04.05.2024 - சனிக் கிழமை
“ஏனெனில் அவர்கள், குற்றம் வெளிப்பட்டு வெறுப்புக்கு உள்ளாகப் போவதில்லை என, இறுமாந்து தமக்குத் தாமே பெருமை பாராட்டிக் கொள்கின்றனர்” - திருப்பாடல்கள் 36:2
அன்பு செய்வதற்கு ஒரு காலம், வெறுப்பு கொள்வதற்கு ஒரு காலம் என்பது போல தான் நமது வாழ்க்கை சுழல்கிறது. இக்காலக் கட்டங்களில் நம்மில் அன்புணர்வு குறைந்து வெறுப்புணர்வு தான் மேலோங்கி இருக்கிறது.
பலர் சொல்லக்கூடியது, என்னை அறியாமலே நான் கோபப்பட்டு விடுகிறேன், வெறுப்பு வந்து விடுகிறது. கோபம், வெறுப்பு, எரிச்சல் இவையெல்லாம் திடீரென வருவது இல்லை. இவையெல்லாம் நாள்பட்ட தேக்கங்கள். மனதில் தேக்கப்பட்டவை ஒருநாளில் வெளிப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 15:18-21) உலகு உங்களை வெறுப்பதற்கு முன்பே அது என்னை வெறுத்தது என்கிறார் இயேசு. இங்கு வெறுப்பு இயேசு என்னும் தனி மனிதர் மீது மட்டும் அல்ல, மாறாக அவரது கொள்கைகளையும், எண்ணங்களையும், இறையாட்சி கனவுகளையும் ஏற்றுக் கொள்வோரையும் உலகு வெறுத்தது, வெறுக்கிறது.
துன்புறுத்தப்படுபவர்கள் இங்கு தீயவர்களாக இருப்பதில்லை. துன்புறுத்துபவர்கள் தான் இங்கு தீயவர்கள். நேர்மையாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள், மிரட்டப்படுகிறார்கள், விரட்டப்படுகிறார்கள். ஆனால் இறைவனோடு இணைந்து இருப்பதால் அவர்கள் ஒருபோதும் சோர்ந்து போவதில்லை.
இயேசுவின் வார்த்தையை ஏற்று நடப்போரை உலகம் வெறுக்கத் தான் செய்யும்.
பச்சை மரத்திற்கே அவ்வாறு செய்தார்கள் என்றால், பட்ட மரமாகிய நமக்கு இன்னும் என்னவெல்லாம் செய்வார்கள்.
அன்னை தெரசா சொல்வார், ‘வெறுப்பது உலகாக இருந்தாலும், நேசிப்பது நீங்களாக இருங்கள்” என்று.
இயேசுவின் வார்த்தை நம்முள் ஆழமாக சென்று, வெறுப்பவர்களையும் நேசிக்கும் பண்பை, தியாகத்தை நம்மில் வளர்க்கட்டும்.
No comments:
Post a Comment