24_05

தூய ஆவியாரின் துணையோடு வாழ...

19.05.2024 - ஞாயிற்றுக் கிழமை

"ஆண்டவர் மனிதருக்கு தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் அறிந்தறியும்" - நீதிமொழிகள் 20:27

இன்று தூய ஆவியார் பெருவிழா. (பெந்தகோஸ்து பெரு விழா)

மறக்கப்பட்ட மூன்றாம் ஆளாக இருக்கக்கூடியவர் தூய ஆவியார். யார் அந்த தூய + ஆவி என்ற கேள்வி எழுகிறது. நம்மை இயக்குபவர், நம்மில் செயலாற்றுபவர், உண்மையை உணர்த்துபவர், ஆற்றலோடு செயல்பட வைப்பவர், கனிகளையும் கொடைகளையும் பொழிபவர், வரங்களால் நம்மை நிறைப்பவர். 

இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டவராக தூய ஆவியானவர் திகழ்ந்தாலும், அவர் மறக்கடிக்கப்பட்டவராகவே இருக்கிறார். 

இயேசு கிறிஸ்து தனக்குப்பின் துணையாளராம் தூய ஆவியாரை தருகிறார். இயேசுவோடு இருந்த திருத்தூதர்கள் இயேசுவின் பணி வாழ்வில் ஈடுபட்டாலும், இயேசு அவர்களோடு இருந்தபோது இயேசுவைப் போல அவர்களால் பணியை செய்ய முடியவில்லை. காரணம் அவர்கள் இயேசுவிடமிருந்து அதிகாரங்களை பெற்று இருந்தார்கள், ஆற்றலை பெற்றிருந்தார்கள். ஆனால் அதை செயல்படுத்த வேண்டிய நேரம் வராமல் இருந்தது. 

இந்த பெந்தகோஸ்து பெருவிழாவின் வழியாக பிளவுற்ற நாவு அவர்கள் மேல் இறங்கி வர, அவர்கள் தூய ஆவியை பெற்றுக் கொண்டார்கள். துணிச்சலோடு இறந்த இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள் (சான்று பகர வாய்ப்பை பெற்றார்கள்).

பொது இடங்களுக்கு செல்வதற்கே பயப்பட்டவர்கள், தூய ஆவியைப் பெற்ற பின்பு பொது இடங்களுக்கு சென்று, இயேசுவை கொலை செய்த யூதர்களை பார்த்து, நீங்கள்தான் இயேசுவை கொன்றீர்கள் என்று தைரியத்தோடு பறைசாற்ற தொடங்கினர்.

அந்த தூய ஆவியானவர் அவர்களுக்குள் செயலாற்றி உண்மைக்கு சான்று பகர தூண்டுதலாக இருந்தார். 

இதே தூய ஆவியானவர் பழைய ஏற்பாட்டில் கடவுளின் ஆவி இறை ஆவி என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். இந்த ஆவியானவர் தான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசர்கள், நீதித் தலைவர்கள் அனைவருள்ளும் இருந்து செயலாற்றியவர். 

தொடக்க நூல் 1: 2இன் படி "மண்ணுலகு உருவற்று வெறுமையாக இருந்தது. ஆழத்தின் மீது இருள் பரவி இருந்தது. நீர் திரளின் மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது" என்று வாசிக்கிறோம்.

தொடக்க முதல் இறுதி வரை இருப்பவராக தூய ஆவியானவர் காட்டப்படுகிறார். 

அதே தூய ஆவியார் தான், திருமுழுக்கு வழியாக ஒவ்வொருவர் மீதும் பொழியப்படுகிறார். உறுதிப் பூசுதல் வழியாக உறுதிப்படுத்தப்படுகிறார். 

அவரின் துணை நமக்குள் இருப்பதை உணர்ந்து அவருடைய கொடைகளையும் கனிகளையும் பகிர்ந்து அளிப்போம். அவர் இன்னும் நம்மை வரங்களால் நிரப்புவார்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...