15.05.2024 - புதன் கிழமை
“ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர். அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார்” - 2 தெசலோனிக்கர் 3:3
எல்லாரும் ஒன்றாய் இருக்க வேண்டும். இது நல்ல எண்ணம் தான் ஆனால் தீமை நன்மையோடு சேராது. உலகு சார்ந்த செயல்கள் விண்ணகம் சார்ந்த செயல்களோடு சேராது. நல்லவர்கள் தீயவர்களோடு இணைய மாட்டார்கள். அப்படி இருக்கும்போது எப்படி எல்லாம் அல்லது எல்லாரும் ஒன்றாய் இருக்க முடியும்.
நாம் இவ்வுலகில் இருக்கிறோம், ஆனால் இவ்வுலகை சார்ந்தவர்கள் அல்ல. நாம் தீயதை செய்கிறோம், ஆனால் நாம் தீமையில் நிலைத்திருக்க அழைக்கப்படவில்லை. மாறாக, தூய வாழ்க்கை வாழ அழைக்கப்பட்டிருக்கிறோம்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 17:11-19) ‘தூய தந்தையே! நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்’ என்று இயேசு வேண்டுகிறார். உலகின் தீயவைகளிலிருந்து உலகினரை காத்தருளும் என்றும் அவர் வேண்டுகிறார்.
நாம் இறைவனுக்குரியவர்கள் என்ற எண்ணங்கள் நம்மில் மறைந்து போகின்ற காரணத்தினால் தீமை, பொய்மை, பிரிவினை ஆகிய உலக காரியங்கள் நம்முள் குடிகொள்ள ஆரம்பித்துவிடுகின்றன.
தீமை நம்முள் குடிகொண்டிருக்கிறது, நம்முடைய எண்ணங்கள், செயல்கள் தீயவையாக இருக்கின்றன என்பதை நாம் உணரவில்லை என்றால் அதிலிருந்து நாம் வெளிவர முடியாது.
தீயோனிடமிருந்து காத்தருள இறைவன் விரும்புகிறார். நாம் வெளிவர விரும்புகிறோமா? என்ற சிந்தனை ஆழமாக நம் உள்ளத்தில் பதியட்டும்.
No comments:
Post a Comment