பொதுக் காலம் 6ஆம் வாரம்
20.02.2025 - வியாழக் கிழமை
"ஆனால் உங்களுக்கிருக்கும் உரிமை மனவலிமையற்றவர்களுக்குத் தடைக்கல்லாயிராதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்" - 1கொரிந்தியர் 8:9
யாரெல்லாம் நமக்கு தடையாக இருக்கிறார்களோ அவர்களை நாம் கண்டுக் கொள்ள மாட்டோம் அல்லது விட்டு வைக்க மாட்டோம். நம்முடைய வளர்ச்சியில் குறுக்கிடும் யாவரும் நமக்கு எதிரியே!
சில மனிதர்களின் வாழ்வில் சிலர் வைக்கும் தொடர் தடைகள் வாழ்வில் மீண்டும் எழ முடியாமல் செய்து விடுகிறது. சிலர் நம் வாழ்வின் நேர்மறையான தடைகள், சிலர் நம் வாழ்வின் எதிர்மறையான தடைகள்.
தனக்கு ஏற்றார் போல நம்மை மாற்ற எண்ணுபவர்கள் நமக்கு தேவையில்லை, நம்மை செதுக்குபவர்களே நமக்கு தேவை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 8:27-33) இயேசு தன்னை பற்றி மற்றவர்களும் சீடர்களும் தெரிந்துக் கொண்டவற்றை அறிந்துக் கொள்கிறார்.
தன் பாடுகளை முன்னறிவிக்கிறார். அப்போது பேதுரு இதற்கு தடை செய்யும் விதமாய் இயேசுவை கடிந்துக் கொண்டார். இயேசு பேதுரு பக்கம் திரும்பி, "என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார்.
தன் பணிவாழ்வுக்கு/ இறைத்திருவுளத்தை நிறைவேற்ற யாரெல்லாம் தடையாய் இருந்தார்களோ அவர்களையெல்லாம் இயேசு தடை செய்தார்/கண்டித்தார்.
நல்லது செய்ய ஒருபோதும் யாரும் தடையாய் இருக்க கூடாது. கெட்டது நடக்கிறது என்றால் தள்ளியும் நிற்க கூடாது.
மற்றவர்களின் வாழ்வில் நடக்க இருக்கும் நற்காரியங்களை நாம் தடை செய்தால் நம் வாழ்விலும் நற்காரியங்கள் தடைப்பட்டு நிற்கும்.
உரோமையருக்கு எழுதிய திருமுகம் 14:13இல் சொல்லப்பட்டுள்ளது போல, "ஆகையால், இனி ஒருவர் மற்றவரிடம் குற்றம் காணாதிருப்போம். மேலும் சகோதரர் சகோதரிகளுக்குத் தடைக்கல்லாகவோ இடையூறாகவோ இருப்பதில்லை எனத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்".
எதிர்மறையான தடைகளுக்கு நாம் நேர்மறை எண்ணங்களால் தடை போடுவோம்...
No comments:
Post a Comment