பொதுக் காலம் 7ஆம் வாரம்
01.03.2025 - சனிக் கிழமை
"மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது" - திருப்பாடல்கள் 131:2
குழந்தைகள் கற்றுக் கொள்வதில்லை மாறாக, கற்றுக் கொடுக்கிறார்கள் என்று சொல்லலாம். எதை கற்றுக் கொடுக்கிறார்கள்? எதையெல்லாம் கற்றுக் கொண்டார்களோ அதையெல்லாம் திரும்ப கற்றுக் கொடுக்கிறார்கள்.
குழந்தைகள் மாசற்றவர்கள் என்பது அவர்களின் கள்ளம் கபடமற்ற உள்ளத்திலிருந்து வெளிப்படுகிறது. பெற்றோர்கள் சொல்வதை ஒளிவு மறைவு இல்லாமல் அப்படியே வெளியே சொல்லி விடுவார்கள் (எ.கா. - எங்க அம்மா/அப்பா உங்களிடம் பேசக் கூடாதுன்னு சொன்னாங்க, உங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொன்னாங்க).
எதெல்லாம் குழந்தைகளின் உள்ளத்தில் சிறிய வயதில் விதைக்கப்பட்டதோ அது ஆழ்மனதில் பதிகிறது.
வெறுப்புகளை, கோபத்தை, உணர்வுகளை குழந்தைகள் முழுவதும் வெளியே காட்டிக் கொள்வது இல்லை. நாட்கள் செல்ல செல்ல அது வெளிவர ஆரம்பிக்கிறது.
நல்லதை விதைத்தால் நல்லது விளையும், கெட்டதை விதைத்தால் கெட்டது தான் விளையும்.
குழந்தைகளை குழந்தைகளாக இருக்க நாம் விடுவதில்லை. பெற்றுக் கொண்டதை அவர்கள் பின்னாளில் நமக்கே திருப்பிக் கொடுக்கிறார்கள்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:13-16) சிறுபிள்ளைகளை இயேசுவிடம் அழைத்து வந்த போது சீடர்கள் அவர்களை அதட்டினர், தடுத்தனர்.
இயேசு சீடர்கள் மீது கோபம் கொண்டு, "சிறு பிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது. இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்று சொன்னார்.
இறைவன் வழங்கும் ஆசிர் மக்கட்செல்வம். இறைவன் வழங்கும் மற்றொரு பெரிய ஆசிர் குழந்தை உள்ளம்.
குழந்தை உள்ளம்/ மனநிலை நம்மிடம் இருக்கிறது என்றால் நாம் பேறுபெற்றவர்களே!
குழந்தைகளையும் தடுக்க வேண்டாம் குழந்தை உள்ளதையும் தடுக்க வேண்டாம்.
இறைவன் தந்த வாழ்வை போட்டி, பொறாமையற்ற நல்லாசிரோடு கழிப்போம். பெற்றுக் கொண்ட அருள் வாழ்வில் நிலைத்து நிற்போம்...
No comments:
Post a Comment