24_05

எல்லாம் மாறும்!!!

09.05.2024 - வியாழக் கிழமை

“நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்” - திருப்பாடல்கள் 30:11

மாறிக் கொண்டே இருப்பது உலகம் மட்டுமல்ல பலரின் உள்ளங்களும் தான். நாம் எப்போதும் ஒன்றுபோல இருப்பதில்லை. சில மாற்றங்கள் வலிந்து திணிக்கப்படுகின்றது. சில மாற்றங்கள் மற்றவர்களின் நடத்தையால் உருவாகிறது. சில மாற்றங்கள் தேவையின் பொருட்டு உருவாகிறது.

எல்லாம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் சிலருக்கு மாற வேண்டியது மாறுவதில்லை. சிலரின் கடின உள்ளம் மாறுவதில்லை, சிலரின் துன்பங்கள் குறைவதில்லை, சிலரின் வாழ்க்கை போராட்டம் நின்று போவதில்லை.

எப்போது மாறும் இந்நிலை? என்பது தொடர் கேள்வி தான். 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 16:16-20) இயேசு தன்னுடைய பிரியாவிடை பற்றி பேசுகின்றார். இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னை காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள் என்று சொல்லி உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும் என்கிறார்.

வாழ்க்கை மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கிறது என்றாலும் சில வேளையில் நடப்பது என்னதென்று அறியாமல் போய் விடுகிறது. வாழ்க்கையில் துன்பம் வரும் போது வாழ்க்கையின் எதார்த்தத்தை கற்றுக் கொள்கிறோம்.

சபை உரையாளர் நூல் 7:14 இவ்வாறு சொல்கிறது, “வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்”.

வாழ்க்கையில் இன்பம் தான் நிரந்தரம் என்றால் எதையும் செய்யலாம் என்ற எண்ணம் உருவாகிவிடும். துன்பம் தான் நிரந்தரம் என்றால் வாழ்ந்து என்ன பயன் என்ற எண்ணம் உருவாகிவிடும்.

வாழ்க்கையில் துன்பமும் நிரந்தரமில்லை, மகிழ்ச்சியும் நிரந்தரமில்லை. எல்லாம் மாறும். மாற்றங்கள் நம்மை பக்குவப்படுத்தும்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...