24_05

இறையாட்சிக்கு உட்பட வேண்டும்...

27.05.2024 - திங்கள் கிழமை

"இறையாட்சி என்பது நாம் உண்பதையும் குடிப்பதையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாகத் தூய ஆவி அருளும் நீதி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது" - உரோமையர் 14:17

இறைவனின் அரசுக்கு எல்லோரும் தகுதி உடையவர்களே. அந்த தகுதி என்பது எவ்வாறு மெய்ப்பிக்கப்படுகிறது? நாம் கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்கும் போது தான். அவர் வார்த்தையை வாழ்வாக்குவது நாம் இறையாட்சிக்கு உட்பட்டவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இயேசு இவ்வாறு சொல்வார், எவரும் இரு தலைவருக்கு பணிவிடை செய்ய முடியாது. கடவுள் என்னும் தலைவருக்கும், செல்வம் என்னும் தலைவருக்கும் நாம் பணிவிடை செய்ய முடியாது. 

இன்று பணத்திற்காக தங்களுடைய நேர்மையை, உண்மையை விட்டுக் கொடுக்கின்ற/விலை பேசுகின்ற மனிதர்கள் அதிகம் உருவாகிவிட்டனர். 

பணம் இருந்தால் போதும் அல்லது பணம் தந்தால் போதும் எதையும் செய்யும் மனப்பாங்கு இங்கு அதிகரித்துவிட்டது. சமூக சேவை, தன்னார்வ பணி இவை எல்லாம் இன்று கதவுகள் போட்டு இழுத்து மூடப்பட்டுள்ளன. அதையும் தாண்டி சமூகத்தின் மீது கொண்ட ஆர்வத்தோடு பணி செய்பவர்கள் பாதிப்புக்கு (மிரட்டலுக்கு) உள்ளாக்கப்படுகிறார்கள். 

நமக்கு ஏன் வம்பு? என்ற மனநிலை இன்று நம்மை கிறிஸ்துவின் சீடர்களாக இருக்கும் நிலையில் இருந்து தூர தள்ளி விட்டது.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 10:17-27) இயேசுவிடம் ஒருவர், நிலை வாழ்வை உரிமையாக்கி கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்கிறார். கட்டளைகளை கடைப்பிடி என்கிறார் இயேசு. அந்த நபரும் அதை நான் ஏற்கனவே செய்து வருகிறேன் என்று பதில் கொடுக்கிறார். உமக்கு ஒன்று குறைவுப்படுகிறது உமக்குள்ளவற்றை விற்று ஏழைகளுக்கு கொடும் என்று இயேசு சொன்னதும், அந்த நபர் முக வாட்டத்தோடும் வருத்தத்தோடும் சென்று விடுகிறார். 

இருப்பதை இழக்காத மனநிலை இறையாட்சிக்கு ஏற்ற மனநிலை அல்ல. 

இங்கு கொடுத்தல் என்பது இருக்கக்கூடிய எல்லாவற்றையும் இழந்து விட்டு வெறுமையாக இருக்க வேண்டும் என்று அல்ல.

நம்முடைய தேவைக்கு அதிகமாக இருப்பவற்றை, தேவையில் இருப்போருக்கு பகிர்வது தான் இயேசு என்று சொல்லக்கூடிய பகிர்வு மனப்பான்மை.  

இருப்பவற்றை பகிர்கின்ற போது, நாம் விண்ணகத்தில் நமக்கான செல்வத்தை சேர்த்து வைக்கிறோம். 

மீட்பு எல்லோருக்கும் உரியது. அந்த மீட்பைப் பெற்றுக் கொள்வதற்கான வழி (கட்டளைகளை கடைபிடித்தல் - அன்பு, பகிர்வு, பரிவு, அமைதி, இரக்கம்...) நமக்கு முன் இருக்கிறது.

கட்டளைகளை கடைப்பிடித்து இறையாட்சிக்கு உட்படுவோம்.

No comments:

Post a Comment

அவரன்பில் பணியாற்ற

துன்பத்துக்கு மத்தியிலும் இறைவனுக்கு நன்றி...

புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா 29.06.2025 – ஞாயிற்றுக் கிழமை  சாதாரண மனிதரால் பிறர் தரும் சாதாரண துன்பங்களை கூட ஏற்றுக் கொள்ள முடியாது. ந...