பொதுக் காலம் 5ஆம் வாரம்
12.02.2025 - புதன் கிழமை
மனிதனின் உள் இருந்து வெளியே வருவது தான் மனிதனையும் மனிதத்தையும் தீட்டுப்படுத்துகிறது...
குழந்தை பருவத்தில் விளையாடி விட்டு வருகிற போது குழந்தைகளின் கைகள், உடைகள் அழுக்கு படிந்து இருக்கும். ஆனால் குழந்தைகளின் உள்ளம் எப்போதும் தூய்மையாக இருக்கும் (பொறாமைப்படுதல், பழிவாங்குதல், எரிச்சல் ஆகியவை இங்கு கிடையாது). வளர வளர உள்ளம் அழுக்கு படிந்து காணப்படுகிறது. நல்லது எது தீயது எது என்பதை பகுத்து அறியக் கூடிய பருவத்தில் தான் எல்லா குப்பைகளையும் உள்ளத்துக்குள்ளே குவித்து வைக்கிறோம்.
புனித அகுஸ்தினார் சொல்வார் 'தீமைகளை, பாவங்களை அறிக்கையிடுவதே நன்மைத்தனத்தின் தொடக்கம்'
நான் மாசுள்ளவன்(ள்) என்பதை கண்டுணராத வரை, நான் மற்றவர்களையும் அவர்கள் செய்வதையும் தீட்டாகத் தான் கருதுவேன். தீட்டு வெளியில் இல்லை, நம் உள்ளே இருக்கிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 7: 14-23) இயேசு மக்கள் கூட்டத்தை பார்த்து "வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும்" என்று சொல்கிறார்.
தன் சீடர்களை பார்த்து, "மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன."
இவை உள்ளிருந்து வருகின்ற போது வெளியே தீட்டு என்று எப்படி சொல்ல முடியும். தீட்டு விலக்கப்பட வேண்டும். நம் உள்ளத்தில் இருந்து தீமைகள் விலக்கப்பட வேண்டும்.
அடுத்தவரை தீட்டாக கருதும் முன் நம் உள்ளத்தில் உள்ள குப்பைகள் களையப்படட்டும்...
No comments:
Post a Comment