03.05.2024 - வெள்ளிக் கிழமை
“அப்போது அவர்கள் (எம்மாவு சீடர்கள்) கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம் கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துப் போனார்” - லூக்கா 24:31
ஒவ்வொருவருக்குள்ளும் நல்லவரும் இருக்கிறார் தீயவரும் இருக்கிறார். நல்லதை செய்யும் போது நல்லவர் வெளிவருகிறார், தீயதை செய்யும் போது தீயவர் வெளிவருகிறார். எனக்குள் இருப்பதை நான் அறியும் முன்னரே எனக்குள் இருப்பவை வெளிவந்து விடுகிறது (கோபம், எரிச்சல், பொறாமை, வீண்பெருமை, கசப்புணர்வு…)
எனக்குள் இருக்கும் தேவையில்லாதவைகளை நான் நீக்கவில்லையென்றால், என்னை உருவாக்கியவருக்கு அங்கு இடம் இல்லாமல் போகும்.
ஒன்றும் இல்லாத போது கடவுள் (கடந்து + உள் இருப்பவர்) அதிகம் தேடப்படுகிறார். நோயுற்று இருக்கும் போது கடவுளின் உதவி தேவைப்படுகிறது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 14:6-14) வழியும் வாழ்வும் உண்மையுமான இயேசுவை அவருடைய சீடர்கள் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. அவரையே கண்டு கொள்ளாத போது அவருக்குள் இருப்பவரை (தந்தையை) எப்படி அவர்களால் கண்டு கொள்ள முடியும்?
தந்தையை காட்டும்படியாக பிலிப்பு இயேசுவிடம் கேட்கிறார். இயேசுவிடம் இருந்தும் இயேசுவையும் அவருக்குள் இருப்பவரையும் அடையாளம் காண தவறிவிட்டார்கள்.
தந்தை தனக்குள் இருந்து செயலாற்றுவதை இயேசு தெளிவுப்படுத்துகிறார்.
நாம் நம்மை கண்டுணர்ந்தால் நமக்குள் கடந்து செல்பவரை கண்டுணர முடியும், அவர் நம்முள் செயலாற்றுவதையும் கண்டுணர முடியும்.
நமக்குள் இருப்பதை அடையாளம் கண்டு, தேவையற்றவைகளை நீக்கி விடுவோம். நிலையற்றவைகளை கடந்து வந்து கடவுளை கண்டுணர்வோம்.
No comments:
Post a Comment