28.02.2025 - வெள்ளிக் கிழமை
"இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்.” - மத்தேயு நற்செய்தி 19:6
பிரிவு இரண்டு வகையில் வருகிறது, ஒன்று இறப்பு இன்னொன்று மனிதரின் சூழ்ச்சியால். சில பிரிவு மகிழ்ச்சியை அளிக்கிறது, சில பிரிவு துயரத்தை வருவிக்கிறது.
சில குடும்பங்கள் காரணம் இல்லாமலே பிரிந்துக் கிடக்கிறது. சில குடும்பங்கள் இணைய முடியாமல் தவிக்கிறது. சில மனிதர்களின் தந்திரம் நிறைந்த செயல்பாடு பல குடும்பங்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்து நிறுத்து விட்டது. மற்றவர்கள் சொல்வதை ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்பி செயல்படுபவர்கள் துயரத்தை தான் அனுபவிக்க வேண்டி இருக்கும்.
திருமணத்திற்கு முன் பல காரியங்களை செய்து, நன்கு பேசி, நல்ல நேரம் கெட்ட நேரம் எல்லாம் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகின்றன. நல்ல நேரம் பார்ப்பவர்கள் இருமணம் இணைந்துள்ளதா என்று பார்ப்பதில்லை.
கர்வம், ஆணவம், தற்பெருமை இன்று பல குடும்பங்களை பிரித்து வைத்துள்ளது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:1-12) பரிசேயர் இயேசுவை அணுகி, கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா? என்று கேட்டு சோதித்தனர்.
"கணவனோ மனைவியோ தவறு செய்கின்ற போது ஒருவர் மற்றவரை விலக்கி விடுவது முறையா?" என்று கேள்வி அமைந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
அது ஆணாதிக்க சமூகம், எனவே தவறு செய்தது ஆணாக இருந்தாலும் கூட பெண்ணை தான் குற்றவாளியாக்கி அழகு பார்க்கும்.
இயேசுவின் பதிலோ, "தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபசாரம் செய்கிறான். தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்".
கடவுள் இணைத்ததை மனிதர் ஒருபோதும் பிரித்தல் ஆகாது.
இன்று கணவனோ மனைவியோ சேர்ந்து வாழ ஆசைப்பட்டால் கூட குடும்பத்தினர் இணைய விடுவதில்லை.
தாய் தந்தை இருவரும் பிரிந்து வாழும் நிலையை காணும் குழந்தையின் மனம் மிகவும் பாதிக்கப்படும் என்பதை கல் நெஞ்சங்கள் உணர்ந்துக் கொள்வதில்லை.
உணர்வற்ற மனிதர்களால் இன்று பலர் பிரிந்தே இருக்கிறார்கள்.
கடவுள் இணைத்ததை பிரித்த/பிரிக்கின்ற மனிதர் கடவுளுக்கு எதிராக பாவம் செய்கிறார்.
No comments:
Post a Comment