08.05.2024 - புதன் கிழமை
“உள்ளங்களை அறியும் கடவுள் நமக்குத் தூய ஆவியைக் கொடுத்ததுபோல் அவர்களுக்கும் கொடுத்து அவர்களை ஏற்றுக் கொண்டார்” - திருத்தூதர் பணிகள் 15:8
உண்மை மதிப்புக்குரியதாக பார்க்கப்படுவதில்லை. பொய் எல்லோராலும் விரும்பி ஏற்கப்படுகிறது. உண்மையை அறிந்தவர்கள் ஒளியின் பாதையில் நடக்கின்றனர். பொய்மையை ஏற்கின்றவர்கள் இருளின் மக்களாக இருக்கின்றனர்.
இவ்வுலகில் உண்மைக்கு சான்று பகர்பவர்கள் இழிவுப்படுத்தப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்கள் என்று ஏளனமாக பார்க்கப்படுகின்றனர். உண்மை விடுதலை அளிக்கும் என்பதை தீயவர்கள் ஒருபோதும் அறிந்துக் கொள்வதில்லை.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:12-15) இயேசு தூய ஆவியாரின் பண்புகளை வரிசைப்படுத்துகின்றார்.
- உண்மையை நோக்கி வழிநடத்துபவர் தூய ஆவியார்
- தாமாக எதையும் பேசாதவர்
- தந்தை மகனுக்கு வெளிப்படுத்தியதை கேட்டு அதை அவர் அறிவிப்பார்
- தந்தையையும் மகனையும் மாட்சிப்படுத்தக் கூடியவர்
நிறைவாழ்வை நோக்கி அழைத்துச் செல்லக் கூடியவராக அவர் இருக்கிறார். உண்மையை அறிந்தவர்கள் அவருக்கு செவிசாய்க்கின்றனர்.
பொய் நீண்ட நாட்களாக மறைவில் இருப்பதில்லை. உண்மை வெளிச்சத்துக்கு வரும்போது பொய்யர் அவமானத்திற்கு உள்ளாவது நிச்சயம்.
பொய்யை சொல்லி மனிதர் முன்னிலையில் நல்ல பெயர் எடுத்து விடலாம். ஆனால் உண்மை தான் கடவுள் முன்னிலையில் நம்மை உயர்த்தும்.
தூய ஆவியாரின் பாதையில் உண்மையை அறிந்துக் கொள்வோம். உண்மைக்கு செவிசாய்ப்போம்.
No comments:
Post a Comment