பொதுக் காலம் 5ஆம் வாரம்
13.02.2025 - வியாழக் கிழமை
"இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்" - உரோமையர் 12:2
எல்லோரையும் மாற்ற முடியாது என்பது உண்மை தான்; ஆனால் மாற்ற நினைத்தால் ஒரு சிலரையேனும் அல்லது அவர்களது சிந்தனை ஓட்டங்களையேனும் மாற்றி விடலாம்.
மாற்றம் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் உண்டாகலாம். மாற்றங்களை விரும்பி தேடுவோரும் உண்டு; இது இப்படியே இருந்து விட்டு போகட்டும் என்போரும் உண்டு...
சிலரது வாழ்வில் சிறிய மாற்றம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். சிறு சொல் கூட நேர்மறையாகவோ/எதிர்மறையாகவோ மாற்றத்தை ஏற்படுத்தி விடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 7:24-30) கிரேக்க பெண் ஒருவர் இயேசுவின் காலில் விழுந்து தீய ஆவியினால் பாதிக்கப்பட்ட தன் மகளை காப்பாற்றி விட கேட்கிறாள். பிள்ளைகளுக்குரிய உணவை நாய்க் குட்டிகளுக்கு போடுவது முறையல்ல என்று இயேசு சொல்ல, சிறு பிள்ளைகள் சிந்தும் உணவை மேசையின் கீழிருக்கும் நாய்க் குட்டிகள் தின்னுமே என்று பதில் சொல்கிறார்.
அப்பெண்ணின் வார்த்தை இயேசுவை மாற்றி விடுகிறது / இயேசுவை வல்ல செயல் செய்ய வைக்கிறது. அப்பெண் இயேசுவின் வார்த்தைகளுக்கு பிறகு ஒன்றும் சொல்லாமல் போய் இருந்தால் அப்பெண்ணின் மகளுக்கு மாற்றம் ஏதும் நடந்திருக்காது.
நம்பிக்கை மாற்றத்தை கொணர்கிறது. நம்பிக்கை நலமளிக்கிறது.
என்னால் பெரிதாக என்ன நடந்து விட போகிறது என்ற கேள்வியை மாற்றி நான் நினைத்தால் சில மாற்றங்களை கொணர முடியும் என்று சொல்ல ஆரம்பிக்க வேண்டும்.
யாராலும் இவர்களை/இந்த செயல்பாடுகளை மாற்ற முடியாது என்று ஆயிரம் இருக்கலாம், ஆனால் நம்பிக்கையும் செயல்திறனும் இருந்தால் எதையும்/யாரையும் மாற்றலாம்.
மாறிக் கொண்டு இருக்கும் இவ்வுலகில் மாற்றங்களை நோக்கி நகர்வோம். மாற்றத்தை ஏற்படுத்துவோம்...
No comments:
Post a Comment