பொதுக் காலம் 5ஆம் வாரம்
14.02.2025 - வெள்ளிக் கிழமை
பல மனிதர்களின் காதுகள் திறக்கப்படாமலே இருக்கின்றது. பல மனிதர்களின் நாவும் திறக்கப்படாமலே இருக்கின்றது. திறக்கப்பட்டால் தான் உள்ளே போக வேண்டிய நற்கருத்துகள் உள்ளே போகும்.
நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற மனநிலை இன்று மேலோங்கி விட்டது.
பிள்ளைகள் தங்கள் பெற்றோரின் கருத்துக்களுக்கு கூட காது திறந்து செவிமடுப்பதில்லை. அதற்காக சொல்லாமல் இருந்து விட முடியாது. நல்லதை நல்லது என்றோ கேட்டதை கேட்டது என்றோ சொல்லவில்லை என்றால் எது நல்லது எது கேட்டது என்று தெரியாமல் போய்விடும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் திக்கு வாய் மற்றும் காது கேளாதவருக்கு இயேசு நலம் கொடுக்கிறார். 'எப்பத்தா' அதாவது திறக்கப்படு என்று சொல்லி நலம் அளிக்கிறார் இயேசு.
பிரச்சினைகள் தவிர்க்கப்பட காது கேட்டும் கேட்காமலும் இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இருக்காது என்பது உண்மை தான். ஆனால் காது கேட்காமலேயே இருப்பது வேதனையிலும் வேதனை.
பல பிரச்சினைகளுக்கு மூலக் காரணம் வாய் தான் என்பார்கள். அந்த வாய் இல்லை என்றாலும் பிழைக்க முடியாது.
இப்படி காது கேட்காமல், தெளிவாக பேச முடியாமல் இருந்தவருக்கு நலம் கிடைக்கிறது என்றால் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. எனவே தான் இயேசு சொன்னதையும் கேட்காமல் இயேசு செய்தவற்றை வாயார அறிவிக்கிறார். தன் கண்கள் கண்டதை தன் வாய் உரைக்க அதை தன் காதுகள் கேட்கின்றன... மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்திருப்பார் அம்மனிதர்.
நம்முடைய வாழ்விலும் பல கதவுகள் திறக்கப்பட வேண்டி இருக்கிறது. பெற்றுக் கொண்ட ஆசிர்வாதங்களுக்கு நாம் நன்றியாக/ கைம்மாறாக மற்றவர்களின் வாழ்வில் இருக்கக்கூடிய அடைப்புக்களை திறந்து விட வேண்டும்.
மகிழ்ச்சி/அன்பு/நம்பிக்கை என்னும் திறவுக் கோல் நம்மிடம் தான் இருக்கிறது. திறக்கப்பட வேண்டிய இடம் தேடி அலைவோம்...
No comments:
Post a Comment