25_02

மனித மாண்பை மதிக்கிறார் இயேசு...


பொதுக் காலம் 4ஆம் வாரம் 

03.02.2025 - திங்கட் கிழமை 

பல தீய ஆவிகள் தீய எண்ணங்கள் வடிவில் சுற்றி வருகிறது. எல்லா மனிதர்களுக்குள்ளும் தீய எண்ணங்கள் குடிக் கொண்டிருக்கிறது. தீய எண்ணங்களை சரிப்படுத்த நேர்மறை எண்ணங்களை உள்ளத்தில் ஏற்க வேண்டும்.

எப்போது உள்ளம் நேர்மறையால் நிரப்பப்படுகிறதோ அப்போது எதிர்மறை காணாமல் போய்விடும். இயேசுவின் பணி வாழ்வில் அவர் செய்த நன்மைகளை பாராட்ட மனம் இல்லாதவர்கள் அவருக்கு எதிராக விமர்சனங்களை அள்ளி தெளித்தார்கள். ஆனால் இயேசு தன்னை எதிர்கொண்டு வந்த எதிர்மறை எண்ணங்களையெல்லாம் நேர்மறையாக மாற்றினார். 

மற்றவர்களின் எதிர்மறை சிந்தனை இயேசுவின் செயல்களுக்கு/பணிவாழ்வுக்கு தடையாய் அமையவில்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 5: 1-20) தீய ஆவி பிடித்த மனிதரை இயேசு குணப்படுத்துகிறார். தீய ஆவி பிடித்த மனிதர் இயேசுவிடம், "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே, உமக்கு இங்கு என்ன வேலை? கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்” என்று உரத்த குரலில் கத்தினார்."

தீயஆவிகள் கூட தூய்மையானவரை கண்டுகொள்கிறது. தீய ஆவியை இயேசு பேசவிடவில்லை. அதனை அதட்டி மனிதரிடமிருந்து தீய ஆவியை விரட்டுகிறார்.

இயேசு ஏன் அந்த தீய ஆவியை விரட்ட வேண்டும்? 

ஒரு மனிதருக்குள் தீய ஆவி குடிகொள்கிற போது அவர் தன்னிலை மறந்தவராக மாறிப் போகிறார். தான் செய்வது, தான் சொல்வது என்னவென்று அவருக்கு தெரியாது. தீய ஆவி குடி கொண்டிருக்க கூடிய அந்த மனிதர், அந்த சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டவராக கருதப்படுவார். சொந்த உறவினர்களே அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே பன்றிகளுக்குள் அனுப்புகிறார். பொருளாதார இழப்பை விட மனித மாண்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.

சமூகத்தால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு அன்பும் அக்கறையும் இயேசுவை வல்ல செயல் செய்ய வைத்தது.

இயேசுவின் வல்லமை அதிகாரம் தீமைக்கும் தீயவர்களுக்கும் எதிராக இருந்தது.

இன்று நம்முடைய வாழ்வில் தீமைக்கும் தீயவர்களுக்கும் இடம் கொடுத்தால் நாமும் மாண்பை/மதிப்பை இழந்தவர்கள் தான். 

தொடக்க நூல் 6:5 இவ்வாறு சொல்கிறது, "மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனைகளெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்". 

மனித இதயம் தீமையின் வடிவமாக இருக்கிறது.

தீமை இருக்கும் இடத்தில் நன்மைக்கு இடம் இல்லை. 

நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணினால் மட்டும் போதாது நன்மை செய்ய வேண்டும்.

நன்மை செய்வோருக்கு எதிர்ப்பு உண்டு. நன்மை செய்யும்போது தடைகள் வரும். இருந்த போதிலும் தீமையை நன்மையால் வெல்வேன் என்ற மனநிலை நம்மில் இருக்க வேண்டும். 

நன்மை தீமை என்னும் தராசில் நம் "அளவீட்டு முள்" எந்த பக்கம் இறங்க போகிறது?

தீமைக்கும் தீவினைக்கும் எதிராக நன்மை என்னும் போர்க் கொடி பிடிப்போம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...