31.05.2024 - வெள்ளிக் கிழமை
புனித கன்னி மரியா எலிசபெத்தை சந்தித்தல் விழா
"நோயாளிகளைச் சந்திக்கத் தயங்காதே; இத்தகைய செயல் மற்றவர்களின் அன்பினை உனக்குப் பெற்றுத் தரும்" - சீராக் 7:35
பல நாட்கள் காணாதவர்கள், ஒருவர் மற்றவரை சந்திக்கிற போது கிடைக்கக்கூடிய மகிழ்ச்சியை விவரிக்க இயலாது. தொலைதூரத்தில் இருப்பவர்கள் நெருங்கி வருகின்ற போது மகிழ்ச்சி பொங்கி வழியும்.
அந்த சந்திப்பு அன்பின் வெளிப்பாடு. அந்த அன்பு மகிழ்வில் முழுமை பெறுகிறது.
நாம் தேவையில் இருக்கின்ற போது நாம் எதிர்பாராத சமயத்தில், நமக்கு மிகவும் பிடித்த நபர் நம்மை சந்திக்கிறார், நம்மோடு உடன் இருக்கிறார் என்றால் அந்த மகிழ்ச்சியின் உணர்வை வரையறை செய்ய முடியாது.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
என்கிறது திருக்குறள். தேவையில் செய்யப்படும் உதவி சிறிது என்றாலும் அது காலத்தின் தேவை அறிந்து செய்யப்பட்டதால் அது பெரிதாகவே பார்க்கப்படும்.
சந்திப்பு என்பது ஒரு சிறிய உதவி தான், ஆனால் உணர்வுகளைப் புரிந்த அந்த சந்திப்பு பெரும் உதவியாக பார்க்கப்படும்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 1:39-56) அன்னை மரியா எலிசபெத்தம்மாளை சந்திக்கின்றார். இந்த சந்திப்பு கபிரியேல் தூதரின் காட்சிக்கு பின்பு நடைபெறுகிறது.
'உம் உறவினர் கருவுற்று இருக்கிறார்' என்று கடவுளின் தூதர் கூறியவை உண்மையா? இல்லையா? என்பதை பரிசோதிப்பதற்கான சந்திப்பு அல்ல, மாறாக உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் எலிசபெத்தமாளை தேற்றுவதற்கான சந்திப்பு.
அன்னை மரியாவின் வாழ்த்தை கேட்டதும் எலிசபெத்தம்மாளின் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளியது. இங்கு அன்னை மரியாவின் சந்திப்பு எலிசபெத்தம்மாளுக்கு மட்டுமல்ல அவருடைய குழந்தைக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது.
மகிழ்வின் தொடக்கம் சந்திப்பு தான். நம் உறவினரை நாம் சந்திக்கின்ற போது நாமும் அன்னை மரியாவை போல மகிழ்ச்சியை கொடுப்பவராக மாறி விடுகிறோம்.
உணர்வுகளைப் புரிந்த அன்னையைப் போல மற்றவர்களின் உள்ளங்களை புரிந்து செயல்படுவோம்.
No comments:
Post a Comment