“அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர்” - பிலிப்பியர் 3:21
இயேசு காட்டும் படிப்பினையில் நாம் உருவாக வேண்டும், இயேசுவை போல நாம் உருமாற வேண்டும்.
நம்மை மாற்றுவதற்கு எல்லா ஆற்றலும் பெற்றவர் இயேசு. இங்கு அவர் எதிர்பார்ப்பது மாற்றம் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்பதுதான். அது உடல், உள்ளம், ஆன்மா சார்ந்த முழுமாற்றம்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம் 3:8இல், “என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன்” என்று சொல்வார்.
இயேசுவில் உருபெற வேண்டும் என்றால் எல்லாவற்றையும் இழப்பது நல்லது. குறைவில் (வெறுமையில்) தான் நிறைவை கொண்டு வர முடியும். இயேசுவாக நாம் உருமாற வேண்டும் என்றால் நமக்குள் இருக்கக் கூடிய கோபம், பொறாமை, எரிச்சல், பழிவாங்குதல், அகந்தை… இவையெல்லாம் வெளியேற வேண்டும். ஒளி இருக்கும் இடத்தில் இருளுக்கு வேலை இல்லை (“அந்த ஒளி இருளில் ஒளிர்ந்தது; இருள் அதன்மேல் வெற்றி கொள்ளவில்லை” யோவான் 1:5).
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற் 9:2-10) இயேசு உருமாறுகிறார் (தோற்றம் மாறுகிறார்). மனிதத் தன்மையில் இருக்கும் இயேசு, தெய்வீக தன்மையை வெளிக்காட்டும் தருணம் அது. இயேசு இறைமகன் என்பது மீண்டும் வலியுறுத்தப்படும் இடம். தந்தையாம் கடவுள், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று கூறுகிறார். இயேசு மீண்டும் இங்கு இறைமகனாக அங்கீகாரம் பெறுகிறார்.
முதல் வாசகத்தில் (தொடக்க நூல் 22:1-2,9-13:15-18) ஆபிரகாம் சோதிக்கப்பட்டார், ஆனால் அவர் கைவிடப்படவில்லை. மகனை பலியிட சென்றார், ஆனால் மகனை பலியிடவில்லை. கண்ணுக்கு புலப்படாதவை பற்றிய ஐயம் இல்லாமல் இருந்தார். இறைவனின் ஆசிரை நிரம்ப பெற்றுக் கொண்டார். இதற்கு காரணம் அவர் நம்பிக்கையில் உருபெற்றார். நிலைதடுமாறவில்லை.
இரண்டாம் வாசகத்தில் (உரோ 8:31-34) இயேசு நம் சார்பில் இருக்கும்போது நமக்கு எதிராய் யார் இருக்க முடியும்? யார் நமக்கு எதிராக செயல்பட முடியும்? என்கிறார் திருத்தூதர் பவுல். கடவுள் நம்மில் இருக்கிறார் என்பது உண்மை. ஆனால், நாம் கடவுளின் உருவை மாசுபடாமல் காக்கிறோமா? கடவுளின் உருவில் நிலைத்திருக்கிறோமா? என்பதை சிந்திக்க வேண்டும்.
இயேசுவின் தோற்ற மாற்றத்தில் சீடர்கள் அச்சம் கொண்டார்கள், நாம் கடவுளின் தோற்றத்தை பெற்றிருக்கிறோம் என்ற அச்சம் நம்மில் இருக்க வேண்டும். அவரில் உருவாகுவோம், அவராக உருவாகுவோம்…
அருமை
ReplyDelete