25.05.2024 - சனிக் கிழமை
"நான் குழந்தையாய் இருந்த பொழுது நல்லியல்புடன் இருந்தேன். நல்ல உள்ளம் என் பங்காய் அமைந்தது" - சாலமோனின் ஞானம் 8:19
குழந்தைகளின் உள்ளம் கள்ளம் கபடற்றது, வஞ்சகம் இல்லாதது, போலியாக நடிக்க தெரியாதது, பழிவாங்க தெரியாதது. (இப்பண்புகளுக்கு 2k Kids/இப்போதைய குழந்தைகள் கொஞ்சம் விதி விலக்கு தான் போல)
இருந்தபோதிலும் குழந்தைகள் உள்ளம் மாசற்றது. அந்த குழந்தைகளாக மாற நாம் அழைக்கப்படுகிறோம்.
குழந்தைகளுக்கு பொய்யை பொய்யாக சொல்லத் தெரியாது, காலம் வரும்வரை காத்திருந்து பழி வாங்க தெரியாது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:13-16) சிறு பிள்ளைகளை அதட்டுகிற சீடர்களை பார்த்து இயேசு கோபம் கொள்கிறார். இறையாட்சி சிறு பிள்ளைகளுக்கு உரியது என்கிறார். சிறு பிள்ளையைப் போல் இறையாட்சியை ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்பட மாட்டார் என்றும் உறுதியாக சொல்லுகிறார்.
இதன் வாயிலாக இயேசு சொல்வது, சிறு பிள்ளைகளுக்குரிய மனப்பாங்கு நம்மிடம் இருக்க வேண்டும் என்பதுதான்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பெற்றோருடைய கவனிப்பின்மையால், பெற்றோருடைய அக்கறையின்மையினால் திசை மாறி செல்கிறார்கள்.
ஒழுங்குப்படுத்த வேண்டியவர்களே ஒழுங்கினமாய் இருப்பது தான் இதற்கு காரணம். பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய பெற்றோர், பிள்ளைகளை திசை திருப்பி விடுகின்றனர்.
நம் குழந்தைகள் குழந்தைகளுக்குரிய மனப்பாங்கை இழந்து வருவதற்கு நாம் தான் ஒரு காரணம்.
காலமாற்றம், காலச் சூழ்நிலை என்ற பெயரில் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் குழந்தைகள் குழந்தைகளுக்கு உரிய மனப்பாங்கோடு வாழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
குழந்தைகளை குழந்தைகளாக வளர்த்தெடுப்போம், அந்த குழந்தைகளின் மனநிலையை நாமும் பெற்றுக் கொள்வோம். அதன் வாயிலாக இறையாட்சி நமதாகும்
No comments:
Post a Comment