30.05.2024 - வியாழக் கிழமை
"பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்" - எசாயா 42:7
சிலர் கண்ணிருந்தும் குருடராக இருக்கின்றார்கள். ஒன்றை (நல்லதை) பார்ப்பதற்காக படைக்கப்பட்டது தான் கண். அந்தக் கண் இருந்தும் பார்க்க இயலாதவர்களாக, கண்டு கொள்ள முடியாதவர்களாக பலர் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கண்ணை இழந்தவருக்குத்தான் அந்த இழப்பின் வலி தெரியும். இருக்கின்ற வரை எதனுடைய அர்த்தத்தையும் நாம் புரிந்து கொள்ள மாட்டோம்.
இழந்ததை மீண்டும் பெற்றுக் கொள்கிற போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:46-52) பார்வை இழந்தவர் மீண்டும் பார்வை பெறுகிறார். அவருடைய நம்பிக்கை என்பது மற்றவர்கள் அவரை அதட்டிய போதிலும் கூட தடைப்பட்டு போகவில்லை.
'தாவீதின் மகனே! எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்துகிறார் பார்வை இழந்தவர். இழந்தது பார்வையை தான், பேசும் திறனை அல்ல என்பதனால், அவர் நம்பிக்கையை வார்த்தையின் வழியாக எடுத்துக் காட்டுகிறார்.
தன் நம்பிக்கையை வெளிக்காட்டும் தருணத்தில், பல தடைகள் வெளியே இருந்து வந்தாலும், அதில் துவண்டு போகாத மனம் தான் இந்த பார்வையற்றவர் நமக்கு சுட்டிக் காட்டக்கூடிய பாடம்.
இன்று நம்முடைய பார்வைகள் புது பிறப்பு அடைய வேண்டும். பார்க்க வேண்டியவற்றை பார்க்க, கண்டுகொள்ள வேண்டியவற்றை கண்டுகொள்ள நமது கண்கள் திறக்கப்பட வேண்டும்.
பெற்றுக் கொண்ட பார்வைக்கு நம்பிக்கை உரியவராக இருக்க வேண்டும்.
மூடியே இருக்கும் கண்களால் உலகை (நலனை) காண முடியாது.
நம்பிக்கை மலர்ந்து நம் கண்களும் திறக்கப்படட்டும்...
No comments:
Post a Comment