24_05

கடவுளோடு இணைய உதவும் கட்டளைகள்

05.05.2025 - ஞாயிற்றுக் கிழமை

"ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன" 

அதை செய்! இதை செய்! என்று மற்றவர் நம்மை பார்த்துச் சொன்னாலே எரிச்சல் தான் வரும் நமக்கு. நம்மை தவிர வேறு யாரும் நம்மை அதிகாரம் செய்ய கூடாது. அதையும் மீறி நம்மை ஒருவர் அதட்டினாலோ மிரட்டினாலோ அந்த நபரின் நிலைமை அந்தோ பரிதாபம் தான்.

யாருக்கும் யாரும் பணிந்திருக்க விரும்புவதில்லை. பிறர் சொல்லும் கட்டளைக்கு கீழ்ப்படிய யாரும் எண்ணுவதில்லை. எனக்கு நானே ராஜா! எனக்கு நானே ராணி! இது தான் நமது தாரக மந்திரம்.

இதையும் கடந்து சிலர் அன்புக்கு அடிமையாக இருக்கிறார்கள். சிலர் பொருளுக்கு அடிமையாக இருக்கிறார்கள். சிலர் மிரட்டலுக்கு அடிமையாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் வாழ்க்கை ஒன்றுபோல இருப்பதில்லை.

சிலரின் உருட்டலும் மிரட்டலும் பலரை பணிய வைத்து விடுகிறது. இந்த பணிவு நிரந்தரம் அல்ல. சிலர் பணத்தினால் சிலரை விலைப்பேசி விடுகிறார்கள். இதுவும் நிரந்தரம் அல்ல. 

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:9-17) இறைவனோடு இணைய சில கட்டளைகள் நமக்கு உதவுகின்றன. இந்த கட்டளைகள் மற்றவர்களை மிரட்டுபவை அல்ல. அன்பினால் கட்டிப் போடுபவை. அவைதான் இயேசுவின் அன்புக் கட்டளைகள்.

- மகிழ்ச்சியாய் இருங்கள்

- மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்

- தியாகம் செய்யுங்கள்

- நண்பர்களாய் இருங்கள்

- கனி கொடுங்கள்

இவையெல்லாம் நிறைவேற இயேசுவின் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும். இயேசுவின் கட்டளைகள் வார்த்தை வழியாக எல்லோராலும் அறிவிக்கப்படுகிறது. வாழ்க்கை வழியாக கட்டளைகளை நிறைவேற்றுவது இங்கு சிரமமாக இருக்கிறது.

எல்லோரும் நல்லவர்கள் தான். தனித்தனியாக வாழும்போது. குழுவாக, கூட்டமாக இணையும்போது எல்லாம் சிரழிந்து போகிறது. ஒருவரின் வாழ்வை மற்றவர் கெடுத்து விடுகிறார்.

இயேசுவின் கட்டளைகளை நிறைவேற்ற சிலரது முன்மாதிரியற்ற வாழ்க்கை முறை குறுக்கீடாக இருக்கிறது.

கடவுளை அன்பு செய்வதாக சொல்வோர் பலர். கடவுளின் சாயலாக படைக்கப்பட்ட சொந்த உறவுகளையே மதிக்காத மனிதர்களும் பக்திமான்களாக இருக்கத் தான் செய்கிறார்கள்.

கடவுளுடைய கட்டளை நிறைவேறுவது வெறும் வாயார கடவுளை புகழ்வதில் மட்டுமல்ல… செயல்களால் அவருடைய கட்டளைகளை (மன்னிப்பு, அன்பு, நீதி, நேர்மை, தியாகம்) கடைப்பிடிப்பதில் இருக்கிறது.

கட்டளைகளை பின்பற்றி அவரோடு இணைவோம். நிலைவாழ்வு பெறுவோம்.


No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...