16.05.2024 - வியாழக் கிழமை
"கடவுளிடம் அன்பு செலுத்துகிறவரைக் கடவுள் அறிவார்" - 1 கொரிந்தியர் 8:3
அறிந்து கொள்ளாமல் அன்பு செய்ய முடியாது. அன்பு செய்யாமல் அறிவிக்க முடியாது. அன்பும் அறிதலும் ஒன்றோடொன்று இணைந்து செல்வது.
நமக்கு அறிமுகமாகும் எல்லோரையும் நாம் முழுமையாக அறிந்துக் கொள்ள, அன்புச் செய்ய முடியாது. ஆனால் அறிந்து கொண்டவர்களை (ஒரு சிலரை) நாம் நிச்சயமாக அன்புச் செய்ய முடியும். ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கும் போதும், ஒருவர் மற்றவரை அறிந்திருக்கும் போதும் குறைவுள்ள அன்புக்கு அங்கு இடமில்லாமல் போகிறது.
அன்பு இருக்கும் இடத்தில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கும். ஆனால் சிலர் காட்டும் அன்பு போலியானது என்று தெரிந்தும் கூட நாம் ஏமாந்து போய்விடுகிறோம். ("அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்" - 1கொரிந்தியர் 13:7)
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 17:20-26) இயேசு தந்தையின் அன்பை உலகிற்கு அறிவிக்கிறார். தந்தை தன்மீது அன்பு கொண்டுள்ளது போல உலகினர்மீதும் அன்பு கொண்டுள்ளார் என்பதை எடுத்துச் சொல்கிறார்.
தந்தையே உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீர் என்மீது கொண்டுள்ள அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப் பற்றி அவர்களுக்கு அறிவித்தேன் என்று சொல்லி பெற்றுக் கொண்டதை பகிர்ந்து கொடுக்கிறார் இயேசு.
அன்பு அறிவிப்பில் நிறைவு பெறுகிறது. தான் பெற்றுக் கொண்ட அன்பை மற்றவர்களும் சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அறிவிப்பாக மாறுகிறது.
அன்பு அறிவிக்கப்படும் போது அங்கு அமைதி உருபெறுகிறது. அன்பு அரசாட்சி செய்யும் இடத்தில் நிறைவுக்கு குறைவு இல்லை.
No comments:
Post a Comment