24_05

இயேசுவின் அதிகாரத்தை கொண்டிருக்க...


01.06.2024 - சனிக் கிழமை

 "ஆண்டவரிடமிருந்தே உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது; உன்னத இறைவனிடமிருந்தே உங்களுக்கு ஆட்சியுரிமை கிடைத்தது. அவரே உங்கள் செயல்களைச் சோதித்தறிபவர்; உங்கள் திட்டங்களை ஆராய்பவரும் அவரே" - சாலமோனின் ஞானம் 6:3

இன்று தங்களுடைய அதிகாரத்தால் மற்றவர்களை அடக்கி விடலாம் என்று எண்ணுகிறவர்கள் அதிகம். எவ்வளவு அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் இருந்தாலும் நாம் உரமாவது மண்ணிற்கு தான். உரமாக போகிற நாம், உணர்வுகளை கொஞ்சம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

நான் தான் பெரியவன்(ள்), நான் தான் சிறந்தவன்(ள்) என்ற மமதை நம்மிடம் இருந்தது என்றால் நாம் பேசுகிற எல்லாமே அதிகாரத்தோடும் ஆணவத்தோடும் மட்டுமே இருக்கும்.

அதிகாரமும் ஆணவமும் விண்ணகத்திற்கான வாயில் அல்ல. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 11:27-33) தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் இயேசுவைப் பார்த்து 'எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?' என்று அதிகாரத்தோடு கேட்கிறார்கள். 

இந்த அதிகாரப் பேச்சு இயேசுவை ஒருபோதும் வீழ்த்தி விடப் போவதில்லை என்பது அவர்களுக்கு தெரியாமல் போனது. சோதிப்பதற்காக கேள்வி கேட்டவர்களை இயேசு மற்றொரு கேள்வி கேட்டு சோதிக்கிறார். 

ஒருவேளை இவர்கள் தெரிந்து கொள்வதற்காக, அன்பொழுக இயேசுவிடம் கேள்வி எழுப்பியிருந்தால் பதில் கிடைத்திருக்கும். இங்கு அதிகாரத் தலைமைத்துவம் தலைதூக்கியதால் அவர்களை இயேசு அடக்கி விடுகிறார்.

அதிகாரம், ஆணவம், செருக்கு, அகங்காரம் ஆகியவை ஒருபோதும் மனித மாண்புக்கு வழி வகுப்பதில்லை, மனித மாண்போடும் வாழ வைப்பதில்லை. 

நம் அதிகாரம் இயேசுவைப் போல பணிவிலும் பகிர்விலும் அன்பிலும் வெளிப்படட்டும்.

இயேசுவை போல ஆதிக்க வர்க்கத்தை வேரறுப்போம். 

மகிழ்ச்சியை கொடுக்கும் சந்திப்பு...

31.05.2024 - வெள்ளிக் கிழமை

புனித கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தல் விழா 

"நோயாளிகளைச் சந்திக்கத் தயங்காதே; இத்தகைய செயல் மற்றவர்களின் அன்பினை உனக்குப் பெற்றுத் தரும்" - சீராக்  7:35

பல நாட்கள் காணாதவர்கள், ஒருவர் மற்றவரை சந்திக்கிற போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. தொலைதூரத்தில் இருப்பவர்கள் நெருங்கி வருகின்ற போது மகிழ்ச்சி பொங்கி வழியும். 

அந்த சந்திப்பு அன்பின் வெளிப்பாடு. அந்த அன்பு மகிழ்வில் முழுமை பெறுகிறது. 

நாம் தேவையில் இருக்கின்ற போது நாம் எதிர்பாராத சமயத்தில், நமக்கு மிகவும் பிடித்த நபர் நம்மை சந்திக்கிறார், நம்மோடு உடன் இருக்கிறார் என்றால் அந்த மகிழ்ச்சியின் உணர்வை வரையறை செய்ய முடியாது. 

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது 

என்கிறது திருக்குறள். தேவையில் செய்யப்படும் உதவி சிறிது என்றாலும் அது காலத்தின் தேவை அறிந்து செய்யப்பட்டதால் அது பெரிதாகவே பார்க்கப்படும்.

சந்திப்பு என்பது ஒரு சிறிய உதவி தான், ஆனால் உணர்வுகளைப் புரிந்த அந்த சந்திப்பு பெரும் உதவியாக பார்க்கப்படும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-56) அன்னை மரியா எலிசபெத்தம்மாளை சந்திக்கின்றார். இந்த சந்திப்பு கபிரியேல் தூதரின் காட்சிக்கு பின்பு நடைபெறுகிறது.

'உம் உறவினர் கருவுற்று இருக்கிறார்' என்று கடவுளின் தூதர் கூறியவை உண்மையா? இல்லையா? என்பதை பரிசோதிப்பதற்கான சந்திப்பு அல்ல, மாறாக உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் எலிசபெத்தமாளை தேற்றுவதற்கான சந்திப்பு.

அன்னை மரியாவின் வாழ்த்தை கேட்டதும் எலிசபெத்தம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. இங்கு அன்னை மரியாவின் சந்திப்பு எலிசபெத்தம்மாளுக்கு மட்டுமல்ல அவருடைய குழந்தைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.

மகிழ்வின் தொடக்கம் சந்திப்பு தான். நம் உறவினரை நாம் சந்திக்கின்ற போது நாமும் அன்னை மரியாவை போல மகிழ்ச்சியை கொடுப்பவராக மாறி விடுகிறோம். 

உணர்வுகளைப் புரிந்த அன்னையைப் போல மற்றவர்களின் உள்ளங்களை புரிந்து செயல்படுவோம்.


நம்பிக்கை கொடுத்த பார்வை ...

30.05.2024 - வியாழக் கிழமை

"பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்" - எசாயா 42:7

சிலர் கண்ணிருந்தும் குருடராக இருக்கின்றார்கள். ஒன்றை (நல்லதை) பார்ப்பதற்காக படைக்கப்பட்டது தான் கண். அந்தக் கண் இருந்தும் பார்க்க இயலாதவர்களாக, கண்டு கொள்ள முடியாதவர்களாக பலர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

கண்ணை இழந்தவருக்குத்தான் அந்த இழப்பின் வலி தெரியும். இருக்கின்ற வரை எதனுடைய அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம். 

இழந்ததை மீண்டும் பெற்றுக் கொள்கிற போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:46-52) பார்வை இழந்தவர் மீண்டும் பார்வை பெறுகிறார். அவருடைய நம்பிக்கை என்பது மற்றவர்கள் அவரை அதட்டிய போதிலும் கூட தடைப்பட்டு போகவில்லை. 

'தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்துகிறார் பார்வை இழந்தவர். இழந்தது பார்வையை தான், பேசும் திறனை அல்ல என்பதனால், அவர் நம்பிக்கையை வார்த்தையின் வழியாக எடுத்துக் காட்டுகிறார்.

தன் நம்பிக்கையை வெளிக்காட்டும் தருணத்தில், பல தடைகள் வெளியே இருந்து வந்தாலும், அதில் துவண்டு போகாத மனம் தான் இந்த பார்வையற்றவர் நமக்கு சுட்டிக் காட்டக்கூடிய பாடம்.

இன்று நம்முடைய பார்வைகள் புது பிறப்பு அடைய வேண்டும். பார்க்க வேண்டியவற்றை பார்க்க, கண்டுகொள்ள வேண்டியவற்றை கண்டுகொள்ள  நமது கண்கள் திறக்கப்பட வேண்டும்.

பெற்றுக் கொண்ட பார்வைக்கு நம்பிக்கை உரியவராக இருக்க வேண்டும்.

மூடியே இருக்கும் கண்களால் உலகை (நலனை) காண முடியாது.

நம்பிக்கை மலர்ந்து நம் கண்களும் திறக்கப்படட்டும்...

புரிந்துக் கொள்ள வேண்டும்...

29.05.2024 - புதன் கிழமை 

"ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள்" - எபேசியர் 5:17

இன்றைய எதார்த்த வாழ்க்கைக்கு புரிந்து கொள்ளுதல் அவசியமாக இருக்கிறது. ஒருவரை புரிந்து கொள்ளாமல், அறிந்து கொள்ளாமல் நாம் அவரோடு பயணிக்க முடியாது. (புரிந்து கொள்ளுதலும் அறிந்து கொள்ளுதலும் முழுமையான புரிதலை சில வேளைகளில் குறிப்பது அல்ல, மாறாக ஓரளவு தான் நாம் மற்றவர்களை புரிந்தும் அறிந்தும் கொள்ள முடியும்)

சரியான புரிதல் இல்லாமையினால் தான், பல வாழ்க்கை பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது.

அடுத்த பிரச்சனை, யார் யாரை புரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான். ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ள வேண்டும் அதில் நான் நீ என போட்டி மனப்பான்மை இருக்கக்கூடாது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:32-45) இயேசுவை புரிந்து கொள்ளாத சீடர்களை பற்றி நாம் பார்க்கிறோம். இயேசு தன்னுடைய இறப்பை குறித்து பேசிக் கொண்டிருக்க கூடிய வேளையிலே, செபதேயுவின் மக்களான யாக்கோபும் யோவானும் அதிகார இருக்கைக்காக இயேசுவிடம் பணிந்து நிற்கிறார்கள். 

இங்கு இயேசுவோடு இருந்தும் அவர்கள் இயேசுவை பற்றி புரிந்து கொள்ளவில்லை. இயேசுனுடைய தலைமைத்துவம் அல்லது அதிகாரம் என்பது மற்றவர்களுக்கு பணி செய்வதில் தான் இருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ளவில்லை. எனவேதான் அவர்கள் முதன்மையான இடங்களை நோக்கி நகர்ந்தார்கள்.

நம்முடைய வாழ்வு சிறக்க வேண்டும் என்று சொன்னால் நம்மோடு இருக்கக் கூடியவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய புரிதலும் அறிதலும் இல்லாமல், நாம் எந்த ஒரு காரியத்தையும் முன்னெடுத்து செய்ய முடியாது.

இயேசுவை பின்பற்றுகிறோம் என்று சொன்னாலும், இயேசுவின் வார்த்தைகளை உள்வாங்குகிறோம் என்று சொன்னாலும் அங்கு புரிதல் இல்லை என்று சொன்னால் உள்வாங்கிய வார்த்தைகள் வீணானதாய் போகும். 

சரியான புரிதலை கொண்டிருப்போம், பணிவுள்ள அதிகாரத்தோடு இயேசுவின் பணி செய்வோம்.

நிலைவாழ்வே நம் எதிர்பார்ப்பு...


28.05.2024 - செவ்வாய்க் கிழமை
 

"தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்து விடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்" - யோவான் 12:25

எதிர்பார்ப்பு இல்லாத மனிதர் யாரும் இருக்க முடியாது. நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு வேலையிலும் நமக்கு கைம்மாறு கிடைக்க வேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பு. 

நாம் அன்பு செய்யக்கூடியவர்கள் நம்மை அன்பு செய்ய வேண்டும் என்பது அன்பின் எதிர்பார்ப்பு. நான் மருத்துவமனைக்குச் செல்கிறேன் மருத்துவர் எனக்கு நலம் கொடுக்க வேண்டும் என்பது நலனின் எதிர்பார்ப்பு. ஆலயத்திற்கு செல்கிறேன் கடவுள் எனக்கு ஆசிரை கொடுக்க வேண்டும் என்பது ஆசிரின் எதிர்பார்ப்பு. 

இவ்வாறாக, இடத்திற்கு ஏற்றார் போல் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

சில வேளைகளில் நாம் எதிர்பார்த்து, கிடைக்காத போது ஏமாற்றத்தை சந்திக்கிறோம். அந்த ஒரு ஏமாற்றம் அடுத்த வேலையை செய்வதற்கு தடையாக கூட இருக்கிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:28-31) பேதுரு இயேசுவிடம், "நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றியவர்கள் ஆயிற்றே" என்று சொல்லி, மறைமுகமாக 'எங்களுக்கு என்ன கிடைக்கும்' என்று கேட்கிறார்.

என்பொருட்டும் நற்செய்தி பொருட்டும் எல்லாவற்றையும் இழந்தவருக்கு, மறுமையில் நிலை வாழ்வு உண்டு என்பதை இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

நம்முடைய எதிர்பார்ப்பு எல்லாம் கண்ணுக்கு புலப்படுகின்றவற்றைப் பற்றியே இருக்கிறது. அது நிரந்தரமானது அல்ல என்பது தெரிந்ததும் கூட நம்முடைய எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை நமக்கு பெற்று கொடுக்கிறது. . 

இயேசு தரக்கூடியது நிலை வாழ்வு; அதுவே நம்முடைய எதிர்பார்ப்பாக இருந்தது என்றால் அதை குறித்த பணிகளில், முயற்சிகளில் நாம் ஈடுபடுவோம். அதன் வழியாக நிரந்தரமானவற்றை நாம் பெற்றுக் கொள்வோம்.

நம் எதிர்பார்ப்பு நிலை வாழ்வை நோக்கியதாக இருக்கட்டும்... அதுவே நிரந்தரம். அதுவே நமக்கு நிரந்தர மகிழ்வை கொடுக்கும்.

இறையாட்சிக்கு உட்பட வேண்டும்...

27.05.2024 - திங்கள் கிழமை

"இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது" - உரோமையர் 14:17

இறைவனின் அரசுக்கு எல்லோரும் தகுதி உடையவர்களே. அந்த தகுதி என்பது எவ்வாறு மெய்ப்பிக்கப்படுகிறது? நாம் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கும் போது தான். அவர் வார்த்தையை வாழ்வாக்குவது நாம் இறையாட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இயேசு இவ்வாறு சொல்வார், எவரும் இரு தலைவருக்கு பணிவிடை செய்ய முடியாது. கடவுள் என்னும் தலைவருக்கும், செல்வம் என்னும் தலைவருக்கும் நாம் பணிவிடை செய்ய முடியாது. 

இன்று பணத்திற்காக தங்களுடைய நேர்மையை, உண்மையை விட்டுக் கொடுக்கின்ற/விலை பேசுகின்ற மனிதர்கள் அதிகம் உருவாகிவிட்டனர். 

பணம் இருந்தால் போதும் அல்லது பணம் தந்தால் போதும் எதையும் செய்யும் மனப்பாங்கு இங்கு அதிகரித்துவிட்டது. சமூக சேவை, தன்னார்வ பணி இவை எல்லாம் இன்று கதவுகள் போட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன. அதையும் தாண்டி சமூகத்தின் மீது கொண்ட ஆர்வத்தோடு பணி செய்பவர்கள் பாதிப்புக்கு (மிரட்டலுக்கு) உள்ளாக்கப்படுகிறார்கள். 

நமக்கு ஏன் வம்பு? என்ற மனநிலை இன்று நம்மை கிறிஸ்துவின் சீடர்களாக இருக்கும் நிலையில் இருந்து தூர தள்ளி விட்டது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:17-27) இயேசுவிடம் ஒருவர், நிலை வாழ்வை உரிமையாக்கி கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். கட்டளைகளை கடைப்பிடி என்கிறார் இயேசு. அந்த நபரும் அதை நான் ஏற்கனவே செய்து வருகிறேன் என்று பதில் கொடுக்கிறார். உமக்கு ஒன்று குறைவுப்படுகிறது உமக்குள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடும் என்று இயேசு சொன்னதும், அந்த நபர் முக வாட்டத்தோடும் வருத்தத்தோடும் சென்று விடுகிறார். 

இருப்பதை இழக்காத மனநிலை இறையாட்சிக்கு ஏற்ற மனநிலை அல்ல. 

இங்கு கொடுத்தல் என்பது இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்து விட்டு வெறுமையாக இருக்க வேண்டும் என்று அல்ல.

நம்முடைய தேவைக்கு அதிகமாக இருப்பவற்றை, தேவையில் இருப்போருக்கு பகிர்வது தான் இயேசு என்று சொல்லக்கூடிய பகிர்வு மனப்பான்மை.  

இருப்பவற்றை பகிர்கின்ற போது, நாம் விண்ணகத்தில் நமக்கான செல்வத்தை சேர்த்து வைக்கிறோம். 

மீட்பு எல்லோருக்கும் உரியது. அந்த மீட்பைப் பெற்றுக் கொள்வதற்கான வழி (கட்டளைகளை கடைபிடித்தல் - அன்பு, பகிர்வு, பரிவு, அமைதி, இரக்கம்...) நமக்கு முன் இருக்கிறது.

கட்டளைகளை கடைப்பிடித்து இறையாட்சிக்கு உட்படுவோம்.

மூவொரு இறைவன் என்னும் முழுமை!

26.05.2024 - ஞாயிற்றுக் கிழமை 

மூவொரு இறைவன் மூன்று ஆட்களாக இருந்தாலும் ஒரே கடவுளாக இருக்கிறார்.

பேராயர் புல்டன்ஷீன், மூவொரு இறைவனைப்பற்றிக் கூறும்போது, “மூன்று கோடுகளால் வரைந்த முக்கோணத்தை நாம் மூன்று கோடுகள் என்று கூறுவதில்லை, மாறாக முக்கோணம் என்றே கூறுகின்றோம். அதுபோல, இறைவன் மூன்று நிலைகளில் செயல்பட்டிருந்தாலும் மூன்று மனிதர்களாக கடவுள் தன்னை வெளிப்படுத்தியிருந்தாலும், நாம் மூவொரு இறைவன் என்றே கூறுகின்றோம்.

எப்படி மூவரும் ஒரே கடவுள்?

யாதொரு வேறுபாடின்றி ஒரே அன்பு உறவு, ஒரே ஞானம், ஒரே திருவுளம், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பதால் மூவரும் ஒரே கடவுள். 

இதை நம்முடைய மனித அறிவால் புரிந்து கொள்வது மிகவும் கடினம். படைக்கப்பட்ட பொருள் படைத்தவரை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. 

சில வேளைகளில் நம்மையே நாம் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ள முடியாத நிலையில், எப்படி நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்ட, நம்மையெல்லாம் படைத்து வழி நடத்துகிற கடவுளை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும் என்ற சிந்தனை நமக்குள் இருக்க வேண்டும். 

“என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார் இயேசு - லூக்கா 10:22

இயேசுவின் திருமுழுக்கு நிகழ்வின் போது தந்தை, மகன், தூய ஆவியாரின் நெருக்கமான அன்பு உறவை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரே கடவுள் மூவராக செயல்படுகிறார். ஒரு மனிதன் நல்லவராக கெட்டவராக செயல்படும்போது, எல்லாவற்றையும் எல்லாரையும் படைத்தவர் மூவராக செயல்படுவதில் ஒன்றும் தவறில்லையே. 

நம்முடைய மனித அறிவுக்கு இவை அப்பாற்பட்டவையாக தோன்றினாலும் இவ்விழா நமக்கு உணர்த்தக்கூடிய செய்தி என்பது ஒற்றுமை, அன்பு உறவு, பணித்தெளிவு, இலக்கு ஆகியவை தான்.

வழிபாட்டின் எல்லா நிகழ்வுகளும் மூவொரு கடவுளை போற்றி தொடங்குகிறது, மூவொரு கடவுளை போற்றி நிறைவு பெறுகிறது, "தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே - ஆமென்". 

மூவொரு கடவுளை போற்றி புகழ்கிற நாம், மூவொரு கடவுள் நமக்கு கொடுக்க கூடிய வாழ்வில் சிந்தனைகளையும் (ஒற்றுமை, அன்பு, உறவு, வல்லமை...) ஏற்று நடக்க வேண்டும்.

மூவொரு கடவுளை போல உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்போம், உணர்வுகளை மதித்து நடப்போம். அதன் வழியாக மூவொரு இறைவன் பெருவிழா அர்த்தம் பெறும்.


From Vatican News Page👇

வரலாற்றுப் பின்புலம்

பழங்காலத்திலிருந்தே இது 'தமத்திருத்துவ விழா' என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கி.பி. 155-230-இல் வாழ்ந்த திருஅவையின் தந்தை தெர்த்தூலியன் தான் இந்தத் 'தமத்திருத்துவம்' என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர். தந்தை, மகன், தூய ஆவியார் மூவரும் ஒரே இயல்பு கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் ஒரே ஆள் இல்லை. மூன்று ஆட்களாக இருக்கின்றனர் என்று தெர்த்தூலியன் போதித்தார். 

கி.பி. 325-இல் ஆயர் அத்தனாசியுஸ் தலைமையில் கூடிய நைசியா மன்றம் இதனை செய்து முடித்தது. இதற்குப் பின்னால் இருந்த முக்கியக் காரணம் எரியஸ் என்பவருடைய தப்பறைக்கொள்கை. இவர் இயேசு கிறிஸ்து கடவுளுடைய முதல் படைப்பு என்று போதித்தார். இந்தத் தப்பறைக் கொள்கையை நைசியா மன்றம் கண்டித்ததுடன், தமத்திருத்துவம் குறித்த சரியான போதனையையும் வரையறை செய்தது. இதன் காரணமாக, நிசேன் நம்பிக்கை அறிக்கை உருவாக்கப்பட்டது. இதைத்தான் (பெரியது) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அறிக்கையிடுகின்றோம். 

இதில் தமதிருத்துவம் பற்றிய வார்த்தைகள் மிகவும் அற்புதமாக இருக்கும். இந்நாளில் மீண்டும் ஒருமுறை அதனை நினைவுகூர்வோம். 

அதில் தந்தையைப் பற்றி கூறும்போது, "விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே" என்று சொல்கின்றோம். 

மகன் இயேசுவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகின்றேன். இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்று ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார் என்று கூறுகின்றோம். 

தூய ஆவியாரைக் குறித்து சொல்லும்போது, "தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே" என்று அறிக்கையிடுகின்றோம். 

ஆக, மேற்கண்ட இந்த அறிக்கை மூன்று பேரும் எவ்வித ஏற்றத்தாழ்வுமின்றி சமநிலையில் இருப்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சிறுபிள்ளையாக...

 

25.05.2024 - சனிக் கிழமை 

"நான் குழந்தையாய் இருந்த பொழுது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என் பங்காய் அமைந்தது" - சாலமோனின் ஞானம் 8:19

குழந்தைகளின் உள்ளம் கள்ளம் கபடற்றது, வஞ்சகம் இல்லாதது, போலியாக நடிக்க தெரியாதது, பழிவாங்க தெரியாதது. (இப்பண்புகளுக்கு 2k Kids/இப்போதைய குழந்தைகள் கொஞ்சம் விதி விலக்கு தான் போல)

இருந்தபோதிலும் குழந்தைகள் உள்ளம் மாசற்றது. அந்த குழந்தைகளாக மாற நாம் அழைக்கப்படுகிறோம். 

குழந்தைகளுக்கு பொய்யை பொய்யாக சொல்லத் தெரியாது, காலம் வரும்வரை காத்திருந்து பழி வாங்க தெரியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:13-16) சிறு பிள்ளைகளை அதட்டுகிற சீடர்களை பார்த்து இயேசு கோபம் கொள்கிறார். இறையாட்சி சிறு பிள்ளைகளுக்கு உரியது என்கிறார். சிறு பிள்ளையைப் போல் இறையாட்சியை ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என்றும் உறுதியாக சொல்லுகிறார். 

இதன் வாயிலாக இயேசு சொல்வது, சிறு பிள்ளைகளுக்குரிய மனப்பாங்கு நம்மிடம் இருக்க வேண்டும் என்பதுதான்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றோருடைய கவனிப்பின்மையால், பெற்றோருடைய அக்கறையின்மையினால் திசை மாறி செல்கிறார்கள்.

ஒழுங்குப்படுத்த வேண்டியவர்களே ஒழுங்கினமாய் இருப்பது தான் இதற்கு காரணம். பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெற்றோர், பிள்ளைகளை திசை திருப்பி விடுகின்றனர்.

நம் குழந்தைகள் குழந்தைகளுக்குரிய மனப்பாங்கை இழந்து வருவதற்கு நாம் தான் ஒரு காரணம்.

காலமாற்றம், காலச் சூழ்நிலை என்ற பெயரில் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் குழந்தைகள் குழந்தைகளுக்கு உரிய மனப்பாங்கோடு வாழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

குழந்தைகளை குழந்தைகளாக வளர்த்தெடுப்போம், அந்த குழந்தைகளின் மனநிலையை நாமும் பெற்றுக் கொள்வோம். அதன் வாயிலாக இறையாட்சி நமதாகும்

குடும்பமாய் இணைந்து வாழ...

24.05.2024 - வெள்ளிக் கிழமை 

இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே உடலாய் இருப்பர்" - தொடக்க நூல் 2:24

படைப்பின் நோக்கமே ஒருவரோடு ஒருவர் இணைந்து வாழ வேண்டும் என்பது தான். பிரிவினையை நோக்கி பயணிக்கும் கால்கள் பிளவுப்பட்டே இருக்கும், இருக்க வைக்கும். 

பிடிக்கவில்லை என்பதற்கு பிரிவினை மட்டும் பதில் அல்ல. மாற்ற வைப்பதும், மாற்றத்தை நோக்கி பயணிப்பதும் நம் கையில் உள்ளது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:1-12) இயேசுவை சோதிப்பதற்காக 'கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?' என்று பரிசேயர் கேள்விகளை முன் வைக்கிறார்கள். மோசேயின் சட்டத்தையும் முன்வைக்கிறார்கள். 

இயேசு அவர்களுக்கு கொடுக்கக்கூடிய பதில் "கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்" என்பதே. இணைந்து வாழ வேண்டியவர்கள் பிரிவினையை கையாளும்போது அவர்கள் மீண்டும்  தவறு செய்கிறார்கள். 

திருமணத்திற்கு முன், ஒருவரை பற்றி ஒருவர் நன்றாக தெரிந்திருந்தும், திருமணத்திற்கு பிறகு மனதாங்கல் உண்டாகிறது. அது சரியில்லை, இது சரியில்லை என்று காரணம் சொல்லி பிரிவினைக்கு வழிவகை  செய்கிறார்கள். 

சிலரின் விவாகரத்து சிலருக்கு பாடம் ஆகிறது. பிரிந்து வாழ ஆரம்பித்த சில மாதங்களிலே கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. (எதையும் செய்யும் முன் சிந்திப்பதே நல்லது)

இணைந்து வாழ்தல் கடவுளின் விருப்பம். பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்கள் கடவுளுக்கு எதிராக செயல்படுகிறார்கள். 

நம் வாழ்க்கையோடு இணைந்து இருப்பவர்களை நாம் மதிப்போம். அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வோம். 

அன்பு இருக்கும் இடத்தில் பிரிவினைக்கு இடம் இருக்காது.

குடும்ப ஒற்றுமையில், குடும்ப இணைப்பில் இறைவன் இணைகிறார்.

இயேசுவின் சீடராக ஒரு வாய்ப்பு...

 


23.05.2024 - வியாழக் கிழமை 

சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்" - திருத்தூதர் பணிகள் - 13:52

ஒவ்வொரு தலைவரையும் ஒவ்வொரு (மக்கள்) கூட்டம் பின்பற்றுகிறது. தலைவரை பின்பற்றுதல் என்றால் தலைவரின் கொள்கைகளை பின்பற்றுதலாக இருக்க வேண்டும்.

இக்கால கூட்டம் எல்லாம் கொள்கை ஈர்ப்பினால் சேரும் கூட்டம் அல்ல, மாறாக பண கவர்ச்சியினால் பின்பற்றும் கூட்டமாகவே இருக்கிறது. 

கொள்கைகள் அவ்வப்போது அறிவிக்கப்படும். ஆனால் கொள்கைகள் முக்கியமல்ல கூடும் கூட்டத்திற்கு.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:41-50) இயேசுவின் சீடராக மாற ஒரு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

- கிறிஸ்துவை சார்ந்து இருக்க வேண்டும்

- யாரையும் பாவத்தில் விழ வைக்க கூடாது, தானும் பாவத்தில் விழக் கூடாது

- நெருப்பால் தூய்மையாக்கப்பட வேண்டும்

- உப்பின் தன்மை கொண்டிருக்க வேண்டும்

- ஒருவர் மற்றவரோடு அமைதியுடன் வாழ வேண்டும் 

இவை தான் இயேசுவின் சீடராக கொடுக்கப்படும் வாய்ப்பு.

இயேசுவின் கூட்டம் (சீடத்துவம்) எதிர்பார்ப்பை நோக்கி பயணிக்காது, மாறாக இருப்பதை இழந்து இயேசுவை பின்பற்றும். 

இயேசு கொடுக்கும் சீடத்துவம் ஆசைகளை துறப்பதிலும் தன்னை  இழப்பதிலும் தொடங்குகிறது.

வார்த்தைகளை காதால் கேட்டல் எல்லோருக்கும் எளிது. ஆனால் கடவுளின் வார்த்தையை, வாழ்க்கை வழியாக  செயல்படுத்துவதில் தான் சீடத்துவத்தின் மகத்துவம் அடங்கி இருக்கிறது.

இயேசுவின் சார்பாக இருப்போம்!

 

22.05.2024 - புதன் கிழமை 

"அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம். உங்கள் கவிஞர் சிலர் கூறுவதுபோல, நாம் அவருடைய பிள்ளைகளே" - திருத்தூதர் பணிகள் 17:28

உண்மை சார்ந்த நிலை பொய்மை சார்ந்த நிலை, இந்த இரண்டில் ஏதாவது ஒரு பக்கம்தான் நாம் இருக்க முடியும். உண்மையின் பாதையில் நடந்தால் உண்மைக்கு நாம் சான்று பகர்கிறோம் தீமையின் பக்கம் இருந்தால் நாம் தீமைக்கு சான்று பகர்கிறோம். 

எப்படி பார்த்தாலும் நாம் ஏதாவது ஒன்றை சார்ந்து தான் இருக்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:38-40) இயேசுவை சாராத ஒருவர் இயேசுவை சார்ந்து இருக்கிறார். இயேசுவோடு இணைந்து அவர் வல்லசெயல் செய்யவில்லை, ஆனால் இயேசுவின் பெயரால் அவர் வல்லசெயல் செய்கிறார். உண்மையின் பக்கம் இருக்கக்கூடியவர்கள் இயேசுவை நம்பாவிட்டாலும், அவர்கள் இயேசுவின் பக்கம் தான் இருக்கிறார்கள்.

ஏனென்றால், இயேசுவே உண்மையாய் இருக்கிறார். 

நல்லது நடப்பதை இயேசு ஒருபோதும் தடுப்பதில்லை, தீமை நடைபெறுவதை இயேசு ஒருபோதும் விரும்புவதில்லை.

நாம் உண்மையின் பக்கம் இருந்து தடை வருகின்றபோது நிலை தடுமாறி பொய்மையை சார்ந்து இருந்து விடுகிறோம்.

உண்மைக்கு சான்று பகர்ந்து, அதனால் துன்பப்படுவது பொய்யை சார்ந்து இருப்பதை விட எவ்வளவோ மேலானது.

நாம் இயேசுவை சார்ந்து இருக்க உண்மையைப் பற்றிக் கொள்ள வேண்டும்.

இயேசுவின் பெயரால் பல நல்ல செயல்களும் வல்ல செயல்களும் நடைபெற வேண்டும்.



பணிவுள்ள சீடத்துவம்

 


2
1.05.2024 - செவ்வாய்க் கிழமை 

"கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு" - 1 திமொத்தேயு 6:11

சீடத்துவம் தலைவரை பின்பற்றுவதில் இருந்து தொடங்குகிறது. தலைவன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்று சொல்வார்கள். தலைவர் ஒரு பாதையும் மக்கள் ஒரு பாதையும் சென்றார்கள் என்று சொன்னால் அந்த அரசு பாழாய் போகும். அதனால் யாரும் பயனடைய போவதில்லை. தற்பெருமையை நாடுகிற போது, இந்த இணைந்து போகாத் தன்மை உருவாகிறது.

இந்த சமூகத்தால் பெரியவர்களாக காட்டப்படுகிறவர்கள் கடவுளின் விழுமியங்களை கடைபிடிக்கவில்லை என்று சொன்னால் அவர்கள் சிறியவர்களே. இந்த சமூகத்தால் சிறியவர்களாக பார்க்கப்படுகிறவர்கள், கடவுளின் விழுமியங்களை தங்களுடைய வாழ்க்கையால் பிரதிபலிக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்கள் பெரியவர்களே. தற்பெருமை கடவுளோடு உள்ள அன்பு உறவுக்கு தடையாக அமைகிறது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:30-37) இயேசு தன்னுடைய பாடுகளையும் இறப்பையும் உயிர்ப்பையும் பற்றி பேசுகிறார். அதை அறிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்பதை பற்றி ஒருவரோடு ஒருவர் வாதாடி கொண்டிருக்கிறார்கள். 

யார் பெரியவர் என்ற கேள்வி இயேசுவிடம் இருந்து இவர்களை அந்நியப்படுத்திவிட்டது. பணிவாழ்வு முக்கியம் என்பதை உணராத இவர்கள் அதிகார வாழ்வு தான் சிறந்தது என்று எண்ணிக்கொண்டார்கள்.

அறிந்து கொள்ளுதல், தெரிந்து கொள்ளுதல், அரவணைத்தல், ஏற்றுக்கொள்ளுதல், தாழ்ச்சிக் கொள்ளுதல், மற்றவரை உயர்த்துதல் இவை தான் இயேசுவின் சீடருடைய பண்பாக இருக்க வேண்டும். 

நம்மை முதன்மைப்படுத்த ஆரம்பித்தோம் என்றால் நாம் முதன்மையானவர்களாக காட்டப்படலாம், ஆனால் நாம் ஒருவகையில் தனித்து விடப்பட்டவர்கள் தான். 

இயேசுவோடு இணைந்திருப்பவர்கள் இயேசுவில் பெருமை கொள்வார்கள் தற்பெருமை கொள்ள மாட்டார்கள்.


நம்பிக்கை மிகுதியாக வேண்டும்...

20.05.2024 - திங்கட் கிழமை

மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது" - திருப்பாடல்கள் 9:18

எல்லாம் மாறும் என்பது ஒருவகை நம்பிக்கை. எல்லாவற்றையும் மாற்றுவதே முழு நம்பிக்கை. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:14-29) தீய ஆவி பிடித்த பேச்சிழந்த மகனின் தந்தை தன் மகனுக்காக நம்பிக்கையோடு இயேசுவிடம் வருகிறார். 

முதலில் இயேசுவின் சீடர்களால் அவருடைய நோயை குணப்படுத்த முடியவில்லை, பேய் தொல்லையில் இருந்து விடுதலை கொடுக்க அவர்களால் முடியவில்லை. அதற்கு காரணம் சீடர்களின் நம்பிக்கை குறைவு. 

ஆனால் இயேசுவை நாடி வந்தவருக்கு நம்பிக்கை மிகுதியாக இருந்தது. நான் நம்புகிறேன் என்கிறார். அவருடைய நம்பிக்கையால், இயேசுவின் பரிவை அவர் பெற்றார்.

அந்த தந்தையினுடைய நம்பிக்கை வழியாக தன்னுடைய சீடர்களுடைய நம்பிக்கையையும் இயேசு மிகுதிப்படுத்துகிறார்.

வார்த்தை வழி நம்பிக்கை மட்டும் ஒருவருக்கு போதாது. செயல்வழி நம்பிக்கை தான் ஒருவரை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும். 

இயேசுவின் சீடர்கள் அந்த புதுமையை செய்வதற்கு தடையாக இருந்தது, இறைவேண்டலின்மை நோன்பின்மை.

நம்முடைய நம்பிக்கையும் சில வேளைகளில் இயேசுவின் சீடர்களைப் போல தான் இருக்கிறது. செயலற்ற நம்பிக்கையாக நம் வாழ்க்கை இருக்கிறது.

நம் எளிய நம்பிக்கை நம் வாழ்க்கையை உயர்த்தும்...

நம்பிக்கையை மிகுதியாக்குவோம்... நல்லதை பெற்றுக் கொள்வோம்.

தூய ஆவியாரின் துணையோடு வாழ...

19.05.2024 - ஞாயிற்றுக் கிழமை

"ஆண்டவர் மனிதருக்கு தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் அறிந்தறியும்" - நீதிமொழிகள் 20:27

இன்று தூய ஆவியார் பெருவிழா. (பெந்தகோஸ்து பெரு விழா)

மறக்கப்பட்ட மூன்றாம் ஆளாக இருக்கக்கூடியவர் தூய ஆவியார். யார் அந்த தூய + ஆவி என்ற கேள்வி எழுகிறது. நம்மை இயக்குபவர், நம்மில் செயலாற்றுபவர், உண்மையை உணர்த்துபவர், ஆற்றலோடு செயல்பட வைப்பவர், கனிகளையும் கொடைகளையும் பொழிபவர், வரங்களால் நம்மை நிறைப்பவர். 

இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டவராக தூய ஆவியானவர் திகழ்ந்தாலும், அவர் மறக்கடிக்கப்பட்டவராகவே இருக்கிறார். 

இயேசு கிறிஸ்து தனக்குப்பின் துணையாளராம் தூய ஆவியாரை தருகிறார். இயேசுவோடு இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் பணி வாழ்வில் ஈடுபட்டாலும், இயேசு அவர்களோடு இருந்தபோது இயேசுவைப் போல அவர்களால் பணியை செய்ய முடியவில்லை. காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து அதிகாரங்களை பெற்று இருந்தார்கள், ஆற்றலை பெற்றிருந்தார்கள். ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வராமல் இருந்தது. 

இந்த பெந்தகோஸ்து பெருவிழாவின் வழியாக பிளவுற்ற நாவு அவர்கள் மேல் இறங்கி வர, அவர்கள் தூய ஆவியை பெற்றுக் கொண்டார்கள். துணிச்சலோடு இறந்த இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள் (சான்று பகர வாய்ப்பை பெற்றார்கள்).

பொது இடங்களுக்கு செல்வதற்கே பயப்பட்டவர்கள், தூய ஆவியைப் பெற்ற பின்பு பொது இடங்களுக்கு சென்று, இயேசுவை கொலை செய்த யூதர்களை பார்த்து, நீங்கள்தான் இயேசுவை கொன்றீர்கள் என்று தைரியத்தோடு பறைசாற்ற தொடங்கினர்.

அந்த தூய ஆவியானவர் அவர்களுக்குள் செயலாற்றி உண்மைக்கு சான்று பகர தூண்டுதலாக இருந்தார். 

இதே தூய ஆவியானவர் பழைய ஏற்பாட்டில் கடவுளின் ஆவி இறை ஆவி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆவியானவர் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர்கள், நீதித் தலைவர்கள் அனைவருள்ளும் இருந்து செயலாற்றியவர். 

தொடக்க நூல் 1: 2இன் படி "மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது. நீர் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" என்று வாசிக்கிறோம்.

தொடக்க முதல் இறுதி வரை இருப்பவராக தூய ஆவியானவர் காட்டப்படுகிறார். 

அதே தூய ஆவியார் தான், திருமுழுக்கு வழியாக ஒவ்வொருவர் மீதும் பொழியப்படுகிறார். உறுதிப் பூசுதல் வழியாக உறுதிப்படுத்தப்படுகிறார். 

அவரின் துணை நமக்குள் இருப்பதை உணர்ந்து அவருடைய கொடைகளையும் கனிகளையும் பகிர்ந்து அளிப்போம். அவர் இன்னும் நம்மை வரங்களால் நிரப்புவார்.

அன்புச் சீடராக...


18.05.2024 - சனிக் கிழமை 

"சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக்குறைவாகப் பேச மாட்டார்களா?" - மத்தேயு 10:25

இயேசுவின் சீடருக்கு முன்னோக்கிய சிந்தனை இருக்க வேண்டும். பலவற்றை வாழ்க்கையில் கற்றுக் கொள்கிறோம். சில பாடங்களாக இருக்கின்றன, சில முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருக்கின்றன. 

அடுத்தவரை பற்றிய அக்கறை தேவை, அடுத்தவரை பற்றிய பொறாமை தேவையில்லை. 

என்னால் அடுத்தவருக்கு என்ன நல்லது செய்ய முடியும் என்பது தான் நம்முடைய கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர அடுத்தவருக்கு என்ன ஆகும்? அடுத்தவர் நிலை என்ன? என்பது நம்முடைய தேடலாக இருக்கக் கூடாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:20-25) பேதுரு இயேசுவிடம் ஆண்டவரே இவருக்கு (அன்புச் சீடருக்கு) என்ன ஆகும்? என்ற கேள்வியை கேட்கிறார். இயேசுவின் பதில் நீ என்னை பின்தொடர்ந்து வா என்பதே. பேதுரு ஏன் இந்த கேள்வியை கேட்கிறார்?

நேற்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு பேதுருவை பார்த்து, "நீ கைகளை விரித்து கொடுப்பாய். வேறொருவர் உன்னை கட்டி உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்கு கூட்டி செல்வார்" என்று சொல்லி இருப்பார்.

தனக்கு இந்த நிலை என்றால் இயேசுவோடு இருக்கக்கூடிய மற்ற சீடர் குறிப்பாக அவருடைய அன்புச் சீடருக்கு என்ன ஆகும் என்ற ஆர்வம் பேதுருவிடம் இருந்தது. 

இயேசுவின் அன்பு சீடராக மாறுவது என்பது இயேசுவிடமிருந்து பெற்றுக் கொண்ட அன்பை மற்றவரோடு பகிர்ந்து கொள்வதே. 

அன்பு பகிரப்படும் போது பல்வேறு இழப்புகளை சந்திக்க வேண்டி இருக்கும். இதற்கு இயேசு ஒரு முன்மாதிரி.

பேணி வளர்க்க அன்பு தேவை...


17.05.2024 - வெள்ளிக்கிழமை 

அன்பு ஒன்றே போதும் அடுத்தவரை அரவணைக்க, அடுத்தவரை முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்ல. 

சில வேளைகளில் அன்பு கொண்டுள்ளவர்கள் அதை சொல்லில் காட்ட மாட்டார்கள். (உதாரணமாக, நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் உன்னை நேசிக்கிறேன் என்று வெறும் வார்த்தையில் சொல்ல மாட்டார்கள்). அந்த அன்பு என்பது செயலில் வெளிப்படும். இயேசுவும் தன் வாழ்வில் அன்பை தன்னுடைய சொல்லில் அல்ல செயலில் வெளிக் காட்டினார். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 21:15-19) இயேசு பேதுருவை பார்த்து, என்னை அன்பு செய்கிறாயா? என்று  மூன்று முறை கேட்கிறார். 

இந்த அன்பு தன்மீது உள்ளதா என்பதல்ல... தன் மந்தை மீது அன்பு உள்ளதா என்ற ஆழமான கேள்விகளே!

'என் ஆடுகளைப் பேணி வளர்' என்றே இயேசு பேதுருவிடம் சொல்கிறார். தலைமைத்துவ பண்பில் அன்பு இருக்க வேண்டும். மற்றவர்களை எளிதாக ஆதிக்கம் செய்து விடலாம், ஆனால் அன்பு செய்வது அவ்வளவு எளிது அல்ல.

இயேசு தன்னுடைய திருத்தூதர்களுக்கு கொடுக்கக்கூடிய தலைமைத்துவ பண்பு என்பது அன்பிலிருந்து தொடங்குகிறது.

இயேசுவைப்போல மற்றவரின் முன்னேற்றத்திற்கு நம் அன்பு என்னும் முதல் ஆயுதத்தை எடுத்து வைப்போம். அன்பே வளர்ச்சியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்.

அவரின் அன்பை அறிவிப்போம்!


16.05.2024 - வியாழக் கிழமை

"கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்" - 1 கொரிந்தியர் 8:3

அறிந்து கொள்ளாமல் அன்பு செய்ய முடியாது. அன்பு செய்யாமல் அறிவிக்க முடியாது. அன்பும் அறிதலும் ஒன்றோடொன்று இணைந்து செல்வது.
 
நமக்கு அறிமுகமாகும் எல்லோரையும் நாம் முழுமையாக அறிந்துக் கொள்ள, அன்புச் செய்ய முடியாது. ஆனால் அறிந்து கொண்டவர்களை (ஒரு சிலரை) நாம் நிச்சயமாக அன்புச் செய்ய முடியும். ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கும் போதும், ஒருவர் மற்றவரை அறிந்திருக்கும் போதும் குறைவுள்ள அன்புக்கு அங்கு இடமில்லாமல் போகிறது.

அன்பு இருக்கும் இடத்தில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும். ஆனால் சிலர் காட்டும் அன்பு போலியானது என்று தெரிந்தும் கூட நாம் ஏமாந்து போய்விடுகிறோம். ("அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்" - 1கொரிந்தியர் 13:7)

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 17:20-26) இயேசு தந்தையின் அன்பை உலகிற்கு அறிவிக்கிறார். தந்தை தன்மீது அன்பு கொண்டுள்ளது போல உலகினர்மீதும் அன்பு கொண்டுள்ளார் என்பதை  எடுத்துச் சொல்கிறார். 

தந்தையே உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீர் என்மீது கொண்டுள்ள அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன் என்று சொல்லி பெற்றுக் கொண்டதை பகிர்ந்து கொடுக்கிறார் இயேசு.

அன்பு அறிவிப்பில் நிறைவு பெறுகிறது. தான் பெற்றுக் கொண்ட அன்பை மற்றவர்களும் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அறிவிப்பாக மாறுகிறது. 

அன்பு அறிவிக்கப்படும் போது அங்கு அமைதி உருபெறுகிறது. அன்பு அரசாட்சி செய்யும் இடத்தில் நிறைவுக்கு குறைவு இல்லை.

தீயோனிடமிருந்து காத்தருள…


15.05.2024 - புதன் கிழமை

“ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார்” - 2 தெசலோனிக்கர் 3:3

எல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டும். இது நல்ல எண்ணம் தான் ஆனால் தீமை நன்மையோடு சேராது. உலகு சார்ந்த செயல்கள் விண்ணகம் சார்ந்த செயல்களோடு சேராது. நல்லவர்கள் தீயவர்களோடு இணைய மாட்டார்கள். அப்படி இருக்கும்போது எப்படி எல்லாம் அல்லது எல்லாரும் ஒன்றாய் இருக்க முடியும்.

நாம் இவ்வுலகில் இருக்கிறோம், ஆனால் இவ்வுலகை சார்ந்தவர்கள் அல்ல. நாம் தீயதை செய்கிறோம், ஆனால் நாம் தீமையில் நிலைத்திருக்க அழைக்கப்படவில்லை. மாறாக, தூய வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 17:11-19) ‘தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்’ என்று இயேசு வேண்டுகிறார். உலகின் தீயவைகளிலிருந்து உலகினரை காத்தருளும் என்றும் அவர் வேண்டுகிறார். 

நாம் இறைவனுக்குரியவர்கள் என்ற எண்ணங்கள் நம்மில் மறைந்து போகின்ற காரணத்தினால் தீமை, பொய்மை, பிரிவினை ஆகிய உலக காரியங்கள் நம்முள் குடிகொள்ள ஆரம்பித்துவிடுகின்றன.

தீமை நம்முள் குடிகொண்டிருக்கிறது, நம்முடைய எண்ணங்கள், செயல்கள் தீயவையாக இருக்கின்றன என்பதை நாம் உணரவில்லை என்றால் அதிலிருந்து நாம் வெளிவர முடியாது. 

தீயோனிடமிருந்து காத்தருள இறைவன் விரும்புகிறார். நாம் வெளிவர விரும்புகிறோமா? என்ற சிந்தனை ஆழமாக நம் உள்ளத்தில் பதியட்டும்.

 

தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியா...

14.05.2024 - செவ்வாய்க் கிழமை 

"நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்" - எசாயா 48:10

இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருத்தூதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, யூதாசு இஸ்காரியோத்துவினால் திருத்தூதர்கள் அணியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்றார்கள். 

பேதுரு பன்னிரெண்டாவது திருத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும் என விளக்கிச் சொல்கிறார்.

1. அவர் இயேசுவின் திருமுழுக்கிலிருந்து, அவர் விண்ணேற்றம் அடைந்தது வரை உடன் இருந்திருக்கவேண்டும்.

2. அவர் இயேசுவின் உயிர்ப்பை கண்ணால் கண்டிருக்க வேண்டும். 

இத்தகைய தகுதிகளைக் கொண்ட இருவரை சீடர்கள் முன்மொழிகிறார்கள். ஒருவர் யோசேப்பு எனப்படும் பர்சபா. இன்னொருவர் மத்தியா. பின்பு சீடர்கள் அனைவரும் ஒருமனதாக இறைவனிடம் வேண்டல் செய்து, இருவருடைய பெயரையும் சீட்டுக் குலுக்கிப் போடுகிறார்கள். சீட்டு மத்தியா பெயருக்கே விழுகிறது. இவ்வாறு மத்தியா திருத்தூதர்கள் அணியில் இடம்பெறுகிறார்.

மத்தியாவை குறித்த செய்திகள் விவிலியத்திலும், திருச்சபை வரலாற்றிலும் அதிகமாக இல்லை. 

அலெக்ஸ்சாண்ட்ரியா நகரைச் சேர்ந்த புனித கிளமென்ட், “ஆண்டவர் இயேசு பணித்தளத்திற்கு அனுப்பிய எழுபத்தி இரண்டு சீடர்களில் மத்தியாவும் ஒருவர் எனவும், அவர் உடல் ஒறுத்தல்களை அதிகமாகச் செய்வார்” எனக் குறிப்பிடுவார்.

திருத்தூதர்கள் குழுமத்தில் நேரடியாக இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் உண்டு, இயேசுவின் பெயரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உண்டு. அந்த வகையில் புனித மத்தியா இயேசுவின் பெயரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். 

இறைவனுடைய பணியை செய்வதற்காக, மீட்பை அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக இயேசு திருத்தூதர்கள் குழுமத்தை ஏற்படுத்தினார். 

நாமும் அதே திருத்தூதர் குழுமத்தில் இணைக்கப்பட்டிருக்கிறோம். 

அருளும் ஆற்றலும் நிறைந்த மத்தியா போல நாமும் செயல்படுவோம்.

துணிவுடன் இருங்கள்...


13.05.2024 - திங்கட் கிழமை

"வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்" - இணைச் சட்டம் 31:6

துணிவு இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகை போன்றது. ஒன்றை செய்ய முடியாது என்று தெரிந்திருந்தாலும் கூட, துணிச்சல் நம்மிடம் இருந்தது  என்றால், முடியாததை கூட நாம் முடித்து காட்ட முடியும்.
 
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:29-33) "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்கிறார் இயேசு. 

நல்லவர்களை எதிர்ப்பதற்கான துணிவு அல்ல தீயவற்றை தகர்த்தெறிவதற்கான துணிவு தான் நமக்கு தேவை. இவ்வுலகில் துன்பங்கள் உண்டு என்றாலும் நாம் துணிவோடு இருக்க இறைவன் விரும்புகிறார். 

துணிவும் நம்பிக்கையும் நம்மில் இருந்தால் நம்மால் எதையும் செய்ய முடியும்.

இயேசு தன்னுடைய வாழ்வில், துணிவை தனது ஆற்றலாக பயன்படுத்தினார். தவறான போதனையை எதிர்த்தார், தவறான எண்ணவோட்டங்களை கண்டித்தார், தவறாக சட்டங்களை போதித்தோரை எச்சரித்தார். இவையெல்லாம் செய்ய இயேசுவிடம் துணிவு இருந்தது.

நம் வாழ்க்கையில் எழக்கூடிய துன்பங்களினால் நாம் துவண்டு போய் விடுகிறோம். துன்பங்களை துணிச்சலால் விரட்டி அடிப்போம்.

நம்பிக்கையோடு கூடிய துணிச்சலோடு, நம் வாழ்க்கை பயணத்தை இயேசுவின் பாதையில் அமைப்போம். அதன் வாயிலாக இறையாட்சி சமூகத்தை கட்டி எழுப்புவோம்.

இயேசுவின் விண்ணேற்றம்... (நம்பிக்கை கொண்டோர் அரும் அடையாளங்களை செய்வர்)

12.05.2024 - ஞாயிற்றுக் கிழமை

“நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” - யோவான் 14:12

அரும் அடையாளங்களை (வல்ல செயல்களை) யாரும் செய்ய முடியும். யாரெல்லாம் இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் வல்ல செயல்களை செய்வர். வல்ல செயல்கள் எல்லாம் நல்ல செயல்களே! 

ஒருவருக்கு நாம் செய்யும் அனைத்து நல்ல செயல்களும் வல்ல செயல்களே. இயேசு தனது பணிவாழ்வில் சென்ற இடமெல்லாம் நன்மையே செய்து கொண்டே சென்றார் என்று விவிலியம் நமக்கு போதிக்கிறது. அவர் நம்பிக்கை தந்தையின்பால் இருந்தது. நம் நம்பிக்கை அவர் வழியாக தந்தையை நோக்கியதாக இருக்க வேண்டும்.

இழக்க விரும்பாத பணிவாழ்வு இரக்கம் நிறைந்த வாழ்வாக இருக்க முடியாது. இயேசு தந்தையின் மீது கொண்டிருந்த அன்பும் நம்பிக்கையும் அவரை பஞ்சு மெத்தையின் மீது வைத்து அவரை தாங்கவில்லை. மாறாக இயேசு பல இழப்புகளை சந்தித்தார், எதிர்ப்புக்களை கண்டார், ஏளனங்களை சுமந்தார். ஆனால் நம்பிக்கையில் உறுதி கொண்டார். அவர் தந்தையின் மீது கொண்ட நம்பிக்கை அவரை தளர்வு இல்லாமல் பணி செய்ய வைத்தது. 

செய்யும் வேலைக்கான பலன் செய்த உடனே கிடைப்பதில்லை. சிறிது களைப்பு, இடையூறு, வெறுப்பு, ஏமாற்றம் இவைகளையெல்லாம் கடந்த பிறகு தான் கிடைக்கும். நம்பிக்கையோடு கூடிய காத்திருத்தல் மிகுந்த கனிகளை கொடுக்கும். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 16: 15-20) நம்பிக்கை கொண்டோர் செய்யும் அரும் அடையாளங்களை பட்டியலிடுகிறார். 

என் பெயரால் பேய்களை ஓட்டுவர்

புதிய மொழிகளை பேசுவர்

பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்

கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்கு தீங்கு இழைக்காது

குணமாக்குவர்

இத்தகைய செயல்களை யாரெல்லாம் என்னில் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவர்கள் செய்வார்கள் என்கிறார் இயேசு.

இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு இவற்றையெல்லாம் இயேசுவின் திருத்தூதர்களால் செய்ய முடிந்தது. அவர்கள் நலமளித்தனர், அநீதிகளை சுட்டிக் காட்டினர், தப்பறைகளை உடைத்தனர்…

இயேசுவின் விண்ணேற்றம் என்பது கடப்பு நிலை. இயல்பான நிலையிலிருந்து முன்னோக்கி செல்வது. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற உலகிற்கு மனிதராக வந்தவர் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றி அதை நமக்கு விட்டு சென்றிருக்கிறார். 

நாமும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற, இந்த கடப்பு நிலை நோக்கி பயணிக்க, உலகிலிருந்து விண்ணகம் நோக்கி செல்வதற்கான பயணத்தில் இருக்கிறோம்.

இவ்வுலகம் நமக்கு நிரந்தரமானது அல்ல, இவ்வுலகம் ஒரு தற்காலிகமான நிலை தான்.

இயேசு விண்ணேற்றம் அடைவதற்கு முன் தனது அதிகாரத்தையும் தன் ஆற்றலையும் தன்னுடைய சீடர்களோடு பகிர்ந்து கொடுத்தார். அது இன்று நம்மோடு பகிரப்பட்டுள்ளது. 

இழப்பு இல்லாத முன்னேற்றம் இல்லை... கடப்பு இல்லாத வெற்றி இல்லை...

இயேசுவின் விண்ணேற்றம் நம் உள்ளத்தையும் முன்னேற்றட்டும்...

உலகிலிருந்து தந்தையை நோக்கி…

11.05.2024 - சனிக் கிழமை

“உலகின் மீதும் அதிலுள்ளவை மீதும் அன்பு செலுத்தாதீர்கள். அவ்வாறு அன்பு செலுத்துவோரிடம் தந்தையின்பால் அன்பு இராது” - 1யோவான் 2:15 

உலகில் வாழும் மனிதர் ஒருவரையொருவர் சார்ந்து வாழ அழைக்கப்பட்டுள்ளனர். சார்புநிலை என்பது அடிமையாகும் நிலை அல்ல. பிறர் நல்வாழ்வு பெற ஒத்துழைப்பது, உடனிருப்பது. இத்தகைய பிறர் வாழ்வு உயர துணைநிற்கும் பண்பு உலகு சார்ந்தது அல்ல. கடவுளின் பிள்ளைகளிடமே இத்தகைய பண்பு காணப்படும்.

உலகு சார்ந்தவர்களை உலகும் ஏற்றுக் கொள்ளும். உலகு சார்ந்தவைகள் எவையெவை? 1யோவான் 2:16 இவ்வாறு சொல்கிறது, “உலகு சார்ந்தவையான உடல் ஆசை, இச்சை நிறைந்த பார்வை, செல்வச் செருக்கு ஆகியவை தந்தையிடமிருந்து வருவன அல்ல. அவை உலகிலிருந்தே வருபவை”.

உலகினரை நாம் சார்ந்து வாழ வேண்டும், ஆனால் பற்றிக் கொண்டு அல்ல. “நமக்கோ விண்ணகமே தாய்நாடு” (பிலிப்பியர் 3:20) என்ற மனநிலை நமக்குள் இருக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:23-28) இயேசு உலகிலிருந்து பிரிந்து தந்தையை நோக்கி செல்கிறார். தந்தையின் அன்பை நமக்கு தருபவர். கேட்பதையெல்லாம் கொடுப்பவர். நமக்கு மகிழ்ச்சியை நிறைவாக தரக்கூடியவர். இயேசு, தந்தையிடம் நமக்காக பரிந்துப் பேசுபவர்.

அவரில் நம்பிக்கை கொள்வோர் தந்தையின் அன்பையும் பெறுவர் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். அவர்மீது நம்பிக்கை என்பது அவர் வார்த்தையின்படி வாழ்வதே. வார்த்தை வாழ்வாகும்போது அங்கு நம்பிக்கை மிகுதியாகிறது.

உலகப் பற்று நமது மனித நிலையை இழக்கச் செய்கிறது. உலகச் செல்வங்கள் நிலையானவை அல்ல என்பதை நாம் அறிந்திருந்தாலும் அதை சேர்த்து வைக்கும் வெறி நம்மில் மேலோங்கி இருக்கிறது. 

உலகிலிருந்து, உலகை துறந்து இயேசு வாழ்ந்தது நாமும் உலகை துறந்து வாழ்வோம். இயேசுவைப் போல, விண்ணகத்தை நோக்கி நம் கண்களை உயர்த்துவோம். 


நிறைவான மகிழ்ச்சி…

10.05.2024 - வெள்ளிக் கிழமை

“வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு” - திருப்பாடல்கள் 16:11

மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று கேட்கப்படும் கேள்விக்கு நம் பதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று வரும். மகிழ்ச்சியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ‘மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்று பதில் சொல்வோம். ஆனால் ‘நிறைவான மகிழ்ச்சி’ வார்த்தையால் அல்ல நம் செயல்பாடுகளால் வெளிப்படும்.

“எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்” (1தெசலோனிக்கர் 5:16) இது நம் எதிர்பார்ப்பு. எப்பொழுதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க நம் உறவுகள் நம்மை விடுவதில்லை. நெருக்கடிகளுக்கு மத்தியில் எப்படி முழு நேர மகிழ்ச்சி சாத்தியம்?

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:20-23) நீங்கள் துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்கிறார் இயேசு. ஒரு பிள்ளையை பெற்றெடுக்கும்முன் அந்த தாய்  எவ்வளவு பேறுகால வேதனை அடைகிறாள். பிள்ளையை பெற்றெடுத்த பிறகு அந்த வேதனை தணிகிறது. ஒரு உயிர் உலகிற்கு வந்தது குறித்து மிகுந்த (நிறைவான) மகிழ்ச்சி அடைகிறாள் அந்த தாய்.

இறைவன் தரும் மகிழ்ச்சியும் அத்தகையது தான். சிறிது கால துன்பம், அதன் பிறகு நீடித்த மகிழ்ச்சி தான். 

இறைவன் தருகின்ற அந்த நிறைவான மகிழ்ச்சியை நம்மிடமிருந்து யாரும் பிரித்துவிட முடியாது. இறைமகிழ்வில் இணைவோம்… இறைஆசிர் பெறுவோம்.


எல்லாம் மாறும்!!!

09.05.2024 - வியாழக் கிழமை

“நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்” - திருப்பாடல்கள் 30:11

மாறிக் கொண்டே இருப்பது உலகம் மட்டுமல்ல பலரின் உள்ளங்களும் தான். நாம் எப்போதும் ஒன்றுபோல இருப்பதில்லை. சில மாற்றங்கள் வலிந்து திணிக்கப்படுகின்றது. சில மாற்றங்கள் மற்றவர்களின் நடத்தையால் உருவாகிறது. சில மாற்றங்கள் தேவையின் பொருட்டு உருவாகிறது.

எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் சிலருக்கு மாற வேண்டியது மாறுவதில்லை. சிலரின் கடின உள்ளம் மாறுவதில்லை, சிலரின் துன்பங்கள் குறைவதில்லை, சிலரின் வாழ்க்கை போராட்டம் நின்று போவதில்லை.

எப்போது மாறும் இந்நிலை? என்பது தொடர் கேள்வி தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:16-20) இயேசு தன்னுடைய பிரியாவிடை பற்றி பேசுகின்றார். இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னை காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள் என்று சொல்லி உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்கிறார்.

வாழ்க்கை மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கிறது என்றாலும் சில வேளையில் நடப்பது என்னதென்று அறியாமல் போய் விடுகிறது. வாழ்க்கையில் துன்பம் வரும் போது வாழ்க்கையின் எதார்த்தத்தை கற்றுக் கொள்கிறோம்.

சபை உரையாளர் நூல் 7:14 இவ்வாறு சொல்கிறது, “வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்”.

வாழ்க்கையில் இன்பம் தான் நிரந்தரம் என்றால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகிவிடும். துன்பம் தான் நிரந்தரம் என்றால் வாழ்ந்து என்ன பயன் என்ற எண்ணம் உருவாகிவிடும்.

வாழ்க்கையில் துன்பமும் நிரந்தரமில்லை, மகிழ்ச்சியும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறும். மாற்றங்கள் நம்மை பக்குவப்படுத்தும்.


தூய ஆவியாரும் உண்மையும்

08.05.2024 - புதன் கிழமை

“உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக் கொண்டார்” - திருத்தூதர் பணிகள் 15:8

உண்மை மதிப்புக்குரியதாக பார்க்கப்படுவதில்லை. பொய் எல்லோராலும் விரும்பி ஏற்கப்படுகிறது. உண்மையை அறிந்தவர்கள் ஒளியின் பாதையில் நடக்கின்றனர். பொய்மையை ஏற்கின்றவர்கள் இருளின் மக்களாக இருக்கின்றனர்.

இவ்வுலகில் உண்மைக்கு சான்று பகர்பவர்கள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ஏளனமாக பார்க்கப்படுகின்றனர். உண்மை விடுதலை அளிக்கும் என்பதை தீயவர்கள் ஒருபோதும் அறிந்துக் கொள்வதில்லை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:12-15) இயேசு தூய ஆவியாரின் பண்புகளை வரிசைப்படுத்துகின்றார்.

- உண்மையை நோக்கி வழிநடத்துபவர் தூய ஆவியார்

- தாமாக எதையும் பேசாதவர்

- தந்தை மகனுக்கு வெளிப்படுத்தியதை கேட்டு அதை அவர் அறிவிப்பார்

- தந்தையையும் மகனையும் மாட்சிப்படுத்தக் கூடியவர்

நிறைவாழ்வை நோக்கி அழைத்துச் செல்லக் கூடியவராக அவர் இருக்கிறார். உண்மையை அறிந்தவர்கள் அவருக்கு  செவிசாய்க்கின்றனர்.

பொய் நீண்ட நாட்களாக மறைவில் இருப்பதில்லை. உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது பொய்யர் அவமானத்திற்கு உள்ளாவது நிச்சயம்.

பொய்யை சொல்லி மனிதர் முன்னிலையில் நல்ல பெயர் எடுத்து விடலாம். ஆனால் உண்மை தான் கடவுள் முன்னிலையில் நம்மை உயர்த்தும்.

தூய ஆவியாரின் பாதையில் உண்மையை அறிந்துக் கொள்வோம். உண்மைக்கு செவிசாய்ப்போம்.


உண்மையை அறிதலே கடவுளை காணுதலின் அடையாளம்…

07.05.2024 - செவ்வாய்க் கிழமை

“நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால் அவர் உங்கள்பால் திரும்புவார்; தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார்” - தோபித்து 13:6

உண்மை, நீதி ஆகியவற்றை ஒவ்வொருவருக்கும் ஏற்றார்போல நாம் மாற்றிவிடுகிறோம். எனக்கு பிடித்தவர்களுக்கு ஒரு நீதி. எனக்கு பிடிக்காதவர்கள் உண்மையை சொன்னாலும் அது என் காதுக்கு நன்மையாக தெரியாது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:5-11) தனக்கு பின் வருபவராக இருக்கும் தூய ஆவியார் குறித்து இயேசு சான்று பகர்கிறார். தூய ஆவியார் என்னும் துணையாளரை இயேசு நமக்கு தருகிறார். உலகினரின் பார்வையில் இருக்கும் தவறான கருத்துகளை சுட்டிக் காட்டுபவராக தூய ஆவியார் இருக்கிறார்.

பாவம், நீதி, தீர்ப்பு பற்றிய உலகினரின் பார்வை வேறு. கடவுளின் பார்வை வேறு. நான் செய்வது தான் சரி, நான் தான் நீதிமான், நான் தான் நீதிபதி என்ற மனநிலை நம்மில் மேலோங்கி இருக்கிறது. 

உண்மை நம்மில் தங்கவில்லை என்றால் உண்மையானவரை நாம் கண்டுக் கொள்ளமுடியாது. என் பார்வையில் சரி என்ற மனநிலை நீங்கி சரியானதை சரியென்றும் தவறானதை தவறென்றும் ஏற்றுக் கொள்ளும் மனபக்குவம் நோக்கி நாம் நகர வேண்டும்.

லூக்கா நற்செய்தி 12:10 இவ்வாறு சொல்கிறது, “மானிடமகனுக்கு எதிராய் ஒரு வார்த்தை சொல்லிவிட்டவரும் மன்னிக்கப்படுவார். ஆனால் தூய ஆவியாரைப் பழித்துரைப்பவர் மன்னிப்புப் பெற மாட்டார்”.

தூய ஆவியாருக்கு எதிரான பழிப்புரை என்பது உண்மையை அறிந்திருந்தும் அதை திரித்து பொய்யாக கூறுவது, நம் உடல் தூய ஆவியார் தங்கும் கோவில் என்று தெரிந்திருந்தும் அதை மாசுப்படுத்துவது, தூய ஆவியாரின் கனிகளையும் வரங்களையும் பெற்றிருந்தும் அதை புறக்கணிப்பது.

நாம் உண்மையின் வழியாக கடவுளை அறிந்துக் கொள்வோம். 

1திமொத்தேயு 2:4 “எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார்”. 


நிறைவுள்ளவருக்கு சான்று பகர…

06.05.2024 - திங்கட் கிழமை

“இப்பொழுதும் இதோ! என் சான்று விண்ணில் உள்ளது; எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்” - யோபு 16:19

வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் இருக்க வேண்டும். எதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை வாழ்வது வாழ்க்கை அல்ல. இருக்கிற வாழ்க்கையை பயனுள்ள முறையில் வாழ்ந்து காட்டுவதே வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்கும். இருப்பதில் நிறைவோடும், பகிர்வதில் மகிழ்வோடும் வாழ்க்கை நகர வேண்டும்.

அடுத்தவர் உயர்ந்த நிலையில் இருக்கிறாரே என்று பெரூமூச்சு விடுவதில் வாழ்க்கை நகர்ந்தால் அது இனிமையான வாழ்க்கையாக இருக்காது. என் வாழ்வு உயர நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் எண்ணமாக இருக்க வேண்டும்.

எல்லாம் இருப்பவரும் நிறைவோடு இருப்பதில்லை. எதுவும் இல்லாதவரும் நிறைவோடு இருப்பதில்லை. நிறைவை நாம் காண்பது எப்போது? சீராக்கின் ஞான நூல் 14:9 இவ்வாறு சொல்கிறது, “பேராசை கொண்டோர் உள்ளது கொண்டு நிறைவு அடைவதில்லை; பேராசையுடன் கூடிய அநீதி, உள்ளம் தளர்வு அடையச் செய்கிறது”. 

இன்றைய நற்செய்தி வாசகம் (யோவான் 15:26-16:4) இறைவனுக்கு சான்று பகர நமக்கு அழைப்பு விடுக்கிறது. தந்தையையும் மகனையும் அறியாதவர்கள் முன் நாம் கடவுளுக்கு சான்று பகர வேண்டும். 

எப்போது நாம் சான்று பகர்வோம்? நிறைவு நம்மில் குடிகொள்ளும்போது. அந்த நிறைவை தருபவர் இயேசு கிறிஸ்து. தூயஆவி என்னும் துணையாளராம் நிறைவை இயேசு தருகிறார். அவருக்கு சான்று பகர நமக்கு பலத்தை விடுக்கிறார்.  

“உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்” (மத்தேயு 5:48) என்ற இறைவார்த்தையை போல நாம் நிறைவுள்ளவர்களாய் இருந்து இறைவனுக்கு சான்று பகர்வோம். துன்பங்களையும் தாண்டி, மிரட்டல்களையும் கடந்து இறைவனில் நிறைவை காண்போம். 


கடவுளோடு இணைய உதவும் கட்டளைகள்

05.05.2025 - ஞாயிற்றுக் கிழமை

"ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன" 

அதை செய்! இதை செய்! என்று மற்றவர் நம்மை பார்த்துச் சொன்னாலே எரிச்சல் தான் வரும் நமக்கு. நம்மை தவிர வேறு யாரும் நம்மை அதிகாரம் செய்ய கூடாது. அதையும் மீறி நம்மை ஒருவர் அதட்டினாலோ மிரட்டினாலோ அந்த நபரின் நிலைமை அந்தோ பரிதாபம் தான்.

யாருக்கும் யாரும் பணிந்திருக்க விரும்புவதில்லை. பிறர் சொல்லும் கட்டளைக்கு கீழ்ப்படிய யாரும் எண்ணுவதில்லை. எனக்கு நானே ராஜா! எனக்கு நானே ராணி! இது தான் நமது தாரக மந்திரம்.

இதையும் கடந்து சிலர் அன்புக்கு அடிமையாக இருக்கிறார்கள். சிலர் பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். சிலர் மிரட்டலுக்கு அடிமையாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்றுபோல இருப்பதில்லை.

சிலரின் உருட்டலும் மிரட்டலும் பலரை பணிய வைத்து விடுகிறது. இந்த பணிவு நிரந்தரம் அல்ல. சிலர் பணத்தினால் சிலரை விலைப்பேசி விடுகிறார்கள். இதுவும் நிரந்தரம் அல்ல. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:9-17) இறைவனோடு இணைய சில கட்டளைகள் நமக்கு உதவுகின்றன. இந்த கட்டளைகள் மற்றவர்களை மிரட்டுபவை அல்ல. அன்பினால் கட்டிப் போடுபவை. அவைதான் இயேசுவின் அன்புக் கட்டளைகள்.

- மகிழ்ச்சியாய் இருங்கள்

- மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்

- தியாகம் செய்யுங்கள்

- நண்பர்களாய் இருங்கள்

- கனி கொடுங்கள்

இவையெல்லாம் நிறைவேற இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். இயேசுவின் கட்டளைகள் வார்த்தை வழியாக எல்லோராலும் அறிவிக்கப்படுகிறது. வாழ்க்கை வழியாக கட்டளைகளை நிறைவேற்றுவது இங்கு சிரமமாக இருக்கிறது.

எல்லோரும் நல்லவர்கள் தான். தனித்தனியாக வாழும்போது. குழுவாக, கூட்டமாக இணையும்போது எல்லாம் சிரழிந்து போகிறது. ஒருவரின் வாழ்வை மற்றவர் கெடுத்து விடுகிறார்.

இயேசுவின் கட்டளைகளை நிறைவேற்ற சிலரது முன்மாதிரியற்ற வாழ்க்கை முறை குறுக்கீடாக இருக்கிறது.

கடவுளை அன்பு செய்வதாக சொல்வோர் பலர். கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட சொந்த உறவுகளையே மதிக்காத மனிதர்களும் பக்திமான்களாக இருக்கத் தான் செய்கிறார்கள்.

கடவுளுடைய கட்டளை நிறைவேறுவது வெறும் வாயார கடவுளை புகழ்வதில் மட்டுமல்ல… செயல்களால் அவருடைய கட்டளைகளை (மன்னிப்பு, அன்பு, நீதி, நேர்மை, தியாகம்) கடைப்பிடிப்பதில் இருக்கிறது.

கட்டளைகளை பின்பற்றி அவரோடு இணைவோம். நிலைவாழ்வு பெறுவோம்.


வெறுப்புக் கொள்ளாதிருப்பாயாக…

04.05.2024 - சனிக் கிழமை

“ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத் தாமே பெருமை பாராட்டிக் கொள்கின்றனர்” - திருப்பாடல்கள் 36:2

அன்பு செய்வதற்கு ஒரு காலம், வெறுப்பு கொள்வதற்கு ஒரு காலம் என்பது போல தான் நமது வாழ்க்கை சுழல்கிறது. இக்காலக் கட்டங்களில் நம்மில் அன்புணர்வு குறைந்து வெறுப்புணர்வு தான் மேலோங்கி இருக்கிறது. 

பலர் சொல்லக்கூடியது, என்னை அறியாமலே நான் கோபப்பட்டு விடுகிறேன், வெறுப்பு வந்து விடுகிறது. கோபம், வெறுப்பு, எரிச்சல் இவையெல்லாம் திடீரென வருவது இல்லை. இவையெல்லாம் நாள்பட்ட தேக்கங்கள். மனதில் தேக்கப்பட்டவை ஒருநாளில் வெளிப்படுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:18-21) உலகு உங்களை வெறுப்பதற்கு முன்பே அது என்னை வெறுத்தது என்கிறார் இயேசு. இங்கு வெறுப்பு இயேசு என்னும் தனி மனிதர் மீது மட்டும் அல்ல, மாறாக அவரது கொள்கைகளையும், எண்ணங்களையும், இறையாட்சி கனவுகளையும் ஏற்றுக் கொள்வோரையும் உலகு வெறுத்தது, வெறுக்கிறது. 

துன்புறுத்தப்படுபவர்கள் இங்கு தீயவர்களாக இருப்பதில்லை. துன்புறுத்துபவர்கள் தான் இங்கு தீயவர்கள். நேர்மையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், விரட்டப்படுகிறார்கள். ஆனால் இறைவனோடு இணைந்து இருப்பதால் அவர்கள் ஒருபோதும் சோர்ந்து போவதில்லை.

இயேசுவின் வார்த்தையை ஏற்று நடப்போரை உலகம் வெறுக்கத் தான் செய்யும். 

பச்சை மரத்திற்கே அவ்வாறு செய்தார்கள் என்றால், பட்ட மரமாகிய நமக்கு இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள். 

அன்னை தெரசா சொல்வார், ‘வெறுப்பது உலகாக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்” என்று.

இயேசுவின் வார்த்தை நம்முள் ஆழமாக சென்று, வெறுப்பவர்களையும் நேசிக்கும் பண்பை, தியாகத்தை நம்மில் வளர்க்கட்டும்.


உள் இருப்பவரை அடையாளம் காண…

03.05.2024 - வெள்ளிக் கிழமை

“அப்போது அவர்கள் (எம்மாவு சீடர்கள்) கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துப் போனார்” - லூக்கா 24:31 

ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவரும் இருக்கிறார் தீயவரும் இருக்கிறார். நல்லதை செய்யும் போது நல்லவர் வெளிவருகிறார், தீயதை செய்யும் போது தீயவர் வெளிவருகிறார். எனக்குள் இருப்பதை நான் அறியும் முன்னரே எனக்குள் இருப்பவை வெளிவந்து விடுகிறது (கோபம், எரிச்சல், பொறாமை, வீண்பெருமை, கசப்புணர்வு…)

எனக்குள் இருக்கும் தேவையில்லாதவைகளை நான் நீக்கவில்லையென்றால், என்னை உருவாக்கியவருக்கு அங்கு இடம் இல்லாமல் போகும். 

ஒன்றும் இல்லாத போது கடவுள் (கடந்து + உள் இருப்பவர்) அதிகம் தேடப்படுகிறார். நோயுற்று இருக்கும் போது கடவுளின் உதவி தேவைப்படுகிறது. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:6-14) வழியும் வாழ்வும் உண்மையுமான இயேசுவை அவருடைய சீடர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவரையே கண்டு கொள்ளாத போது அவருக்குள் இருப்பவரை (தந்தையை) எப்படி அவர்களால் கண்டு கொள்ள முடியும்?

தந்தையை காட்டும்படியாக பிலிப்பு இயேசுவிடம் கேட்கிறார். இயேசுவிடம் இருந்தும் இயேசுவையும் அவருக்குள் இருப்பவரையும் அடையாளம் காண தவறிவிட்டார்கள்.

தந்தை  தனக்குள் இருந்து செயலாற்றுவதை இயேசு தெளிவுப்படுத்துகிறார். 

நாம் நம்மை கண்டுணர்ந்தால் நமக்குள் கடந்து செல்பவரை கண்டுணர முடியும், அவர் நம்முள் செயலாற்றுவதையும் கண்டுணர முடியும்.

நமக்குள் இருப்பதை அடையாளம் கண்டு, தேவையற்றவைகளை நீக்கி விடுவோம். நிலையற்றவைகளை கடந்து வந்து கடவுளை கண்டுணர்வோம்.


அன்பில் நிலைத்திருக்க…

02.05.2024 - வியாழக் கிழமை

“இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது” - 1கொரி 13:8 

மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அன்பில் பிறப்பெடுக்கிறது. யார் மீது அன்பு இருக்கிறதோ அவர்கள் சொல்வதையெல்லாம் நம்புகிறோம். நம்பிக்கை மகிழ்ச்சியான வாழ்வை கொடுக்கிறது. திருத்தூதர் பவுல் சொல்வது போல, “அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும்” (1கொரிந்தியர் 13:7).

அன்பு நம்பிக்கை வைத்தவரிடம் பலவீனப்பட்டு போகிறது. நெருக்கமானவரின் வார்த்தையையும் வாழ்வையும் நம்பும் ஆற்றல் அன்புக்கு உண்டு.

அன்பு பரிமாறப்பட பணம் தேவையில்லை, உணர்வு பரிமாறப்பட்டாலே போதும். பணத்தில், அதிகாரத்தில், மிரட்டலில் உருவாகும் அன்பு எல்லாம் கானல் நீர் போல மறைந்து போகும்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:9-11) தன் தந்தையோடு இயேசு அன்பில் இணைந்திருப்பது போல, நாமும் அவருடைய அன்பில் நிலைத்திருக்க அழைப்பு விடுக்கிறார். இங்கு தந்தையின் கட்டளைகளை கடைப்பிடிப்பதன் வழியாக இயேசுவின் அன்பு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இயேசுவின் கட்டளை அன்பை (இறை அன்பு ூ பிறர் அன்பு) பற்றியது. அந்த அன்பு இயேசுவில் நிறைவு பெறுகின்றது. நாம் அன்பில் நிலைத்திருக்க அவருடைய கட்டளையை கடைப்பிடிக்க வேண்டும்.

கடவுளின் கட்டளையை கடைப்பிடிப்போர் என்றும் பசுமையாய் இருக்கும் மரத்திற்கு ஒப்பாவர். பசுமையான அந்த மரம் அன்புக் கனிகளை கொடுக்கட்டும். அதை ருசிப்போர் அன்பில் நிலைத்திருந்து அந்த அன்பை விதைக்கட்டும்


அவரன்பில் பணியாற்ற

மரியாளின் மாசற்ற இதயம்

பொதுக்காலம் 12ஆம் வாரம் 28.06.2024 - சனிக் கிழமை  பிறப்பில் எல்லோருடைய இதயமும் தூய்மையானது தான். வாழ்க்கை நகர்கின்ற போது இதயம் மாசுபடிந்ததாக...