"கடவுளின் மனிதனாகிய நீ, இவற்றிலிருந்து தப்பி ஓடு. நீதி, இறைப்பற்று, நம்பிக்கை, மனஉறுதி, பணிவு ஆகியவற்றை நாடித்தேடு" - 1 திமொத்தேயு 6:11
சீடத்துவம் தலைவரை பின்பற்றுவதில் இருந்து தொடங்குகிறது. தலைவன் எவ்வழியோ அவ்வழியே மக்கள் என்று சொல்வார்கள். தலைவர் ஒரு பாதையும் மக்கள் ஒரு பாதையும் சென்றார்கள் என்று சொன்னால் அந்த அரசு பாழாய் போகும். அதனால் யாரும் பயனடைய போவதில்லை. தற்பெருமையை நாடுகிற போது, இந்த இணைந்து போகாத் தன்மை உருவாகிறது.
இந்த சமூகத்தால் பெரியவர்களாக காட்டப்படுகிறவர்கள் கடவுளின் விழுமியங்களை கடைபிடிக்கவில்லை என்று சொன்னால் அவர்கள் சிறியவர்களே. இந்த சமூகத்தால் சிறியவர்களாக பார்க்கப்படுகிறவர்கள், கடவுளின் விழுமியங்களை தங்களுடைய வாழ்க்கையால் பிரதிபலிக்கின்றார்கள் என்று சொன்னால் அவர்கள் பெரியவர்களே. தற்பெருமை கடவுளோடு உள்ள அன்பு உறவுக்கு தடையாக அமைகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (மாற்கு 9:30-37) இயேசு தன்னுடைய பாடுகளையும் இறப்பையும் உயிர்ப்பையும் பற்றி பேசுகிறார். அதை அறிந்து கொள்ளாத, புரிந்து கொள்ளாத இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் யார் பெரியவர் என்பதை பற்றி ஒருவரோடு ஒருவர் வாதாடி கொண்டிருக்கிறார்கள்.
யார் பெரியவர் என்ற கேள்வி இயேசுவிடம் இருந்து இவர்களை அந்நியப்படுத்திவிட்டது. பணிவாழ்வு முக்கியம் என்பதை உணராத இவர்கள் அதிகார வாழ்வு தான் சிறந்தது என்று எண்ணிக்கொண்டார்கள்.
அறிந்து கொள்ளுதல், தெரிந்து கொள்ளுதல், அரவணைத்தல், ஏற்றுக்கொள்ளுதல், தாழ்ச்சிக் கொள்ளுதல், மற்றவரை உயர்த்துதல் இவை தான் இயேசுவின் சீடருடைய பண்பாக இருக்க வேண்டும்.
நம்மை முதன்மைப்படுத்த ஆரம்பித்தோம் என்றால் நாம் முதன்மையானவர்களாக காட்டப்படலாம், ஆனால் நாம் ஒருவகையில் தனித்து விடப்பட்டவர்கள் தான்.
இயேசுவோடு இணைந்திருப்பவர்கள் இயேசுவில் பெருமை கொள்வார்கள் தற்பெருமை கொள்ள மாட்டார்கள்.
No comments:
Post a Comment