
புனித கன்னி மரியாவின் ஊழியர் துறவு அவையை நிறுவிய புனிதர் எழுவர்...
13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் நகரில் உள்ள மக்கள் கடவுளை மறந்து தங்களுடைய மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தார்கள். இந்த வேளையில் அவர்கள் மத்தியில் இறை நம்பிக்கையும் தூய்மையும் நிறைந்த 7 நபர்கள் இருந்தார்கள். மரியன்னை மீதும் பக்தி கொண்டு வாழ்ந்தார்கள்.
1233ஆம் ஆண்டு அன்னை மரியா இவர்களுக்கு காட்சி கொடுத்து இறைபணி செய்ய அழைப்பு விடுத்தார்.
இவர்களில் நான்கு பேர் ஏற்கனவே திருமணம் முடித்து இருந்தார்கள் மூன்று நபர்கள் மணமுடிக்காமல் இருந்தார்கள். இந்த நான்கு பேரும் தம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களை ஓரளவு கரையேற்றிவிட்டு இந்த துறவு வாழ்க்கையை வாழ ஆரம்பித்தார்கள்.
ஊருக்கு வெளியே சென்று ஜெபத்திலும் நோன்பிலும் தவத்திலும் ஈடுபட்டார்கள். இவர்களுடைய வாழ்க்கை முறையை கண்டு பல்வேறு நபர்கள் இவர்களை சந்திக்க வந்தார். இது தங்களுடைய துறவற வாழ்க்கைக்கு தடையாக இருந்தது எவ்வளவு சொல்லியும் மக்கள் தேடி வருவதை நிறுத்தவில்லை.
நாட்கள் செல்ல செல்ல இவர்களுடைய துறவற வாழ்க்கை கடவுளுக்கு உகந்ததாக மாறியது. மரியன்னை இவர்களுக்கு காட்சி தந்தார். கையில் கருப்பு நிற ஆடையை வைத்திருந்தார். அவரோடு ஒரு வானதூதரும் காட்சி தந்தார். அவருடைய கையில் ஒரு சுருளேடும் அதில் 7 நபருடைய பெயர்களும் பொறிக்கப்பட்டிருந்தது.
"நான் உங்களை என்னுடைய ஊழியர்களாக தேர்ந்துக் கொண்டேன். இந்தக் கருப்பு நிற ஆடைதான் உங்களுடைய உடையாக இருக்கும் நீங்கள் புனித அகுஸ்தீனுடைய ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்து வாழுங்கள்" என்று சொல்லி விட்டு அன்னை மரியா மறைந்து விட்டார்.
இறுதிவரை ஏழு பேரும் நோன்பிலும் நிறைவேற்றிலும் உறுதியாக இருந்து சபையினுடைய வளர்ச்சிக்காக பாடுபட்டார்கள்.
உலக காரியங்களை பின்பற்றிய மக்கள் கூட்டத்தின் நடுவில், உலக இன்பங்களை துறந்து தூய்மை தான் தங்கள் அடையாளம் என்பதை இவர்கள் காட்டி விட்டார்கள்.
தன்னிலை உணர்தல் தன்னை சுத்திகரிக்கும் என்பதற்கு இவர்களே சான்று.
நம்முடைய அடையாளம் என்ன? நம் வாழ்வு யாரை பிரதிபலிக்கிறது? நாம் யாரை சார்ந்து இருக்கிறோம் என்பது நம் தேடலாக இருக்கட்டும்.
No comments:
Post a Comment