14.05.2024 - செவ்வாய்க் கிழமை
"நான் உன்னைப் புடமிட்டேன்; ஆனால், வெள்ளியைப் போலல்ல; துன்பம் எனும் உலை வழியாய் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்" - எசாயா 48:10
இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு திருத்தூதர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி, யூதாசு இஸ்காரியோத்துவினால் திருத்தூதர்கள் அணியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப முயன்றார்கள்.
பேதுரு பன்னிரெண்டாவது திருத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டியவர் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும் என விளக்கிச் சொல்கிறார்.
1. அவர் இயேசுவின் திருமுழுக்கிலிருந்து, அவர் விண்ணேற்றம் அடைந்தது வரை உடன் இருந்திருக்கவேண்டும்.
2. அவர் இயேசுவின் உயிர்ப்பை கண்ணால் கண்டிருக்க வேண்டும்.
இத்தகைய தகுதிகளைக் கொண்ட இருவரை சீடர்கள் முன்மொழிகிறார்கள். ஒருவர் யோசேப்பு எனப்படும் பர்சபா. இன்னொருவர் மத்தியா. பின்பு சீடர்கள் அனைவரும் ஒருமனதாக இறைவனிடம் வேண்டல் செய்து, இருவருடைய பெயரையும் சீட்டுக் குலுக்கிப் போடுகிறார்கள். சீட்டு மத்தியா பெயருக்கே விழுகிறது. இவ்வாறு மத்தியா திருத்தூதர்கள் அணியில் இடம்பெறுகிறார்.
மத்தியாவை குறித்த செய்திகள் விவிலியத்திலும், திருச்சபை வரலாற்றிலும் அதிகமாக இல்லை.
அலெக்ஸ்சாண்ட்ரியா நகரைச் சேர்ந்த புனித கிளமென்ட், “ஆண்டவர் இயேசு பணித்தளத்திற்கு அனுப்பிய எழுபத்தி இரண்டு சீடர்களில் மத்தியாவும் ஒருவர் எனவும், அவர் உடல் ஒறுத்தல்களை அதிகமாகச் செய்வார்” எனக் குறிப்பிடுவார்.
திருத்தூதர்கள் குழுமத்தில் நேரடியாக இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் உண்டு, இயேசுவின் பெயரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உண்டு. அந்த வகையில் புனித மத்தியா இயேசுவின் பெயரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
இறைவனுடைய பணியை செய்வதற்காக, மீட்பை அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக இயேசு திருத்தூதர்கள் குழுமத்தை ஏற்படுத்தினார்.
நாமும் அதே திருத்தூதர் குழுமத்தில் இணைக்கப்பட்டிருக்கிறோம்.
அருளும் ஆற்றலும் நிறைந்த மத்தியா போல நாமும் செயல்படுவோம்.
No comments:
Post a Comment