02.03.2024 - சனிக்கிழமை
“உன் குற்றங்களைக் கார்மேகம் போலும், உன் பாவங்களைப் பனிப்படலம் போலும் அகற்றிவிட்டேன். என்னிடம் திரும்பி வா, நான் உனக்கு மீட்பளித்துவிட்டேன்” - எசாயா 44:22
எல்லாம் இருக்கும்போது யாரும் நமது கண்களுக்கு தெரியமாட்டார்கள். எல்லாம் நம்மை விட்டு சென்ற பிறகு நம்மை யாரும் கண்டுக் கொள்ளமாட்டார்கள். இதுதான் எதார்த்தம். நிறைவோடும் வளமோடும் இருக்கின்றபோது நமக்கென்று உறவுகளை சேர்த்து வைக்க வேண்டும். இது பணம் கொடுத்து சேர்க்கப்பட வேண்டிய கூட்டம் அல்ல… நற்செயல்களால் சேர வேண்டிய கூட்டம்.
எல்லா வளங்களும் இருக்கும்போது, தன்னை திருப்திப்படுத்திக் கொள்ளவே இங்கு திண்டாட வேண்டி இருக்கிறது. என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்ய வேண்டும்? என்ற தெளிவற்ற மனநிலை நம்மில் நிலவுகிறது. இருக்கிற வரை ஆடுகிற ஆட்டம் அதிகம், எல்லாம் நம்மைவிட்டு சென்றபிறகு இருக்க இடமும் இல்லை, இருக்கிற இடமும் தெரிவதில்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 15:1-3,11-32) இரண்டு மகன்கள் ஊதாரிகளாக இருக்கின்றார்கள். ஒருவன் சொத்தை பிரித்து, தந்தையை விட்டு பிரிந்து ஊதாரியானான். மற்றொருவன் தந்தையுடன் இருந்தும் தந்தையின் மனதை புரிந்துக் கொள்ளாமல், மனதை கட்டுக்குள் வைக்க முடியாமல் ஊதாரியானான். இளையவன் சொத்தை பிரித்தான். சொத்தை பிரிப்பது என்பது தந்தையோடு உள்ள உறவை முறிப்பது, தந்தை இறந்துவிட்டார் என்பதை குறிப்பது. மூத்தவன் உறவை பிரித்தான். தம்பியையும் புரிந்து கொள்ளவில்லை, தந்தையையும் புரிந்துக் கொள்ளவில்லை.
இவர்களுக்கு இடையில் இடைநிலையாளராக தந்தை இருக்கிறார். இருவரையும் விட்டுகொடுக்க மனமில்லை. எதிர்பார்த்து காத்திருந்த மகன் திரும்பியதும் எல்லையற்ற மகிழ்ச்சி. மூத்தவன் புரிந்துக் கொள்ளவில்லை என்றதும் சிறிது கலக்கம் தான். இருந்தபோதிலும் புரியவைக்கிறார். உறவை புதுப்பிக்கிறார்.
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அநியாயம் செய்தவர்கள் இறுதிவரை குற்றவாளி தான், இப்படிப்பட்டவர்களுக்கு இப்படிதான் நடக்க வேண்டும் என்ற சட்டத்தை வரையறுத்து வைத்திருத்திருக்கின்றோம். அது தவறில்லை, ஆனால் தவறு செய்தவர்கள் மனம் திரும்பி வருகின்றபோது மன்னிக்கவும் நம் சட்டத்தில் இடம் இருக்க வேண்டும். நாமும் தவறுபவர்கள் என்பது மனதில் இருக்கட்டும்.
புனித ஜெரோம் சொல்வார், ‘என்னுடைய தந்தையால் (கடவுளால்) எனக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உடைமைகளையும் வீணடித்த ஊதாரி மகன் நான். நான் இன்னும் என் தந்தையின் காலில் வந்து விழவில்லை, கவர்ச்சியான பழைய பாவ வாழ்க்கையிலிருந்து நான் மீளவில்லை.
தவறை உணர்கிறபோது தான் திரும்பி (திருந்தி) வருவதற்கான வாய்ப்பு உண்டாகும். ஊதாரி மகன் தந்தையிடம் திரும்பி வந்ததால் பேறுபெற்ற மகனாக மாறினான்.
நாமும் திரும்பி வருவோம்… திருந்தி வருவோரை ஏற்போம்...
No comments:
Post a Comment