13.05.2024 - திங்கட் கிழமை
"வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்" - இணைச் சட்டம் 31:6
துணிவு இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகை போன்றது. ஒன்றை செய்ய முடியாது என்று தெரிந்திருந்தாலும் கூட, துணிச்சல் நம்மிடம் இருந்தது என்றால், முடியாததை கூட நாம் முடித்து காட்ட முடியும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:29-33) "உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன் இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்" என்கிறார் இயேசு.
நல்லவர்களை எதிர்ப்பதற்கான துணிவு அல்ல தீயவற்றை தகர்த்தெறிவதற்கான துணிவு தான் நமக்கு தேவை. இவ்வுலகில் துன்பங்கள் உண்டு என்றாலும் நாம் துணிவோடு இருக்க இறைவன் விரும்புகிறார்.
துணிவும் நம்பிக்கையும் நம்மில் இருந்தால் நம்மால் எதையும் செய்ய முடியும்.
இயேசு தன்னுடைய வாழ்வில், துணிவை தனது ஆற்றலாக பயன்படுத்தினார். தவறான போதனையை எதிர்த்தார், தவறான எண்ணவோட்டங்களை கண்டித்தார், தவறாக சட்டங்களை போதித்தோரை எச்சரித்தார். இவையெல்லாம் செய்ய இயேசுவிடம் துணிவு இருந்தது.
நம் வாழ்க்கையில் எழக்கூடிய துன்பங்களினால் நாம் துவண்டு போய் விடுகிறோம். துன்பங்களை துணிச்சலால் விரட்டி அடிப்போம்.
நம்பிக்கையோடு கூடிய துணிச்சலோடு, நம் வாழ்க்கை பயணத்தை இயேசுவின் பாதையில் அமைப்போம். அதன் வாயிலாக இறையாட்சி சமூகத்தை கட்டி எழுப்புவோம்.
No comments:
Post a Comment